தமிழீழ ஆதரவுக் கூட்டணியே தமிழகத் தேர்தல் கூட்டணியாகவும் நீடிக்க தமிழகத் தலைவர்களுக்கு வேண்டுகோள் !

தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலையை உறுதியோடு ஆதரிக்கும் கட்சிகள் என பா.ம.க., ம.தி.மு.க., வி.சி.க., ஆகிய மூன்று கட்சிகள் இருக்கின்றன. தமிழீழ விடுதலையை நேரடியாக ஆதரிக்காவிட்டாலும் அம்மக்கள் மீதான இனப் படுகொலை தடுத்து நிறுத்தப்படவேண்டும். அம்மக்களது உரிமைகள் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதில் அக்கறையோடு சமீபத்தில் இ.க.க.வும் முன் வந்துள்ளது. இந்நான்கு கட்சிகளும் ஒன்றுகூடி மேற்கொண்ட முன் முயற்சியில் தற்போது “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்” என்னும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

ஆனால் இது “ஈழ மக்கள் ஆதரவுக்கான கூட்டணி” மட்டுமே என்றும், நிச்சயமாக “தேர்தல் கூட்டணி” அல்ல என்றும் இதன் தலைவர்கள் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருப்பதுடன் வாய்க்கும் போதெல்லாம் பத்திரிகையாளர்களிடமும் அதைத் தெளிவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏன், “ஈழ மக்கள் ஆதரவுக்கான கூட்டணி” “தேர்தல் கூட்டணி யாக” இருந்தால் அதில் என்ன தவறு? அது என்ன பாவச் செயலா? எதற்காக அது ஏதோ பாவச் செயல்போல், அந்த பாவத்துக்கு நாங்கள் ஆளாகமாட்டோம் என்பதுபோல இதன் தலைவர்கள் அடிக்கடி இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று யோசித்தால் இந்த ஈழ ஆதரவுக் கூட்டணியில் இருக்கும் வி.சி.க. தி.மு.க. கூட்டணியில் இருக்கிறது. பா.ம.க. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. ம.தி.மு.க. அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறது. இ.க.க.வும் அப்படியே.

ஆக இப்படி இக்கட்சிகள் ஆளுக்கு ஒரு கூட்டணியில் இருப்பதனாலேயே அந்தக் கூட்டணிக் கட்சிகள் கோபித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே அதாவது “எங்களோடு தேர்தல் கூட்டு வைத்துக் கொண்டு அங்கு என்ன ஈழத்துக்காகத் தனிக் கூட்டணி” என்பதாக மனத்தாங்கல் கொண்டு விடக்கூடாது என்பதற்காகவே இப்படிச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். இதனாலேயே பத்து கட்டளைகள் விதித்து யாரும் எந்தக் கட்சியையும் பற்றியும் பேசக்கூடாது, விமர்சனம் செய்யக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்து வருகிறார்கள்” என்று தெரிகிறது.

அதோடு ஈழத்திற்காக கருணாநிதியும், காங்கிரசும் சேர்ந்து ஒரு கூட்டணி அமைத்த பிறகும் வி.சி.க.வும், பா.ம.க.வும் அதில் போய்ச் சேராமல் இப்படி முந்தைய கூட்டணியிலேயே நீடித்து அதிலேயே இயங்கி வருகிறார்களே, அதேபோல தற்போது ஈழத்திற்காக அதிமுக பட்டினிப் போராட்டம் நடத்தியபிறகும், வைகோ இந்த அணியில் நில்லாமல் பழைய ஈழ ஆதரவு அணியிலேயே நிற்கிறாரே, ஏன் என்கிற கேள்வியும் மக்கள் மத்தியில் எழ, ஆக ஈழம் குறித்த தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியின் கொள்கை பிடிக்காமல், ஈழம் குறித்த அதிமுகவின் நிலை பிடிக்காமல் இருப்பதால்தானே இவர்கள் இப்படித் தனித்த கூட்டணியாக செயல்பட்டு வருகிறார்கள் என்றும் மக்கள் கருதி வருகிறார்கள்.

