அடுத்த குறி வைகோ ???

ந்தமுறை அ.தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசாரம் தொடங்கும்போது வைகோ `உள்ளே' இருப்பார். என்.எஸ்.ஏ. எனப்படும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரை உள்ளே தள்ள எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன'' என்று அதிரடித் தகவலை அள்ளி வீசியிருக்கிறார்கள் கோவை உளவுத்துறை போலீஸார். அந்த அளவுக்கு கோவையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலைப்புலி ஆதரவு கோஷங்களை விளாசியிருக்கிறார் வைகோ.

ம.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் சீமான் என தமிழகத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது. இந்நிலையில் நாஞ்சில் சம்பத், கொளத்தூர் மணி, சீமான் ஆகியோரின் கைதுக்காக தமிழக அரசைக் கண்டித்து, கோவையில் கடந்த 20-ம்தேதி காலை பத்து மணிக்கு வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தது ம.தி.மு.க. அதற்கு ஒருவாரம் முன்பு, ம.தி.மு.க. அவைத்தலைவர் மு.கண்ணப்பன் அவரது ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு வெளியேறி விட்டதால், இந்த ஆர்ப்பாட்டம் நடக்குமா? அப்படி நடந்தாலும் கூட்டம் வருமா? என்ற கேள்வி கிறுகிறுத்து வந்தது.

அதோடு, ``கோவை ஆர்ப்பாட்டத்தில் வைகோ வில்லங்கமாக எதுவும் பேச மாட்டார். அம்மாவுக்கு அடுத்தபடி கூட்டணியில் உள்ள ஒரே நட்சத்திரப் பேச்சாளர் அவர்தான். `வைகோ எப்போது வில்லங்கமாகப் பேசுவார்? கைது செய்து என்.எஸ்.ஏ.வில் உள்ளே போடலாம்' என கருணாநிதியின் போலீஸார் காத்திருக்கும் நிலையில், அம்மாவும் அவரை எச்சரித்திருப்பார்'' என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. வட்டாரங்களிடம் இருந்தது.

இதற்கு மறுபுறமாக ம.தி.மு.க.வினரோ, ``அதெல்லாம் கிடையாது. எங்கள் தலைவர் வைகோ, வழக்கம் போலவே விடுதலைப்புலிகள் ஆதரவுப் பிரசாரத்தைச் செய்வார். `கண்ணப்பன் போனதால் கோயமுத்-தூரில் கட்சியே போய்விட்டது!' என்று தி.மு.க.வினர் செய்யும் விஷமப் பிரசாரத்தை அவர் முறியடிப்பார்'' என உறுதிபட சொல்லிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து,ஆர்ப்பாட்டம் நடக்க இருந்த காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டல் முன்பு, கடந்த 20-ம்தேதியன்று கையில் வீடியோ கேமராக்கள் சகிதம் வந்து குவிந்தனர் உளவுப்பிரிவு போலீஸார். பல்வேறு இடங்களில் அவர்கள் உஷாராகக் காத்திருந்தனர். காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், பதினொரு மணிக்குத்தான் ஈரோட்டில் இருந்து வந்து சேர்ந்தார் வைகோ. அதற்குள் அங்கே இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கூடிவிட்டனர். `கண்ணப்பன் போனதால் கட்சியே போய்விட்டது என்று சொன்னார்களே! பார்த்தீர்களா?' என்று சில ம.தி.மு.க. நிர்வாகிகள், போலீஸாரிடமும், மீடியாக்களிடமும் கேள்வி கேட்டதை நாம் காண முடிந்தது.

முதலில், நாஞ்சில் சம்பத்தின் கைதைக் கண்டித்தும், இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினார் வைகோ. அதில் புலிகள் ஆதரவு கோஷமும் இருந்தது. அத்தனை தொண்டர்களும் அதை அப்படியே வழிமொழிந்தனர். அதன்பின் பொள்ளாச்சி எம்.பி.யின் சுருக்கப் பேச்சுக்குப் பிறகு, மதியம் 11.45 மணிக்கு மைக் பிடித்தார் வைகோ. 12.45 மணிவரை அவரது பேச்சு நீண்டது.

``தமிழ்நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது!'' என்ற வைகோ, சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் மீது நடந்த வன்முறையை அதற்கு மேற்கோள் காட்டினார்.

``ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று மிரட்டுவதற்காகத்தான் நாஞ்சில் சம்பத், கொளத்தூர் மணி, சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்!'' என்றவர், அடுத்ததாக ``இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவிப்பதே இந்திய ராணுவம் கொடுக்கும் ஆயுதம் மூலம்தான்!' என்று பகிரங்கமாகவே சாடினார். அதற்கு ஆதாரமாக, இலங்கை நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு சுகாதார அமைச்சர், `நாம் இந்த அளவுக்கு விடுதலைப்புலிகளை அழித்ததற்கு இந்திய ராணுவம் செய்த உதவிதான் காரணம். எனவே கட்சி வித்தியாசமின்றி இந்திய ராணுவத்திற்கு நாம் நன்றி சொல்லவேண்டும்!' என்று சொன்னதை வைகோ மேற்கோள் காட்டினார்.

