தமிழக அரசை சிக்க வைக்குமா 'அதிர்ச்சி' சி.டி...?

'சென்னையில் ரவிக்குமார் என்கிற காவலர் தீக்குளிக்க முயற்சி! காயங்களுடன் காப்பாற்றப்பட்டார்... பொன்னேரியில் குப்புசாமி என்கிற ரிட்டயர்டு எஸ்.ஐ. ஒருவர் தீக்குளிக்க முயற்சி! திருநெல்வேலியில் ரிட்டயர்டு தலைமைக்காவலர் நாராயணசாமி உண்ணாவிரதம்!

மார்ச் 3... சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகில் திடீர் உண்ணாவிரதம்...

சென்னையிலுள்ள பல்வேறு காவலர் குடியிருப்புகளைச் சேர்ந்த சுமார் ஐந்நூறு பெண்கள், தங்கள் குழந்தைகளைச் சுமந்தபடி ஊர்வலம். வக்கீல்களை எதிர்த்து கோஷங்கள் முழங்கின....'

என்ன இதெல்லாம் என்றுதானே கேட்கத் தோன்றுகிறது? வக்கீல்களுக்கும் காவல்

துறைக்கும் அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த வன்முறையை அடுத்து அன்றாடம் பத்திரிகைகளில் வரும் செய்திகள்தான்!

இந்நிலையில், தமிழக மக்களுக்கு ஒரு பெருத்த சந்தேகம். தமிழக அரசு உண்மையில் யார் பக்கம் நிற்கிறது?' என்பதுதான் அது!

இது ஒருபுறம் இருக்க, சென்னை நீதிமன்ற வளாகத்தில் நடந்த விவகாரங்கள் பற்றி விசாரிக்க நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்திருக்கும் நிலையில், காக்கிக்கும் கறுப்பு கோட்டுக்குமான 'டக் ஆஃப் வார்' நிற்பதாகத் தெரியவில்லை!

இந்நிலையில், காவலர் நல சங்கம் என்கிற புதிய சங்கமும் உதித்திருக்கிறது. இதைத் தொடங்கியிருக்கும் முன்னாள் கூடுதல் எஸ்.பி-யான அந்தோணிசாமி (எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோதே இவர் போலீஸ் சங்கம் ஆரம்பித்தவராம்) நம்மிடம்,

''வழக்கறிஞர்கள் என்றால், சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா? போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கச்சொன்னது சுப்ரீம் கோர்ட். முதல் கட்ட டிரான்ஸ்ஃபர் நடவடிக்கை எடுத்துவிட்டார்கள். ஆனால், அதே சுப்ரீம் கோர்ட் சொன்னபடி வழக்கறிஞர்கள் மீண்டும் பணிக்குச் சென்றார்களா? அப்படியென்றால், வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டையும் விட உயர்ந்தவர்களா? அவர்களை நம்பி வழக்குகளைக் கொடுத்த அப்பாவி மக்கள் எங்கே போவார்கள்? இனிமேலும், வழக்கறிஞர்கள் குறித்து வெறும் 'அறிவுரை'யை மட்டும் தருவதை சுப்ரீம் கோர்ட் தவிர்த்து, அவர்களின் அராஜகங்களைக் கண்டிக்க வேண்டும். கடந்த 8 நாட்களாக உயர் நீதிமன்ற சாலையை மறித்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்தபடி போராட்டம் என்கிற பெயரில் போலீ ஸாரையும் அவர்களின் குடும்பத்தினரையும் மைக் கட்டி, திட்டி வருகிறார்கள் வழக் கறிஞர்கள். சட்டத்தை மதிக்கவேண்டிய அவர்களே அத்துமீறி நடக்கிறார்கள். இனி நாங்கள் அவர்களின் அத்துமீறல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை! எங்கள் பின்னால், தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. சங்கம் ஆரம் பிக்கும் விஷயத்தில் பிரிந்து கிடந்த எங்களை ஒன்றுபடுத்தி இருக்கிறார்கள் வழக்கறிஞர்கள். எங்களின் முழு பலத்தை வெளியுலகுக்குக் காட்டுவதற்காகத்தான் எங்கள் தரப்பிலான போராட்டம். உயரதி காரிகள் கேட்டுக்கொண்டதால், எங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டுக் கலைகிறோம். தொடர்ந்து வழக்கறிஞர்கள் எங்களைச் சீண்டினால், அடுத்தகட்டப் போராட்டம் குறித்து அறிவிப்போம்!'' என்றார் அந்தோணிசாமி.

