இலங்கைக்கு நாங்கள் செல்லத் தயார்: கருணாநிதிக்கு நெடுமாறன் சவால்

தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஈழத் தமிழர்களுக்கு உதவ செல்வதற்குத் தயாராக இருக்கின்றோம். முதலமைச்சர் கருணாநிதி, அதற்குரிய நாளைக் குறிக்கட்டும் என இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கையை நோக்கி இராணுவ அணிவகுப்பு நடத்தட்டுமே! அந்த நாட்டின் அரச தலைவர் ராஜபக்சவை முறியடித்துத் திரும்பட்டுமே! இங்கே யார் குறுக்கே நிற்கிறார்கள்? நாளைக்கே தோணிகளை தயார் செய்யட்டும். அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை. அவற்றில் படைகளை ஏற்றிச் செல்லட்டும். கோழைகளாகிய நாங்கள் கண்கொட்டாமல் அவற்றைப் பார்த்து களிக்கிறோம் கைதட்டி ஜெயகோசம் போடுகிறோம்" என முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

இப்போது இவ்வாறு கூறுபவர் கடந்த காலத்தில் என்ன செய்தார் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். யாழ். மக்களுக்கு உணவு அனுப்பாமல் சிங்கள அரசு பட்டினி போட்ட போது அந்த மக்களுக்கு உதவ 2007 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 12 ஆம் நாள் நாகப்பட்டினம், இராமேஸ்வரம் ஆகிய இடங்களிலிருந்து படகுகள் மூலம் உணவு - மருந்துப் பொருட்களை ஏற்றிச் செல்ல நாங்கள் முயன்ற போது எங்களுக்கு படகுகள் தரக்கூடாதென மீனவர்களை மிரட்டி, எங்களைப் போக விடாமல் தடுத்து கைது செய்தவர் இதே முதலமைச்சர் கருணாநிதி என்பதை அவருக்கு நினைவுப் படுத்துகிறேன்.

இவ்வளவுக்கும் நாங்கள் போர்ப் படைத் திரட்டிச் செல்லவில்லை. மனித நேயத்துடன் எங்கள் சகோதரத் தமிழர்களுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் செல்லத்தான் முயன்றோம்.

அதையே தடுத்தவர், இப்போது படகுகளில் ஏறி நாங்கள் செல்வதற்கு குறுக்கே நிற்கப் போவதில்லை என அவர் கூறுவது உண்மையாக இருந்தால் தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஈழத் தமிழர்களுக்கு உதவச் செல்வதற்குத் தயாராக இருக்கிறோம். முதலமைச்சர் அதற்குரிய நாளைக் குறிக்கட்டும் என அவருக்கு அறைகூவல் விடுக்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments