இலங்கையில் நடப்பது குருட்டுத்தனமான போர். தமிழர்களும் சிங்களவர்களும் ஒரு பார்வை

முப்பது வருடங்களுக்கு மேலாக விழும் பிணங்ளை பிழை பிழையாக எண்ணியே கணக்குப் படிகிறார்கள் எங்கள் பிள்ளைகள்.

ஆமியில் ஒரு பிணம் இரண்டாகவும், தமிழ் பிணம் அரையாகவுமே ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ஆசிரியருக்கு என்னவழுத்தமோ யாரறிவார்.

அரசும் அதிகாரங்களும் ஆமிப் பிணங்களைக் காற்பங்காகவும் தமிழர் பிணங்களை தலைக்கு நான்கு

மேலாகவும் கணக்கெடுத்து வரவு வைக்கிறது. புதிய கணித மேதைகள் எங்கள் நாட்டில் இப்படி உருவாகிறார்கள். வாழ்க கணிதம்.

இலங்கையில் போரானது அடிப்படையில் அர்த்தமற்ற கணக்கு என்பதை எத்தனைபேர் அறிவார்கள். இதை முதலில் சிங்கள அரசியல்வாதிகளும், அறிவுஜீவிகளும் அறிந்து கொள்வது மிக முக்கியமானது. அரசு அழிக்க நினைப்பதும் அழிப்பதுவும் தமதுடன் பிறப்புக்களான தமிழர்களையே.

மகாவம்சம் காலங்காலமாக சிங்கள அரசியல் நலனுக்காகவும், சிங்கள நலனுக்காகவும் மாற்றி மாற்றி எழுதப்பட்டதே மகாவம்சம். திறந்த மனங்கொட்டவர்களால் இதைத் திருத்தியமைக்கக்கூட முடியவில்லை. தேசியம் தேசியம் என தமிழ், சிங்கள அரசியல்வாதிகள் கட்டியெழுப்பியது துவேசத்தையும் பிரிவினையையும் இனவிரோதங்களையுமே.

இலங்கை பல இராசதானிகளை காலங்காலமாகக் கொண்டிருந்தது. இதில் முக்கியமானவை யாழ்பாண, கோட்டை, கண்டி இராச்சியங்களாகும். சில காலகட்டங்களில் தென்னிந்திய தமிழ் அரசுகள் முக்கியமாக சோழ பாண்டிய அரசுகள் இலங்கையில் கோலோச்சியுள்ளன. சிங்களவர் தம்மை ஆரியரென்றும் உயர்ந்தவர்கள் என்றும் மகாவம்சம் கூறிக்கொள்வதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது. விஜயன் வடஇந்தியாவில் இருந்து வந்தான் என்றும் அவன் இங்குள்ள கறுப்பும், கட்டையுமான வேடுவப் பெண்ணை மணந்தான் என்றும் கட்டுக்கதைகளை விட்டு இலங்கையில் ஒர் அர்த்தமற்ற இனவழிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

விஜயனும், நண்பர்களும் துஸ்டர்கள் என்று ஒரிசார், பீகார் போன்ற இந்திய மேற்குப் பகுதியில் இருந்து அரசனான விஜயன் தந்தையால் நாடு கடத்தப்பட்டார்கள். இவர்கள் இலங்கையில் கரையொதுங்கி வேடுவகுலத்தை திருமணம் செய்ததால் சிங்களவினம் உருவானது என்பது ஒருகதை. நல்ல உயரமும், அழகும், பராக்கிரமமும் கொண்ட இந்திய விஜயனும் நண்பர்களும் இப்படிப்பட்டு கறுப்பும் குள்ளமான குவேனியையும் வேடுவிச்சிகளையும் கல்யாணம் கட்டினார்கள் என்பதை நம்பக்கூடியதாக இருக்கிறதா? தவித்தவாய்க்குத் தண்ணீராக இருந்திருக்கலாம். ஆனால் உண்மை….?

மதமாற்றங்கள் :
தேவநம்பியதீசன் எனும் இந்து மன்னன் வேட்டையாடிக் கொண்டு இருக்கும் போது ஒருகுரல் கேட்டுத் திரும்பினான். அந்தக் குரல் கூறியது ”மானைத் தொடரும் மன்னரே மதியத் தொடர்வீராக” இது ஒரு பிச்சுவின் குரல். இதனை அடுத்து பல மூளைச்சலவையின் பின் தீசன் புத்தனானான் அவனைத் தொடர்ந்து அவன் ஆட்சியின் கீழ் இருந்த மக்களும் புத்தமதத்தைத் தழுவிக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை வரலாறு.

புத்தமதமானது சாம்பிராட் அசோகனின் காலத்தில் அல்லது அதற்குப்பின்தான் இலங்கைக்கு வந்திருக்க முடியும். அப்போது இலங்கையில் வேறு ஒருமதம் பிளக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு. சிங்களவர்கள் எல்லாம் புத்தமதத்தவர்கள் என்று வாதிடுவார்களானால் இவர்கள் அசோகன் காலத்துக்குப் பிந்தியவர்கள் என்பது உறுதி. இதன் பிரகாரம் சிங்கள இனம் மட்டுமல்ல மதமும் வந்தேறியதே.

சுமார் 13ம் நூற்றாண்டுகளில் வடபகுதியான யாழ்பாணத்தில் தொற்றுநோய் காரணமாக பெருந்தொகையான மக்கள் அழிந்தார்கள். இதனால் யாழ் மன்னன் இந்தியாவின் தென்பகுதியில் இருந்து குடியும் குடித்தனமுமாக தமிழர்களை யாழ்பாணத்தில் குடிறேற்றினான். இதனால்தான் யாழ்பாணப்பகுதியில் வாழ்பவர்கள் பேசுவது சிலவேளை மலையாளிகள் பேசுவதுபோல் இருக்கிறது என்று இந்தியத் தமிழர்கள் சொல்வார்கள். சிங்கள மக்களும் அரசும் தமிழர்கள் 13ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் தான் முன்பே வந்து நாடு பிடித்தவர்கள் உரிமையுள்ளவர்கள் என்று கூறுகின்றனர். இதுவே சிங்களவரின் வெறுவாய்க்கு அவல் கிடைத்த மாதிரியாகிற்று.

இலங்கையின் வடபகுதியான யாழ்பாணத்தில் வாழ்ந்த தமிழர்கள் புத்த மதத்தைத் தழுவியிருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் இரண்டு காப்பியங்கள் புத்தகாப்பியங்கள் என்பதினூடாகவும் புத்தமதம் தமிழுக்கு அன்நியமில்லை என்பதும் நிரூபணமாகிறது. தமிழர்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் பலபகுதிகளில் புத்தமதத்தைச் சார்ந்து இருந்துள்ளனர். ஒரே மொழியில் பலமதம் என்பது இயற்கையான ஒன்றென்பது கண்ணூடு. இதே போன்று தமிழ்மொழியைக் கொண்ட பௌத்தர்களும் இந்துக்களும் ஒரே காலத்திலேயே யாழ்பாணத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.

யாழ்பாணத்தில் மாதகலுக்கருகில் சம்பில்துறை எனும் சிறிய கடற்கரைக் கிராமம் உள்ளது. அது ஒரு துறைமுகமாக இருந்திருக்க வேண்டும். சம்பில்துறை எனும் பெயரிலேயே அது துறைமுகம் என்பது துலங்குகிறது. அங்கேதான் சங்கமித் திரை எனும் பிச்சுணி வந்து இறங்கினாள் என்று சரித்திரம் கூறுகிறது. 80 களில் இக்கிராமத்துக் கடற்கரையில் அன்று நாம் சென்று குளிப்பது வளக்கம். அங்கே ஒரு கற்தூண்வளைவு வீழ்ந்து கிடந்தது. அதுதான் சங்கமித்திரை வளைவுவாகும். அவள் கொண்டுவந்த வெள்ளரசுதான் பறாளாய் முருகமூர்த்தி கோவிலில் அன்று நின்றது இன்று நிற்கிறதோ தெரியவில்லை. கல்வளைவு வைக்கும் அழவிற்கு யாழ்பாணத்தில் தமிழர்களும் அரசும் புத்தமத்தைச் சார்ந்திருந்தார்கள் அல்லது வரவேற்றிருக்கிறார்கள் என்பதே உண்மை.

புத்த சின்னங்கள் கண்டெடுக்கப்பட்ட இடமெங்கும் சிங்களவர்தான் இருந்தார்கள் என்று எண்ணுவதும், விவாதிப்பதும் குருட்டுத்தனமானது. புத்தமதம் சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானது என்பது குருட்டு விவாதமே. புத்தம்சார்ந்த மணிமேகலையின் கதையைக் காவிமாக எழுதிய இளங்கோவடிகள் மலையாளப் பகுதியில் இருந்தே அதை எழுதினார் அதை ஏன் தமிழில் எழுதினார்? மலையாளத்தில் எழுதவில்லை? இன்று மணி மேகலை தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக இருக்கிறது. அன்று மலையாளமெனும் மொழி இல்லாது இருந்திருக்கலாம். இருந்தாலும் ஆட்சி மொழியில்லாது இருந்தி ருக்கலாம். பௌத்தம் தமிழுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகவே அன்று இருந்திருக்கிறது என்பது சான்று.

உங்கள் மனங்களில் தமிழர்களும் இந்துமதம் எப்படி என்று கேள்வி எழலாம். தமிழர்கள் ஒரு காலத்தில் சிவனை, முருகன், வைரவர், காளி, வீரபத்திரர்களை வணங்கும் சைவர்களாகவே இருந்தார்கள். இந்தச் சிவனை வணங்கும் சைவமானது சமணம், வைஸ்ணவம் புத்தம் போன்ற மதங்களால் அழிக்கப்பட்ட வந்தது. முக்கியமாக புத்தமத வருகையால் சைவம் முற்றாக அழியும் நிலைக்கத் தள்ளப்பட டது. அரசர்கள் மதம் மாறும் வேளை மக்கள் விரும்பியும், விரும்பாமலும் மதம் மாறினார்கள், மாற்றப்பட்டார்கள். சமயகுரவர்கள் தான் மீண்டும் சைவசமயத்தை தென்னிந்தியாவில் கட்டி எழுப்பினார்கள் என்பது தான் வரலாறு.

இலங்கையில் தென்னிந்தியாவின் பாதிப்பு என்றும், ஏன் இன்றும் உள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது. சைவ மதவழிபாடுகளுக்கு முன்னர் தமிழர்கள் மேற்கு இந்தியாவிலும் இன்றைய பாக்கிஸ்தானின் கிழக்குப் பகுதிலும் இருந்த இந்து நதிக்கரையில் மொகஞ்சதாரோ கரப்பா எனுமிடங்களில் நாகரீகமடைந்த ஒரு இனமாக வாழ்ந்தார்கள். ஆரிய வருகை, படையெடுப்புக்களால் வேடுவத்தன்மை குன்றிய திராவிடர்களான தமிழர்கள் புலம்பெயர்ந்து இந்தியாவின் கீழ்பகுதிகளுக்கு நகர்ந்தார்கள் என்பது சரித்திரம். சிந்துவெளிப் பள்ளத்தாக்கில் தமிழர்கள் இயற்கையையும் சிலர் சிவலிங்கத்தையும் வணங்கினார்கள் என்று அறியப்படுகிறது. இது பற்றிய ஆய்வு இக்கட்டுரைக்கு முக்கியமற்றது.

மதவருகைகளாலும் அரசர்களின் மதமாற்றங்களாலும் மொழியில் பல மாற்றம்களும் புதிய மொழிகளும் உருவாயின. உதாரணம் திராவிடமொழிகளான கர்னடம், மலையாளம், தெலுங்கு, துலு. தமிழ்தாய் வணக்கப்பாடலில் இதைக் கேட்கலாம் இந்தத் துலுவே உலகஅழகி ஐஸ்வரியாவின் தாய் மொழி என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திராவிட மொழிகள் அனைத்தும் தமிழில் இருந்தே உருவாயின. இந்து, பௌத்த மதங்களின் வருகைகளே மொழியில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு மொழிதானே இனத்தை வரையறுக்கிறது. இதனால் புதிய இனங்கள் உருவாயின. தமிழும் 70 விகித வடமொழியும் சேர்ந்தே தெலுங்கும், 40விகித வடமொழியால் மலையாளமும் உருவாகியது. இதே போன்றே இலங்கையில் சிங்களமும் உருவாகியது என்பதை அறிக. பௌத்தமதத்தின் மந்திரங்களான பிரித்துகள்கள் முக்கியமாக வடமொழியிலும் பாழியிலும் தான் இருந்தது. பாழிமொழி இருந்த இடம் தெரியாது வடமொழிக்கு முன்னரே செத்துவிட்டது. இப்படியான மொழிக் கலப்புக்களால்தான் புதிய இனங்கள் உருவாயின.