சென்னை போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ''எங்கள் மீது கல்லெறிந்தவர்கள், காவல் நிலையத்தைத் தீ வைத்துக் கொளுத்தியவர்கள் ஆகியோர் மீது சட்டப்படி என்ன நடவடிக்கை எடுத்தார்கள் நீதித் துறையினர்? இதற்கு முன்பு, 26.11.08 அன்று சில வழக்கறிஞர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே கொண்டாடவில்லையா? 05.02.09 அன்று வைகோ, ஜி.கே.மணி போன்ற அரசியல் பிரமுகர்கள் கோர்ட் வளாகத்தில் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருந்தார்களே... கோர்ட்டுக்கு வெளியே, தீக்குளித்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கலாட்டா செய்தார்களே... ஒரு அரசு பஸ்ஸை வழிமறித்து மருத்துவமனைக்குத் திருப்பினார்களே... இலங்கைப் பிரச்னையை முன்னிறுத்தி, போராட்டம் என்கிற பெயரில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் எத்தனை? இந்த அத்துமீறல்களில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் வெகு சிலரே! அவர்கள் மீது இதுவரை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவிடாமல் இருப்பதுதான் மேன்மேலும் அவர்களை வன்முறையைக் கையிலெடுக்க வைக்கிறது. ஒரு தரப்பு மீது நடவடிக்கை என்கிறபோதுதான், எங்களுக்கெல்லாம் வருத்தமாக இருக்கிறது!'' என்கிறார்.

ஆனால், வழக்கறிஞர்கள் தரப்போ போலீசுக்கு எதிராகப் பொங்கிக் கொண்டிருக்கிறது. ஹைகோர்ட் தாக்குதல் விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக டெல்லியிலிருந்து வந்திருந்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவிடம் போலீஸ் தரப்பின் வெறியாட் டங்களை சி.டி-யாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் வழக்கறி ஞர்கள் தரப்பினர். முக்கிய வழக்கறிஞர்களான பால் கனகராஜ், பிரபாகரன், கருப்பன், 'யானை' ராஜேந்திரன் போன்றோர் தங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்லிவிட்டு கூடுதல் ஆதாரமாக சில சி.டி-க்களையும் ஸ்ரீகிருஷ்ணாவிடம் ஒப்படைத்திருக்கிறார் கள்.

இந்நிலையில், ''கோர்ட்டில் போலீஸ் தாக்குதல் நடத்தியபோது பதிவான பல காட்சிகள் அந்த சி.டி-க்களில் இருக் கின்றன. சில போலீஸார் நீதிபதியின் சேம்பரைத் தேடி வந்து தாக்குதல் நடத்திய காட்சிகள் அப்பட்டமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில அதி காரிகள் முக்கிய வழக்கறிஞர்களைக் குறிவைத்துத் தாக்கியதும் பதிவாகியிருக்கிறது. பிரதான போலீஸ் அதிகாரி ஒருவர், நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தனை லத்தியால் ஓங்கி அடிக்கும் காட்சியும் இருக்கிறது. முக்கியமான பதிவாக கோர்ட் வளாகத்துக்குள் அதிரடிப் படையும், கமாண்டோ படையும் முன்கூட்டியே வரவழைக்கப்பட்டிருந்தது, படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. இதை வைத்து, 'போலீஸ் நடத்திய தாக்குதல் திட்டமிடப்பட்டதுதான்' என நிரூபிக்க முடியும் என நம்புகிறது வழக்கறிஞர்கள் தரப்பு...'' என்கிறார்கள் முழு விசாரணையையும் கவனித்த நடுநிலையாளர்கள் சிலர்.

இதற்கிடையில் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவிடம் ஹைகோர்ட் நீதிபதிகள் ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன், ஜோதிமணி, சுகுணா, சுதாகர் ஆகியோரும் தங்கள் மனக்குமுறல்களைச் சொல்லியிருக்கிறார்கள். போலீஸார் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களை நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவிடம் சுகுணா காட்டியபோது, கிருஷ்ணாவுக்கே ஒரு மாதிரியாகிவிட்டது.

