இராணுவம் தாக்குதலை நிறுத்திய பின்னரே பேச்சு: தமிழர் தேசிய கூட்டமைப்பு பதில்!

வன்னிப் பகுதியில் சிறிலங்க இராணுவம் நடத்திவரும் தாக்குதலை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை உறுதி செய்த பின்னரே பேச்சுவார்த்தைக்கு வரமுடியும் என்று சிறிலங்க அதிபர் ராஜபக்சவிற்கு தமிழர் தேசிய கூட்டமைப்பு பதிலளித்துள்ளது.

‘இலங்கையில் தற்பொழுது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க வாருங்கள்’ என்று தமிழர் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்தார்.

இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்த இந்த சந்திப்பில் தாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தம் தெரிவித்தார்.

தங்களுடைய முடிவிற்கான காரணங்களை விளக்கி ஒரு அறிக்கையை வெளியிட்ட தமிழர் தேசிய கூட்டமைப்பு, முதலில் வன்னிப் பகுதியில் சிறிலங்க இராணுவம் நடத்திவரும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.

1. சிறிலங்க இராணுவம் நடத்திவரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்.

2. தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறி அங்கு சிறிலங்க இராணுவத்தின் கடும் தாக்குதலில் பாதிக்கபட்டுவரும் 3 இலட்சம் மக்களுக்குத் தேவையான உணவு, மருந்து, கூடார வசதிகள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும்.

3. ஐ.நா.வின் அமைப்புகள், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியன உள்ளிட்ட சர்வதேச தொண்டு அமைப்புகளை அங்கு செல்லவும், சுதந்திரமாக பணியாற்றவும் அனுமதித்து அதன் மூலம் அம்மக்களின் மனிதாபிமான தேவைகளை நிவர்த்தி செய்திடல் வேண்டும்.

இம்மூன்று நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு ஒரு குரலில் சர்வதேச சமூகம் சிறிலங்க அரசை வலியுறுத்த வேண்டும். அங்கு நிலவும் துயரமான மனிதாபிமான நிலை மேலும் மோசமடைந்து மானிடப் பேரழி ஏற்படுவதற்கு முன்னர் அதனை தடுத்து நிறுத்திய பின்னரே அரசியல் ரீதியான பேச்சுகளுக்கு அர்த்தம் இருக்க முடியும் என்று தமிழர் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது.

வன்னிப் பகுதியில் நிலவும் துயரமான சூழல் குறித்தும் தமிழர் தேசிய கூட்டமைப்பு அந்த அறிக்கையில் விரிவாக கூறியுள்ளது:

1. சிறிலங்க அரசால் ‘பாதுகாப்பு பகுதி’ என்று குறிப்பிடப்பட்ட பகுதிகளில் இருந்து கனிசமான தூரத்தில்தான் சிறிலங்க இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே பல்வேறு முனைகளில் போர் நடைபெற்று வருகிறது என்று கூறப்பட்ட நிலையிலும், பாதுகாப்பு பகுதிகளின் மீது சிறிலங்க இராணுவமும், விமானப் படையும் நடத்தும் குண்டு வீச்சில் ஒவ்வொரு நாளும் 40 முதல் 50 பேர் வரை அப்பாவி மக்கள் கொல்லப்படுவது மட்டுமின்றி, பல நூற்றுக்கணக்கானோர் படுகாயமுற்று வருகின்றனர்.

2. தங்கள் வாழ்விடங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் 3 இலட்சம் பேர் இப்பகுதியில் இருந்தும், அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் என்று எதையும் அங்கு அனுமதிக்காதது மட்டுமின்றி, கடுமையான மனித அவலம் அரங்கேறும் அப்பகுதியில் இயங்கிவந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் அரசு வலிந்து வெளியேற்றியுள்ளது.

3. அங்கு நிலவும் உண்மையான சூழ்நிலையை வெளியுலகிற்கு கொண்டு செல்ல எந்த ஊடகமும் அனுமதிக்கப்படவில்லை.