அதன்பிறகு அவரது குரலில் ரொம்பவே சூடு.

"நம்முடைய நாஞ்சில் சம்பத் என்ன பேசினார்? `இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் துரோகத்தைத் தொடர்ந்து செய்து வந்தால் நாட்டின் ஒருமைப்பாடு துண்டுதுண்டாகச் சிதறும். தமிழ்நாட்டின் தூதரகம் டெல்லியில் நிறுவ வேண்டிய நிலையும் ஏற்படும்!' என்றார். இதில் என்ன தவறு இருக்கிறது? இது என்ன தேசத்துரோக குற்றமா? இந்திய இறையாண்மைக்கு எதிராக நாஞ்சில் சம்பத் இதில் எதுவும் பேசவில்லையே. இலங்கைத் தமிழர் பாதுகாப்புக்காகத்தான் இதை அவர் பேசினார்.

அவர் கூறிய கருத்தை இப்போது நானும் கூறுகிறேன். ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கும் நிலை இனியும் நீடித்தால், இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆயுதம் கொடுக்கும் நிலை மீண்டும் நீடித்தால், இந்திய ஒருமைப்பாடு துண்டுதுண்டாக உடையும். விடுதலைப்புலிகளுக்கும் நான் ஆதரவு கொடுக்கிறேன். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் அவர்களுக்கு ஆதரவுக்குரல்கள் ஒலிக்கும். நாஞ்சில் சம்பத், கொளத்தூர் மணி, சீமான் ஆகியோரை உடனடியாக விடுவிக்காவிட்டால் நாங்கள் அத்தனை பேரும் நாஞ்சில் சம்பத்துகளாக மாறுவோம்!'' என்று உணர்ச்சி பொங்கினார்.

கட்சியை விட்டுப் போன கண்ணப்பனையும் வைகோ அவரது பேச்சில் விட்டு வைக்கவில்லை.

"என்னவோ கோயமுத்தூரில் கட்சியே காணாமல் போய்விட்டது என்று யாரோ சொன்னார்கள். சுட்டெரிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் இங்கே ஆயிரக்கணக்கானோர் திரண்டிருக்கிறீர்கள். இதைப் பார்த்து அவர்கள் புரிந்து கொள்ளட்டும். பிள்ளை பிடிக்கும் கூட்டம் கட்சியில் ஆட்களைப் பிடிக்க வருகிறார்கள். ஏற்கெனவே வெளியேற வேண்டும் என்று திட்டமிட்டு அவர்களுடன் போனவர்கள் எங்கிருந்தாலும் நன்றாக வாழட்டும். எனக்கு வந்த வாய்ப்புக்களை எல்லாம் பதவிகளையெல்லாம் அவர்களுக்குக் கொடுத்து அழகு பார்த்தேன். ஆனால், என்மீது புழுதி வாரித் தூற்றிவிட்டுப் போகிறார்கள். அவர்களைப்பற்றி எனக்குக் கவலையில்லை. எனக்கு கட்சியின் காவல் தெய்வங்கள் நீங்கள்தான்!'' என்று வழக்கம்-போல் வைகோ உணர்ச்சிவசப்பட்டபோது, கூட்டத்தில் எழுந்த சலசலப்பு அடங்க வெகுநேரமானது.

வைகோவின் இந்தப் பேச்சை, கூட்டத்தினரின் மத்தியிலும், மூலைக்கு மூலை மரங்களின் மறைவிலும், அடுக்குமாடிக் கட்டடங்களிலும் நின்று வீடியோ கேமராவில் இண்டு இடுக்கு விடாமல் பதிவு செய்து கொண்டிருந்தனர் உளவுத்துறையினர். `மாட்டிக் கிட்டார் வைகோ. என்.எஸ்.ஏ ரெடி!' என்று தங்களுக்குள் அவர்கள் பேசிக் கொள்ளவும் செய்தனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய உளவுப்பிரிவு போலீஸார் சிலர், ``வைகோ பேசியதில் அவரை என்.எஸ்.ஏ.வில் கைது செய்வதற்கான அத்தனை விஷயங்களும் உள்ளன. அவரும் கைதாக வேண்டும் என்ற எண்ணத்தில்-தான் அப்படிப் பேசிய மாதிரி இருக்கிறது. என்றாலும் இந்தப் பதிவுகளைத் தலைமையிடம் அனுப்புவது மட்டுமே எங்கள் வேலை. அங்கிருந்து உத்தரவு வந்தபின்புதான் எதுவும் நடக்கும்!'' என்றனர் நம்மிடம்.

என்.எஸ்.ஏ. இன்னும் என்ன செய்யப் போகிறதோ?

- கா.சு.வேலாயுதன்

Comments