மொத்தத்தில் அஸ்திரம் இனி ஸ்ரீகிருஷ்ணாவின் கையில். இதற்கிடையில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் வழக்கை விசாரிக்கத் தொடங்கி இருக்கும் சென்னை உயர்நீதி மன்றம், 'ஆரம்பத்தில் போடப்பட்டிருக்கும் எஃப்.ஐ.ஆரை மாற்றி, வழக்கறிஞர்கள் கொடுத்திருக்கும் புகாரின் அடிப்படையில் புதிய எஃப்.ஐ.ஆர் போடப்பட வேண்டும்' என போலீசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இதையடுத்து அரசின் உயர்மட்ட அதிகாரிகளே வழக்கு வம்பு என அல்லாடுகிற சூழல் உருவாகவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

'எங்கே அந்த அதிகாரி?'

முதல்வர் கருணாநிதி ஹைகோர்ட் மோதல் குறித்து விசாரித்தபோது, அவரிடமும் ஒரு சி.டி. தரப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்த முதல்வர்... ஸ்பாட்டில் இருந்த ஒரு அதிகாரியின் பெயரைச் சொல்லி, 'அவர் எங்கே?' எனக் கேட்டிருக்கிறார். நாற்பது நிமிஷங்களுக்கும் மேலாக அந்த சி.டி. ஓடி முடியும் வரை அந்த முக்கிய அதிகாரி கண்ணிலேயே படவில்லையாம். ஈழ விவகாரத்துக்காக முத்துக்குமார் தீக்குளித்து இறந்தபோது, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் போலீசுக்கும் ஈழ ஆர்வலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போதும் சம்பவ இடத்தில் இருந்த அந்த அதிகாரி காரை விட்டுக்கூட கீழே இறங்காமல் கப்சிப்பாக இருந்தாராம். இது குறித்தும் முதல்வருக்குச் சொல்லப்பட, விரைவிலேயே அந்த அதிகாரி தூக்கி அடிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்று அவசரமாக தகவல் பரப்பி வருகிறது உளவுத்துறை.


இது போலீஸ் சி.டி!

வழக்கறிஞர்கள் தரப்பு புகார் சி.டி-க்கு பதிலடியாக ஸ்ரீகிருஷ்ணாவிடம் போலீஸ் தரப்பும் சில சி.டி-க்களைக் கொடுத்திருக்கிறது. காவல் நிலைய தீ வைப்பு சம்பவத்தின்போது, ஒரு நபர், போலீஸ் வயர்லெஸ்ஸைத் திருடிக்கொண்டு ஓடும் காட்சி பதிவாகியுள்ளது. 'அவர் வழக்கறிஞராக இருப்பாரோ?' என்ற விசாரணையில் இறங்கியிருக்கிறது போலீஸ். கலாட்டாவின்போது, நீதித் துறை பிரமுகர் ஒருவர்தன் தலையில் அடிபட்ட நிலையிலும் 'போலீஸார் மீது கற்களை வீசாதீர்கள். அவர்கள் பாதுகாவலர்கள்' என்று பேசும் காட்சி, அவருடைய உதவியாளர், 'விடுதலைப் புலிகள் ஆதரவு ஆட்கள் அவர்கள்' என்று சொல்லும் காட்சி... இவற்றையெல்லாம் தனியார் டி.வி. நிறுவனங்களிடமிருந்து கேட்டுவாங்கி, தொகுத்து நீதிபதியிடம் போலீஸார் கொடுத்திருக்கிறார்கள்.

நீதிமன்ற வளாகத்தில் சமீப காலத்தில் நடந்த போராட்டங்கள் மற்றும் வேறு சில சம்பவங்களைப் பட்டியல் போட்டு, 'இது மாதிரி சட்டமீறல் சம்பவங்கள் இங்கே நடக்கின்றன. பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உள்ளது' என்று நீதித் துறையின் மேலிடத்திடம் சென்னைபோலீஸ் கமிஷனரே கடிதம் அனுப்பி நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினாராம். அதன் பிறகும் நடவடிக்கை இல்லையாம். இது குறித்த விவரங்களும் போலீஸ் தரப்பு நியாயங்களாக ஸ்ரீகிருஷ்ணாவிடம் சொல்லப்பட்டிருக்கிறது.