இப்படி இருக்க ஈழத்துக்காக உருவான இதே கூட்டணியை இப்படியே தேர்தலுக்குமான கூட்டணியாக நீடிக்கச் செய்ய வேண்டியது தானே, இதிலென்ன சிக்கல் என்பதே தமிழக மக்களின் கேள்வி. அதோடு ஈழத்துக்கு ஒரு கூட்டணி, தேர்தலுக்கு ஒரு கூட்டணி என்று வைத்துக் கொண்டிருந்தால், தற்போது தேர்தல் அறிவிப்பு வந்துள்ள நிலையில் எல்லா கட்சிகளும் இந்த ஈழக் கூட்டணியை அம்போ என்று விட்டுவிட்டு தேர்தல் கூட்டணிக்குப் போய் விடுமோ என்றும் மக்கள் கவலையோடு பார்க்கிறார்கள்.

எனவே, இந்தக் குறையைப் போக்க இப்போதிருக்கும் ஈழக் கூட்டணியையே தேர்தலுக்குமான கூட்டணியாக நீடிக்கச் செய்ய வேண்டும் என்பதே பெரும்பான்மையான தமிழக மக்களின் வேண்டுகோள். காரணம் ஈழத்திற்கு ஒரு கூட்டணி, தேர்தலுக்கு ஒரு கூட்டணி என்பது முரண்பாடானது. ஈழ மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் எதிரானது. ஈழத்திற்கான கூட்டணியே தேர்தலுக்குமான கூட்டணி என்பதே முரண்பாடற்றது. ஈழ மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் பயன் தரக் கூடியது. ஆகவே தமிழகத் தலைவர்கள் இதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இப்படி ஈழக் கூட்டணியே தேர்தலுக்குமான கூட்டணி என்றால், மக்கள் இதற்கு ஆதரவு தருவார்களா என்று தலைவர்கள் தயங்கலாம். தமிழகமெங்கும் நடைபெறுகிற ஈழ ஆதரவுப் போராட்டங்களில் இக்கருத்து முன் வைக்கப்படும் போதெல்லாம் மக்கள் அதை ஆரவாரத்தோடு கையொலி எழுப்பி வரவேற்கிறார்கள் என்பதே மக்கள் இதை ஆதரிக்கிறார்கள் என்பதற்கான சான்று. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. தவிர்த்த, இவ்விரு கட்சி களுக்கும் அப்பாற்பட்ட ஒரு கூட்டணி. மத்தியில் காங்கிரஸ், பா.ஜ.க.வைத் தவிர்த்த இவ்விரண்டிற்கும் அப்பாற்பட்ட ஒரு கூட்டணி, இதுவே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

வேண்டுமானால், மக்கள் கருத்தறிய தலைவர்கள், அமைப்புகள், ஊடகங்கள் வழி இதுபற்றி ஓர் கருத்துக் கணிப்பை தமிழகத்தில் நடத் தட்டும். அதன் பிறகு அவர்கள் கருத்தறிந்து வேண்டுமானாலும் இவர்கள் ஒரு முடிவுக்கு வரட்டும். எப்படியோ தமிழீழ மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களது உரிமைகள் மீட்கப் படவேண்டும், அதற்கான குரல் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கவேண்டும் என்பதும், இதன் வழியே தமிழக மக்களின் உரிமைகள் மீட்கப்படவேண்டும், தமிழ்த் தேச எழுச்சிக்கான போராட்டம் வீறு கொள்ளப்படவேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பம்.

இந்த எதிர்பார்ப்பைத் தமிழகத் தலைவர்கள் ஈடேற்ற வேண்டும். இது குறித்து சிந்திக்கவேண்டும். நன்றி.

Comments