இந்தியா பல்லின மக்களையும் மதங்களையும் கொண்ட ஒருநாடு. மதங்கள்தானே உலகில் போர்களின் வித்தாக இருக்கிறது. சரி சிங்களவர் சொல்வது போல் அவர்கள் வடநாட்டில் இருந்து வந்தால் சிங்கள மொழியில் எப்படித் தமிழின் ஆளுமை ஆழமாக அமைந்திருக்கும். ஆக உண்மை என்னவெனில் மதம் மட்டுமே வடமொழி மந்திரங்களுடன் (பிரித்துகள்களுடன்) வந்ததே தவிர மக்களான திராவிடத் தமிழ் இயக்கர் நாகர் அங்கேயே இருந்தார்கள் என்பதே உண்மை. சிங்கள வர்கள் வடவிந்தியாவில் இருந்துதான் வந்தார்கள் எனின் இவர்கள் இலங்கையின் ஆதிகுடியல்லர். இங்கே திராவிடர் ஆரியர் என்ற கதைக்கே இங்கு இடமில்லாது போகிறது. ஆரியம் என்பது ஒருநிலையற்ற சமன்பாடாகும். கிட்லரும் ஒரு சாதிப்ப ட்டியல் வைத்திருந்தான். அதில் யூதரும் கீழத்தேயத்தவர்களும் நாய்களுக்குக் கீழான சாதியென்றே குறிப்பிட்டிருக்கிறான்.

கடைசி மன்னன்:
இலங்கையின் கண்டி மன்னனும் கடைசி மன்னன் தமிழனான விக்கிரமராஜசிங்கன் என்பது யாவரும் அறிந்ததே. இவனுடைய இயற்பெயர் கண்ணுச்சாமி என்பதாகும். இவனை சிறீவிக்கிரமராஜாசிங்கன் என்று அழைப்பது வழக்கம். சிங்களவர் வாழும் பகுதி கண்டி, அங்கே சிங்களவர் தான் வாழ்ந்தார்களா என்பது கேள்விக்குரிய விடயம். முழுக்க முழுக்க சிங்களவர் வாழும் பகுதியில் எப்படி ஒரு தமிழரசன் உருவாகியிருக்க முடியும். இவன் எங்கிருந்து தன்படையுடன் குதித்தான் என்று கூற முடியுமா? கப்பம் கட்டாத சிங்களச் சிற்றரசர்களை சிறைப்பிடித்து அவர்கள் தலையை வெட்டி உரலில் இட்டு அவர்கள் மனைவியரைக் கொண்டு இடிப்பித்தானென்று கூறப்படுகிறது.

இயக்கர் - நாகர்:
மனிதன் குரங்கிலிருந்து வந்தாலும் சரி, மனிதனில் இருந்து வந்தாலும் சரி ஒரு சங்கிலித் தொடராய் மரபணுச்சங்கிலி என்றும் இருக்கும். இயக்கர் நாகர் என்று இரண்டு இனங்கள் இலங்கையில் இருந்ததென்றால் அவை ஒன்றுக்கொன்று இரத் தவுறவுடன்தான் இருந்திருக்க முடியும். வானத்தில் இருந்து குதித்திருக்க முடியாது. இங்கும் சிங்களவரும் தமிழரும் இரத்த தொடர்புடையவர்கள் என்பது தெளிவாகியது. தந்தை வேறானாலும் தாய் ஒன்றாக இருந்திருக்கலாம். இயக்கருடன் இந்தி யாவின் வடபகுதியில் இருந்து தந்தையால் துஸ்டர்கள் எனத்துரத்திவிடப்பட்ட விஜயனும் நண்பர்களும் கலந்து வந்த வம்சம்தான் சிங்களவர் என்று மகாவம்சம் கூறுகிறது. அவ்வாறாயின் இவர்கள் வந்தேறு குடிகள் என்பது உறுதியாகிறது. பீகார் அசம் போன்ற பகுதிகளின் சிங்கக்கொடி முக்கியத்துவம் பெறுவதையும் காணலாம்.

இதேபோன்றே தமிழர்கள் நாகரின் வம்சாவளி என்பதற்கும் சிலசான்றுகளை நாம் முன்வைக்கலாம். இந்தியாவின் தென்பகுதியில் நாகர்பட்டினம், நாகர்கோவில் என்றுண்டு. இதேபோல் இலங்கையின் வடபகுதயில் நாகர்கோவில் உண்டு. இந்தியாவில் திருநெல்வேலி போல் யாழ்பாணத்தில் திருநெல்வேலி என்றொருகிராமம் உண்டு. உணவுமுறை கலாச்சரப் பின்னணிகளில் நாம் தென்னிந்தியரை ஒத்திருப்பது முக்கிய சான்றாகிறது

பூகோளமாற்றம்:
இற்றைக்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து நடந்தே போகக்கூடிய தரைவழிப்பாதை இருந்தது. இப்போ இராமாயணம், பதினேளாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இராமபாலம் என்பது பற்றி நீங்கள் வினாவலாம். ஆம் அது வெறும் கட்டுக்கதையே. தரைவழிப்பாதை இருக்கும் போது எதற்குப் பாலம்? ஆபிரிக்காவில் இருந்து அஸ்திரேலியா வரையிலான நாடுகள் இணைந்த நிலப்பரப்பைக் கொண்டதாக இருந்தது என்பது ஆய்வு. இதைக் குமரிக்கண்டம் என்றும் லெமூரியாக்கண்டம் என்றும் அழைத்தார்கள். காலப்போக்கில் சுனாமி, நிலக்கீழ் அசைவுகளால் கண்டம் கடலுடன் இழுபட்டுப் பிரிந்தது. அப்போ இலங்கைத்தீவு மட்டும் இந்தியாவின் வால் போல் ஒட்டிக் கொண்டிருந்தது, இருக்கிறது.

பூகோளரீதியாக இலங்கை இந்தியா ஒரே நாடாகவே இருந்தது சான்று. பல சுனாமிகளாலும், நிலவசைவுகளாலும், கடலரிப்புக்களாலும் இலங்கை மீண்டும் காலப் போக்கில் பூகோளரீதியில் தனிமைப்படுத்தப்பட்டது. இதற்கான போதிய ஆதாரங்கள் உண்டு. பூகோளரீதியாக இந்தியாவின் தென்பகுதியில் இருந்து இலங்கை முழுவதும் திராவிடரே இருந்தார்கள். இயக்கர்களும் திராவிடரே. திராவிடரைத் தவிர இன்னொரு இனம் அங்கு வானத்தில் இருந்து குதித்திருக்க முடியாது. இலங்கையின் தென்பகுதியில் ஒரு புதிய இனம் உருவாகியிருக்குமானால், அது இலங்கையில் தென்பகுதிகளில் வாழ்ந்த திராவிட இயக்கருடன் கலந்ததாகவே இருக்க முடியும்.

அரசியல் பிழைப்புக்காக வோட்டு வங்கிகளை நிரப்ப இனத்தை சாதியையொரு கருவியாகப் பாவித்ததின் பலனே இன்றைய இலங்கை அழிவாகும். அன்று அரசியலில் தலைமை தாங்கிய எல்லா சிங்கள அரசியல்வாதிகளின் பேரன் பூட்டன் எல்லாம் தமிழர்களாகவே உள்ளார்கள். உ.ம்: டட்லிசெனநாயக்கா, சிறீமாவோ பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவோதனா..!! இல்லையென்று கூறமுடியுமா?