''தவறு நேர்ந்தது உண்மைதான்!''

வழக்கறிஞர் தரப்பு விசாரணைக்குப் பிறகு, போலீஸ் தரப்பு அதிகாரிகள் ஸ்ரீகிருஷ்ணாவை சந்தித்தார்கள். டி.ஜி.பி-யான ஜெயின், சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யான ராஜேந்திரன், உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி-யான அனூப் ஜெய்ஸ்வால், உளவுத் துறை ஐ.ஜி-யான ஜாஃபர் சேட் உள்ளிட்ட அதிகாரிகள் ஸ்ரீகிருஷ்ணாவிடம் வழக்கறிஞர்கள் ஏற்படுத்திய இக்கட்டுகள் குறித்துச் சொன்னார்கள். அவர்களிடம், 'போலீஸார் கோர்ட்டுக்குள் யாரைக் கேட்டுப் போனார்கள்? தாக்குதலுக்கு யாரிடமிருந்து உத்தரவு வந்தது?' என குடைந்தெடுத்துவிட்டாராம் ஸ்ரீகிருஷ்ணா.

அவரின் கேள்விகளுக்கு போலீஸார் சில புள்ளிவிவரங்களை பதிலாகச் சொன்னார்கள். ''கடந்த இரண்டு மாதங்களில் எட்டு நாட்கள் மட்டுமே கோர்ட் நடந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான வழக்குகள் விசாரணைக்கு வழியின்றிக் கிடக்கின்றன. ஈழப்பிரச்னை சூடுபிடிக்கத் தொடங்கிய நாளிலிருந்தே மறியல், போராட்டம் என்று வழக்கறிஞர்கள் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். சுப்ரமணியன் சுவாமி கோர்ட்டில் நீதிபதியின் கண் முன்னாலேயே தாக்கப்பட்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து மக்களுக்கு 'போலீஸ் இருக்கிறதா... இல்லையா?' என்கிற சந்தேகமே வந்துவிட்டது. சுவாமி விவகாரம் நடந்து இரு தினங்கள் கழித்துத்தான் அவர் மீது வழக்கறிஞர் ஒருவர் சாதிப் பெயரைச் சொல்லி திட்டிவிட்டதாகப் புகார் கொடுத்தார். அந்தப் புகாரையும் முறைப்படி பதிவு செய்தோம். ஆனால், சுவாமி கொடுத்த புகாரில் சிக்கியவர்களை விசாரணைக்கு அழைத்தோம். அவர்கள்தான் 'கோர்ட்டுக்கே வாருங்கள். நாங்கள் ஆஜராகிறோம்' என்றார்கள். இப்படி திட்டமிட்டே எங்களை வம்பில் மாட்ட வைத்துவிட்டார்கள்...'' என்றார்களாம். அவற்றையும் ஸ்ரீகிருஷ்ணா பதிவு செய்துகொண்டாராம்.

போலீஸ் அதிகாரிகளுக்கு அடுத்தபடியாக ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் விசாரணைக்கு, தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, உள்துறைச் செயலாளர் மாலதி ஆகியோரும் ஆஜரானார்கள். வழக்கறிஞர்கள் குறித்த விவகாரங்களை ஸ்ரீகிருஷ்ணாவிடம் விளக்கிச் சொன்னவர்கள், 'இக்கட்டைத் தவிர்க்க நடத்தப்பட்டதாக இருந்தாலும் போலீஸார் தாக்குதலை தவிர்த்திருக்கலாம்' என்பதுபோல சொன்னார்களாம்.


'இரண்டு அமைச்சர்கள் போட்ட உத்தரவு!'

ஸ்ரீகிருஷ்ணா கமிஷனிடம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் 'யானை' ராஜேந்திரனும் பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். அவரிடம் பேசினோம்.

''சம்பவம் நடந்த அன்றைக்கு நானும் கோர்ட்லதான் இருந்தேன். பயங்கரக் கலவரமாக இருந்ததால், உடனடியா நீதிபதி சுதாகர்கிட்ட சொன்னேன். அவர் தலைமை நீதிபதியிடம் சொல்ல... மூவரும் கலவரம் நடந்துட்டிருந்த இடத்துக்குப் போனோம். இதையெல்லாம் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாகிட்ட பதிவு பண்ணியிருக்கேன்.

