இலங்கையின் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கம் எச்சரிக்கை


இலங்கையின் வடக்கே மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கம் எச்சரித்துள்ளது.

இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே மோதல் இடம்பெறும் பிரதேசங்களில் 150,000 பொதுமக்கள் சிக்கித் தவிப்பதாகவும் அவர்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டியது அவசியம் எனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.

முல்லைத்தீவில் தற்போதுள்ள மனிதாபிமான நிலவரம் மிகவும் மோசமானதெனத் தெரிவித்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஜாக்கியூஸ் டி மையோ, தனது அனுபவத்தில் இவ்வாறானதொரு அனர்த்தத்தைத் தாம் எங்குமே கண்டதில்லை எனவும் கூறியதாக பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

மோதல்களின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் காட்டுப்பகுதியை நோக்கிச் சென்றுள்ளதாகவும் அவர்களுக்கு அங்கு உரிய பாதுகாப்பான தங்குமிட மற்றும் குடிநீர் வசதி போன்றவை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் மோதல் பிரதேசங்களில் இருந்து காயமடைந்த, நோய்வாய்ப்பட்ட சுமார் 2000 பேரை சிகிச்சைகளுக்காக அழைத்து வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

Comments