சிதம்பரத்தின் நிபந்தனையை ஏற்றுக் கொள்ள முடியாது - ஜெயானந்தமூர்த்தி

விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் மற்றும் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு தயாராகவே உள்ளனர். ஆனால் இந்திய உள்துறை அமைச்சரின் நிபந்தனையை ஏற்றுக் கொள்ள முடியாது என த.தே.கூ. மட்டு மாவட்ட பா.உ. எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முதலில் ஆயுதங்களை களைய வேண்டும் என்ற இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரத்தின் நிபந்தனையை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் இந்தியாவில் வைத்து கூட்டமொன்றில் தெரிவித்த கருத்துத் தொடர்பாக லண்டன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஜெயானந்தமூர்த்தி பா.உ. மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜெயானந்தமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் பேச்சு வார்த்தை நடத்த இந்தியா நடுநிலையாளராக கடமையாற்ற முன்வருவதாகவும் ஆனால் இதற்கு முன்னர் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கழைய வேண்டுமென இந்திய அமைச்சர் பா.சிதம்பரம் கூட்மொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மத்தியஸ்தத்தை நாம் வரவேற்கின்றோம். ஆனால் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கழைய வேண்டுமென அவர் நிபந்தனை விதிப்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் பாதுகாப்புக்காகவும் தமிழினத்தின் உரிமையை வென்றெடுப்பதற்குமே ஆயுதத்தைத் தூக்கியுள்ளனர்.

அதுபோன்று தமிழ் மக்கள் தங்களது பாதுகாப்பு என்பது விடுதலைப் புலிகளும் அவர்கள் வைத்திருக்கும் ஆயுதமுமே என்பதை பல தடவைகளின் சொல்லியுள்ளனர். இந்த நிலையில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கழைய வேண்டுமென இந்திய அமைச்சர் கூறும் கூற்றை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வரை விடுதலைப் புலிகள் ஆயுதம் கழைய வேண்டுமென யார் கூறினாலும் அது அர்த்தமற்றதாகவே அமையும். இந்த ஆயுத ஒப்படைப்பு என்ற விடயம் தமிழீழ போராட்ட வரலாற்றில் புதிய விடயமல்ல. இது தமிழ் மக்களுக்கு இந்தியாவின் மூலமாக கடந்த காலத்தில் நல்ல பாடத்தையும் கற்றுத் தந்தது என்பதை எவரும் மறந்துவிட முடியாது.

கடந்த 1987 ஆம் ஆண்டில் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா விடுதலைப்புலிகளின் ஆயுதத்தைக் கழைந்தது. அதன் பின் நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப் புலிகளுடன் இந்திய சமாதானப்படை போர் புரிந்தது. இந்த ஒப்பந்தமும் ஆயுதக்களைவும் தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்தை நசுக்குவதற்கு இந்தியா போட்ட திட்டமாகும்.

ஆனால் இதில் விடுதலைப் புலிகள் பல சவால்களுக்கு மத்தியில் வெற்றி பெற்றனர். அப்படியான ஒரு திட்டத்தை இந்தியா செயல்படுத்த மீண்டும் முனைகின்றது. தற்போது மிகமோசமான போரை சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மீது நடத்தி வருகின்றது. இதற்கு இந்தியாவும் துணை போகின்றது.

இப்போரினால் தினமும் நூற்றுக் கணக்கில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இந்தியா போரை நிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதை விடுத்து விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கழைய வேண்டுமென கூறுவது ஒரு தலைப்பட்சமான நடவடிக்கையாகும்.

எனவே இந்தியா பேச்சு வார்த்தை நடத்த மத்தியஸ்தம் வகிக்க முன்வருவதானால் போரை நிறுத்துமாறு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமே தவிர விடுதலைப்புலிகளுக்கு நிபந்தனை விதிப்பது ஆரோக்கியமானதாக அமையாது. என அந்த செவ்வியில் ஜெயானந்தமூர்த்தி எம்.பி தெரிவித்துள்ளார்.


Comments