இயக்கர் நாகர் என்ற இருவேறுபட்ட குழுக்கள் சாதிவழிகள் இருந்தனவென்றால் சிங்களவர் தமிழர்களை வைத்து மரபணுப்பரிசோதனை எடுத்தால் உண்மை புலனாகும். ஒரே நாடு என்று தமிழ் மக்களை அழித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசு இதைச் செய்யுமா? இந்தச் சோதனையில் அடிப்படை நேர்மை மிக முக்கியமானது. இந்தப் பரிசோதனையை உலக நாடுகள் நடுநிலையுடன் செய்து எடுத்து வைத்த விஞ்ஞான முடிவை வைத்துக்கொண்டு போரைத் தொடர்வதா விடுவதா? என்பதை அரசும் புலிகளும் தீர்மானிக்கட்டும். இதற்குப் பின்பாவது நாங்கள் இது வரை கொன்றது எமது சகோதரங்களா? இரத்த உறவா? இல்லையா? என்பது புரியும். செய்யுமா அரசு? உதவுமா உலக நாடுகள்? ஓரு கூட்டு முடிவையும், இலங்கையில் அமைதியை ஏற்படுத்த மட்டுமல்ல இனிவரும் காலங்களில் வரவிருக்கும் இன்கலவரங்களைத் தடுப்பதற்குமாக இதைச் செய்வீர்களா? போலித்தனமான, பொய்மையும் இதயசுத்தியுமில்லாத சமாதான உடன்படிக்கைகள், வட்ட மேசை மகாநாடுகள் எமக்கு வேண்டாம். தேசியம் எமது நாட்டில் சிங்கள, தமிழ் அரசியல்வாதிகளால் கட்டி எழுப்பப்பட்டிருக்குமானால் இன்று எமக்கும் இலங்கைக்கும் இப்படி ஒரு நிலை வந்திருக்காது.

காலங்காலமாக பேச்சுவார்த்தை, வட்டமேசை மகாநாடுகள் எந்தப் பலனையும் அழிக்கவில்லை, அழிக்கப் போவதும் இல்லை. குத்து வெட்டுக்குரோதங்களை மனங்களில் வளர்த்துவிட்டு ஒரேநாடு, ஜனநாயமென்று கதைப்பதும், கொல்வதும் அழிவையே தொடர்ந்து ஏற்படுத்தும். இன்று அரசு புலிகளை அழிக்கலாம். நாளை தோன்றும் புரட்சியையும் இனக்கலவரங்களையும் தடுக்க முடியாது. ஒரேநாடு என்றால் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அரசு முன்வைப்பது முக்கியம். ஒற்றுமைக்கான அடித்தளங்களை இருபகுதிகளில் கட்டி எழுப்புவதுடன் மக்களிடையே நாம் இலங்கையர் என்ற தேசிய ஒற்றைமையை ஏற்படுத்தாது ஒர் ஐக்கிய இலங்கையை நினைத்தும் பார்க்க இயலாது.

மகாவம்சத்தை நிறைவேற்றுகிறேன் என்று முளக்கமிடும் இரசபக்ச ஐக்கிய இலங்கை பற்றி எப்படிக் கதைக்க முடியும். துவேசப் பிக்குகளின் கட்டுக்கதைப்படி மகாவம்சம் கூறுகிறது தமிழன் ஈனச்சாதி கொல்வது பாவம் இல்லை என்கிறது. புத்தமத்தில் முதலும் மூலமுமே கொல்லாமையாகும். கொல்லு எனக்கூறும் மகாவம்சம் எப்படி ஒரு புத்தநூலாக இருக்க முடியும்? புத்தனின் பல்லைப் பிடுங்கிவந்தவர்களா தமிழர்களை விடப்போகிறார்கள். இப்படிப்பட்ட துவேசத்தை வளர்க்கும் மகாவம்சத்தை நிறைவேற்றுகிறேன் என முழக்கமிடும் இரசபக்சவால் நாட்டில் எப்படி ஒரு அமைதியான ஐக்கிய இலங்கையை நிறுவமுடியும். இது எமக்குக் காட்டும் சமிஞ்ஞையானது தமிழ்பேசம் தமிழர்களும், முஸ்லீம்களும் கொன்று குவிக்கப்படுவார்கள் என்பதாகும்.

இன்று யாழ்ப்பாணத்தை துப்பாக்கி முனையில் வாய்மூடி மௌனியாய் வைத்திருப்பது போன்று தொடர்ந்தும் வைத்திருக்க இயலாது. இன்று புலிகளை அழிக்கலாம், ஆனால் வெகுசனம் வெகுண்டெழுந்தால் எல்லாம் தவிடுபொடியாகும். இன்றைய இலங்கையின் அரசதலைவர் தன்னரசியல் வாழ்வைத் தக்கவைக்க புலிகளை அழிப்பது என்று தமிழர்களையும் ஏழை எழிய சிங்களச் சிப்பாய்களையும் களபலியெடுத்தும் கொடுத்தும் கொண்டு இருக்கிறார். சிங்கள மக்களிடையே புரையொடிக்கிடக்கும் பொருளாதார, வேலையின்மைப் பிரச்சனைகளை மறைப்பதற்கும், பேக்காட்டுவதற்கும் தமிழர், புலியழிப்பு போர் நடக்கிறது. இலங்கையானது அயல் நாடுகளுக்கும் அன்னிய நாடுகளுக்கும் ஏலம்போட்டு விற்று, ஆயுதங்கள் பெற்று வங்கி பெட்டிகள் எல்லாம் நிரப்பி முடிந்துவிட்டது. அடு த்து தேர்தலில் வெல்லுவதும் உறுதியாயிற்று.

புலிகளை ஓரங்கட்டியபின் சிங்கள மக்களிடையே எழுவிருக்கும் வெகுஜனப்போராட்டத்துக்கு முகம்கொடுக்க அரசு தயாரா? ஒரே நாடு என்பவர்கள் ஒரேமக்கள், பொதுவேலைத்திட்டம் துவேச அழிப்பு, அது பற்றிய விளக்கங்கள், சட்டத்திருந்தங்கள் என்ற குணங் குறிகளைக்காட்டுங்கள். அன்றேல் சிங்கள, தமிழ் பகுதிகளில் எழும்பவிருக்கும் புதிய ஆயிதப் புரட்சிகளுக்கு இனிவரும் அரசுகள் முகம் கொடுக்க முடியாத நிலைவரும். இது ஒரு இலங்கைக்கான எதிர்வு கூறலாகும்.

தமிழ்மக்கள் புரட்சிக்கும் போருக்கும் பழக்கப்பட்டவர்கள் பயிற்றப்பட்டவர்கள். எழுச்சி என்று வரும்போது புரட்சியடைய நேரம் காலம் எடுக்காது. புலிகளை முற்றாக அழிப்பது மிகக்கடினம். அப்படி அரசல் முடிந்தால் அடுத்து இலங்கை அரசு எதிர்கொள்வது ஒரு தேசிய பொதுவுடமைக்கான ஆயுதப்புரட்சி என்பதை யாரும் மறுக்கக்கூடாது. இதை சிங்கள தமிழ்மக்கள் இணைந்தே செய்வார்கள் என்பது திண்ணம்.

சரித்திரரீதியாகவும், விஞ்ஞான ஆய்வுரீதியாகவும், தர்க்கரீதியாகவும் தமிழர்கள் புத்தமத்தைத் தழுவியிருந்தார்கள் என்பது உண்மை. புத்த சின்னங்கள் இருக்கும் இடமோ அன்றி அகழ்வகளில் எடுக்கப்படும் இடமோ சிங்களவர்தான் இருந்திருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

இக்கட்டுரையில் தமிழ்பேசும் முஸ்லீங்களைத் தனியாகக் குறிப்பிட்டு எழுதவில்லை. இவர்களும் தமிழர்கள்தான் இஸ்லாத்தை மதமாகக் கொண்டுள்ளனர்

இன்று அரசு நடத்துவது ஒரு குருட்டுத்தனமான அரசியலும், தூரநோக்கற்ற சுயலாப வியாபாரமுமே. சிங்கள மக்களை ஏமாற்றும் உத்தி. மகாவம்சத்தை நிறைவேற்றுவதன் ஊடாக புலியழிப்பு போர் எனும் போர்வையில் தமிழின அழிப்பு நடக்கிறது. இது முழுக்க முழுக்க ஒரு இனச்சுத்திகரிப்பாகும்.


Comments