வன்னியில் 37 தினங்களில் 2683 தமிழர்கள் படுகொலை, 7241 தமிழர்கள் காயம் - ஐ.நா.ச மனித உரிமை அமைப்பு

வன்னியில் 37 தினங்களில் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களினால் 2683 தமிழர்கள் படுகொலை, 7241 தமிழர்கள் காயமடைந்தள்ளதாக ஐகிய நாடுகளின் சபையின் மனித உரிமை அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கையில் போர் நடக்கும் இடங்களில் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த ஜனவரி 28 ந் தேதியில் இருந்து இந்த மாதம் 7 ந் தேதி வரை சிறிலங்கா படையினரின் வான், எறிகணைத் தாக்குதல்களினால் 2683 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 7241 தமிழர்கள் காயம் அடைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் ஜனவரி மாதம் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பகுதி இருந்தது. இப்போது 45 சதுர கிலோ மீட்டராக குறைந்துள்ளது.

இந்த பகுதிக்குள் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குறுகிய நிலப்பரப்புக்குள் நெருக்கமான அளவில் மக்கள் வசிப்பதால் உயிரிழப்பதன் எண்ணிக்கை அதிகமாகும்.

முன்பு தினமும் சராசரியாக 33 தமிழர்கள் பலினார்கள். தற்போது 63 ஆக அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் காயம் அளவு குறைந்துள்ளது. முன்பு 184 பேர் காயம் அடைந்தனர். இப்போது 145 பேர் காயம் அடைகின்றனர்.

45 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் 14 சதுர கிலோ மீட்டர் பகுதி போர் இல்லா பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கேயும் அதிக அளவில் தாக்குதல் நடக்கிறது. போரில் பலியாகிறவர்களில் 3 ல் 2 பங்கினர் இங்கு நடக்கும் குண்டு வீச்சில் தான் உயிரை இழக்கிறார்கள்.

இங்குள்ள மக்களுக்கு மாதம் 3,000 மெற்றித் தொன் உணவு பொருள் தேவைபடுகிறது. இதற்கான உணவு பொருள் போர் நடக்கும் பகுதிக்கு வெளியே தயாராக உள்ளது.

ஆனால் அவற்றை உள்ளே கொண்டுவர இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. 500 மெற்றித் தொன் உணவுகளை மட்டுமே அனுமதிக்கிறார்கள். இதனால் போதுமான உணவு கிடைக்கவில்லை. குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments