புதுக்குடியிருப்பில் நான்கு டிவிசன் சிறிலங்கா படையினரின் மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 450 பேர் பலி; 1,272 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பின் முன்னணிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் நான்கு டிவிசன் படையினரின் மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படைத்தரப்புக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளை மைய வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் தெரிவித்ததாவது:

தமிழீழ விடுதலைப் புலிகளின் பலத்தை முடித்து விட்டதாக பெரும் பரப்புரையை சிறிலங்கா படைகள் மேற்கொண்டு 'இறுதி நடவடிக்கை' என்ற பெயரில் மார்ச் முதலாம் நாள் தொடக்கம் பாரிய எடுப்பிலான முன்நகர்வுகளை சிறிலங்கா படையினர் மும்முனைகளில் மேற்கொண்ட நிலையில் அவை யாவும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பின் தென்பகுதியில் மந்துவில்-குழந்தையேசு கோவிலடி-பாண்டியன்வெட்டை ஆகியன உட்பட்ட மும்முனைகளில் சிறிலங்கா படையினரின் கொமாண்டோக்களைக் கொண்ட 53 ஆம் டிவிசன், 58 ஆம் டிவிசன், இடுபணிப் படையணி - 03 (Task force - 03), இடுபணிப் படையணி - 08 ஆகியன பெரும் வலுவுடன் போர்க்கல வளத்துடன் மேற்கொண்ட முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன.

இதில் சிறிலங்கா படைத்தரப்பில் நேற்று வரை 450 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 1,272 பேர் காயமடைந்துள்ளனர்.

பெருமளவு படைக்கலங்களும் படையினரின் உடலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாள்தோறும் 50-60 வரையான படையினர் கொல்லப்பட்டு வருகின்றனர். சிறிலங்கா தரைப்படையின் 53 ஆம், 57 ஆம், 58 ஆம் டிவிசன், இடுபணிப் படையணி - 02, இடுபணிப் படையணி - 03, இடுபணிப் படையணி - 08 ஆகியன புதுக்குடியிருப்பு பகுதியில் நடவடிக்கையில் ஈடுபடும் நிலையில் விடுதலைப் புலிகள் படையினரின் சகல நடவடிக்கைகளுக்கும் தகுந்த பதிலடியைக் கொடுத்து அவற்றினை முறியடித்து வருகின்றனர்.

தமிழ் மக்களின் நிலங்களை விழுங்கும் சிங்களத்தின் கனவை தவிடு பொடியாக்கும் வகையில் விடுதலைப் புலிகளை தமிழ்மக்கள் பலப்படுத்திக்கொண்டு வருகின்றனர் என சமர்-கட்டளை மைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Comments