ஆர்.ஏ.எஃப். என்று சொல்லப்படும் ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸைப் பயன்படுத்தி போலீஸார் பயங்கரமான தாக்குதலை நடத்தினார்கள். அந்த ஃபோர்ஸை பயன்படுத்த சில சட்ட விதிகள் இருக்கிறது. அதாவது கூட்டமாகவோ, கலவரம் நடக்கலாம் என கருதப்படும் இடத்திலோ முதலில் மைக் மூலமாகக் கூட்டத்தினரைக் கலைந்து போகச்சொல்லி அறிவிப்பு கொடுக்கவேண்டும். அதுவும் போலீஸ் உயரதிகாரிகள் முன்பு அவர்கள் உத்தரவுப்படிதான் ஆக்ஷன் நடக்கவேண்டும். கோர்ட்டுக்குள் சென்று அங்குள்ள பொருட்களை உடைக்கவோ ஓடி ஒளிந்துகொண்டவர்களைத் துரத்திப்போய் அடிக்கவோ ரேபிட் ஆக்ஷன் ஃபோர்சுக்கு அதிகாரம் இல்லை. அதேபோல் கோர்ட்டுக்குள் அது நுழைவதென்றால், தலைமை நீதிபதியிடமோ பதிவாளரிடமோ அனுமதி வாங்கியிருக்கவேண்டும். அதுவும் இல்லை. இந்த அஃபிடவிட்டையும் ஸ்ரீகிருஷ்ணாவிடம் கொடுத்திருக்கிறேன்.

இது கூட்டுத் திட்டமிட்டு நடந்த சதி என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இதற்குப் பின்னணி உண்டு. உயர் நீதிமன்றத்தில் தர்மராவ்னு ஒரு நீதிபதி இருக்கிறார். ஆந்திராக்காரர். சேலம் அருகில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில் அப்பா, அம்மா, மகள் மூணு பேரிடம் ஒரு புகார் சம்பந்தமாக போலீஸ் விசாரித்திருக்கிறது. அதோடு, டார்ச்சரும் செய்திருக்கிறது. அதைத் தாங்க முடியாத அப்பா தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இரண்டு மாதத்துக்கு முன்னால் நடந்தது. 'பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு நாலரை லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்கவேண்டும். அந்தத் தொகையை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பணிபுரிந்த போலீஸ்காரர்களின் சம்பளத்தில் மாதா மாதம் பிடித்தம் செய்யவேண்டும்!' என்று நீதிபதி தர்மராவ் தீர்ப்பு வழங்கினார். இது காவல் துறைக்கு கடும் அதிர்ச்சி. காரணம், இதுவரை போலீஸா£ர் சம்பளத்தைப் பிடித்தம் செய்யச்சொல்லி எந்த நீதிபதியும் தீர்ப்பு வழங்கியதில்லை. இதை இப்படியே விடக்கூடாது என்று போலீஸில் இருக்கும் சிலர் கூடி பிளான் பண்ணி நீதித் துறையை அச்சுறுத்த இப்படிச் செய்திருக்கிறார்கள்.

இது மட்டுமின்றி இலங்கைப் பிரச்னையில அதிகமாகக் குரல் கொடுத்ததும் வழக்கறிஞர்கள்தான். இதுவும் தமிழக அரசுக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது. அதனால்தான் இப்படி ஒரு தாக்குதல் சம்பவத்தை நடத்தச் சொல்லி போலீசுக்கு வாய்மொழி உத்தரவு போட்டிருக்கிறது. இந்த உத்தரவுக்குக் காரணம், நிச்சயம் தமிழக முதல்வர் இல்லை. அவர் ஹாஸ்பிடலில் இருக்கும் சமயம் பார்த்து இரண்டு தமிழக அமைச்சர்கள் இப்படி ஒரு உத்தரவைப் போட்டிருக்கிறார்கள். இதையும் என்னோட அஃபிடவிட்ல குறிப்பிட்டிருக்கேன்!'' என்றார் ராஜேந்திரன்.

- கே.ராஜாதிருவேங்கடம்

- வி.அர்ஜுன், கிருஷ்பா, இரா.சரவணன்
படங்கள்: வி.செந்தில்குமார்,
ஆ.வின்சென்ட் பால், வீ.நாகமணி

Comments