4. வன்னி்ப் பகுதியில் ஒரு மருத்துவமனை கூட இன்று இல்லை. அரசப் படைகளின் குண்டு வீச்சில் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. மருந்துப் பொருட்களுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. வன்னிப் பகுதியில் இன்னமும் இருந்துக்கொண்டிருக்கும் சில மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு சற்றும் செவிசாய்க்கப்படவில்லை. மிகக் குறைந்த நிலப் பகுதியில் அதிகமான மக்கள் இருப்பதாலும், சத்தான உணவேதும் இல்லாததாலும், போதுமான கழிப்பறை வசதியின்மையாலும் பல்வேறு நோய்கள் பரவியதும், அதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுவருகின்றன. சாதாரண மருந்துகளை கொண்டு குணப்படுத்தக் கூடிய நோய்களால் பீடிக்கப்பட்ட மக்கள் மாய்ந்து போகின்றனர்.

5. பெண்களுக்கென்று தனித்த கழிவறை வசதிகள் இல்லை. கழிவறை கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்களைக் கூட அரசுப் படைகள் அனுமதிப்பதில்லை.

6. எந்தவிதமான வாழ்விட வசதியுமின்றி 60,000 குடும்பங்களைச் சேர்ந்த 2,40,000 பேர் தார்பாலின் கூடாரமிட்டு வெட்ட வெளியில் வாழ்ந்து வருகின்றனர். கடும் வெப்பம் நிலவுவதால் தார்பாலின் கூடாரத்திற்குள் வாழ முடியாத நிலை உள்ளது.

7. வன்னிப் பகுதியி்ல் இப்படி 3 இலட்சம் மக்கள் துன்புறுகையில் அங்கு 70,000 பேர்தான் உள்ளனர் என்று அரசு கூறுகிறது. அப்பகுதியில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருக்கின்றனர் என்று ஐ.நா.வும் மற்ற சர்வதேச அமைப்புகளும் கூறிவரும் நிலையில் இவ்வாறு குறைத்துக் கூறி, குறைவான உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை மட்டுமே அரசு அனுமதிப்பதால் உணவின்றி பட்டினியாலும் மக்கள் உயிரிழந்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் பலரும் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

8. வன்னிப் பகுதியில் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. வண்டிகளில்தான் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. அதுவும் இராணுவத்தின் தொடர்ந்த குண்டு வீச்சால் மக்களை அடைவதில்லை. தூய குடிநீர் கிடைக்காமை அவர்களின் வாழ்வை மேலும் துயரமாக்கியுள்ளது.

9. அரசப் படைகளின் தொடர்ந்த தாக்குதலால் இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து இதுவரை 3,000 அப்பாவிகளுக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர். 8,000 பேருக்கு மேல் காயமுற்றுள்ளனர். அப்பாவி மக்கள் வாழும் பகுதிகளை திட்டமிட்டே இராணுவம் தாக்கி வருகிறது என்பதற்கு இது ஆதாரமாகும். அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும், மருந்துகளையும் கொண்டு செல்ல அனுமதி மறுப்பது ஒரு போர் யுக்தியாகவே அரசப் படைகள் கடைபிடிக்கின்றன என்பதை உறுதிப்படுத்துகிறது.

“இப்படிப்பட்ட சூழலில்தான் தங்களுடைய அழைப்பு எங்களுக்கு வந்துள்ளது. தமிழர்களின் அரசியல் கூட்டமைப்பான நாங்களும் எமது மக்களும் முதலில் மனிதாபிமான சிக்கலை தீர்த்து வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்குப் போர் நிறுத்தம் அவசியம், அதன்பிறகே பேச்சுவார்த்தை நடத்துவது அரசியல் ரீதியாக அர்த்தமுள்ளதாக இருக்கும்” என்று கூறியுள்ள தமிழர் தேசிய கூட்டமைப்பு, “இதுநாள்வரை தமிழர்களது அரசியல் அமைப்பு புறக்கணித்து வந்தாலும், தற்பொழுது அவர்களின் அரசியல் பிரதிநிதிகள் நாங்கள்தான் என்பதை அங்கீகரித்து எங்களுடன் பேச முன்வந்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்” என்று கூறியுள்ளது.

“தமிழர்கள் பிரச்சனைக்கு ஒப்புக்கொள்ளத்தக்க, நிலையான அரசியல் தீர்வை காண முற்படும் நடவடிக்கைக்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்போம்” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த அறிக்கையில் தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, என். சிறிகாந்தா, சுரேஷ் பிரேமசந்திரன், ஜி.ஜி. பொன்னம்பலம் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

Comments