நலன்புரி நிலையங்கள் ஐ.நாவின் விதிமுறைகளுக்கு முரணானது – பா.உ மனோ

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்கள் அனைத்தும் ஐ.நாவின் விதிமுறைகளுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மனித உரிமைகள் தொடர்பான பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை கொழும்பில் மனித உரிமைகள் தொடர்பான ஊடகவிலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பாரியளவில் இடம்பெற்றுவருவதாக தெரிவித்த அவர், வன்னியில் பொதுமக்கள் நாளாந்த கொல்லப்படுவதாகவும், காயப்படுத்தப்பட்டு திருமலை வைத்தியசாலைக்கு கப்பல் மூலம் கொண்டுவரப்படுவதாகவும தெரிவித்தார்.

இவ்வாறு சிகிச்சை பெற்று குணமடையும் பொதுமக்கள் நலன்புரி நிலையங்களில் அடைத்து வைக்கப்படுவதாகவும் இதனால் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாது சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்கள் அனைத்தும் ஐ.நாவின் உதவியின் கீழ் அமைக்கப்பட்டாலும் அந்த அமைப்பின் எந்த ஒரு விதிகளும் பின்பற்றப்படவில்லை. எனக் குற்றச்hட்டினார்.

மக்கள் சுதந்நதிரமாக நடமாடுவதற்கு அரசு அனுமதி வழங்குவதுடன் இடம்பெயர்ந்து முகாங்களில் தங்கியுள்ளவர்களை பார்வையிடுவதற்கு எமக்கான அனுமதியை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை வன்னிப் பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துள்ள மக்களின் உண்மைத் தொகையை அரசு வெளியிட வேண்டும். அரசாங்கத்தின் தொகைக்கும், ஐ.சி.ஆர்.சி அமைப்பினால் வெளியிடப்படும் தொகைக்குமிடையில் மாறுபாடு உள்ளதாகவும் இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்களுக்கு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள உதயன், சுடரொளி பத்திரிகையின் பிரதான ஆரிசியர் ந.வித்தியாதரனைக் குறிப்பிடலாம்.

வெள்ளைவானில் பட்டப் பகலில் சீருடை அணியாது வந்த ஆயுததாரிகளினால் வித்தியாதரன் கடத்தப்பட்ட மறு நிமிடம் அது கடத்தல் அல்ல கைது என உண்மைக்கு மாறான தகவல்களை அரசு வெளியிட்டது. இது ஒன்றே போது நாட்டின் மனித உரிமை மீறலுக்கான சான்றாகும் என கூறினார்.

Comments