சர்வதேச சட்டங்களுக்கு முரணான அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இன ரீதியாகத் தமிழர்களாக இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது ‐ HRW

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ள 1.9பில்லியன் டொலர்கள் உண்மையாகவே சரியான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாச் அமைப்புத் தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டங்களுக்கு முரணான அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இன ரீதியாகத் தமிழர்களாக இருப்பதும் இச்சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அது தெரிவித்துள்ளது.
கடந்த காலத்தில் அரசாங்கம் இடம் பெயர்ந்தவர்கள் தொடர்பாகக் கையாண்ட வழிமுறைகளும் இதனை அதிகப்படுத்துகிறது எனவும் அது தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்திற்கு ஹியூமன் ரைட்ஸ் வாச் அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அவசர உதவி கோரி போருக்குப் பின்னான மீள்குடியேற்றத்திற்காக என அவசர நிதித் தேவையாக சர்வதேச நாணய நிதியத்தியத்திடம் சிறிலங்கா அரசாங்கம் 1.9 பில்லியன் டொலர்களைக் கோரியது குறித்தே நாம் இதனை எழுதுகிறோம்.

வன்னியின் தற்போதைய நிலைமை அச்சமூட்டுவதாக உள்ளதாக அறிகிறோம். ஜனவரி 2009இலிருந்து விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்குமிடையேயான மோதலில் கொல்லப்படும் மற்றும் படுகாயமடைவோரின் எண்ணிக்கை றொக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் இரண்டாயிரத்த்ற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்ப்பட்டுள்ளனர். ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அண்மைய மோதல்களால் இரண்டரை லட்சத்திற்கும் அதிகளவான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களில் முப்பத்தையாயிரம் பேர் அராங்கம் அமைத்துள்ள முகாம்களில் வாழ்கின்றனர்.

அரச படைகளாலும் விடுதலைப் புலிகளாலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் அதன் சட்டங்களைப் பாதிப்பனவாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் மார்ச் 13ஆம் திகதிய அறிக்கையில் தெரிவித்துள்ளார். அங்கு என்ன நடைபெறுகிறது என்பது தொடர்பாக நாம் மேலும் அறிய வேண்டியவர்களாக உள்ளோம். ஆனால், அங்குள்ள சூழல் மிகக் கொடுரமாக இருக்கிறது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம்.

நாளாந்தம் மனிதாபிமான நிலைமை படிப்படியாகச் சீர்குலைந்து வருகிறது. பெருமளவான மக்கள் பதுங்குகுழிகளுக்குள்ளேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் எக்கணமும் அபாயத்தை எதிர்நோக்கியவர்களாக உள்ளார்கள் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் மார்ச் 17ஆம்திகதிய தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய மோதல்களில் இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் போர்ச்சட்டங்களை மீறி வருவதாக தொடர்ச்சியாக ஹியூ10மன் ரைட்ஸ் வாச் அறிக்கையிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு மக்களை வெளியேற விடாமல் சட்டத்திற்கு முரணாகத் தடுத்து வைத்துள்ளதோடு, மக்களிடையே தமது போராளிகளை நிறுத்தி வைத்துமுள்ளனர்.

அரச படையினரோ எவ்வித தயவு தாட்சண்யமுமின்றி தாமே அறிவித்த பாதுகாப்பு வலயங்களை நோக்கி தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் அப்பகுதிகளிலிருந்து வெளியேற இடமளிக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச சமூகத்தினதும் ஏனைய நாடுகளதும் கோரிக்கைக்கு செவி கொடுப்பதாகத் தெரியவில்லை.

உள்ளக இடம் பெயர்வாளர்கள் நடாத்தப்படும் முறை குறித்தும் எமது அக்கறையை நாம் அதிகப்படுத்த வேண்டும். போருக்குப் பின்னர் அவர்கள் மீள்குடியமர்த்தப்படுவதற்காக அரசாங்கம் தேடும் பணஉதவியுடன் இது தொடர்பு பட்டது. 2008 செப்டம்பரில் இலங்கை அரசாங்கம் மனித நேய நிறுவனங்களை அங்கிருந்து வெளியேற்றியதை அடுத்து இடம் பெயர்ந்தவர்கள் எதிர்கொண்டு வந்த நெருக்கடிகள் பலமடங்காக அதிகரித்தது.

அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகச் சொல்லப்படும் மிகக்குறைந்தளவிலான உணவு மற்றும் மருத்துவ விநியோகங்கள் போதாமலிருப்பதாக ஐ.நா அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

புலிகளின் பிரதேசத்திலிருந்து தமக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் என நினைத்துத் தப்பிவரும் இடம் பெயர்ந்தவர்கள் நலன்புரி முகாம்கள் என அழைக்கப்படும் இனக்கொலை முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பி வரும் இடம் பெயர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக எவ்வித உரிமைகளுக்கான சுதந்திரங்களும் அற்ற, நடமாடும் சுதந்திரம் கூட அற்ற முட்கம்பிகளால் சுற்றி வளைக்கப்பட்ட இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள இத்தகைய இனக்கொலை முகாம்களுக்கே அனுப்பப்படுகிறார்கள்.

இவ்வருட இறுதியில் அரசாங்கம் இந்த இடம் பெயர்ந்த மக்களை அவர்களுடைய வீடுகளுக்குத் திரும்ப அனுமதிப்பார்களா அல்லது அம்மக்கள் விரும்பும் இடங்களில் குடியமர்த்துவார்களா என்பதில் எமக்குப் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

25 வருட வரலாற்றைக் கொண்ட இந்த யுத்தத்தில் நீண்டகாலமாக இடம் பெயர்ந்து இருத்தல் என்பது ஒரு பாரிய பிரச்சினை. ஆயிரக்கணக்கானவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் பின்னர் மீளவும் குடியேற்ற அனுமதிக்கப்படவில்லை. 1990 இல்தமது இருப்பிடங்களை விட்டுப் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இற்றை வரை முகாம்களிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.

வடக்கின் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம், மீள்கட்டுமானம் ஆகியவற்றிற்கும் கிழக்கின் அபிவிருத்தியைத் தொடர்வதற்கும், பல தசாப்தங்களாக போருள் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் மட்டுமன்றி இந்தப்பிரச்சினைக்கு எற்புடைய ஒரு தீர்வைக்காணவும் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரும் இப்பணவுதவி அவசியம் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

துரதிர்ஸ்டவசமாக இலங்கை அரசாங்கத்தின் நடைமுறையிலுள்ள கொள்கைகளும் நடைமுறைகளும் சர்வதேச நாணய நிதியத்தின் நோக்கங்களுக்கு எதிரானதாக இருக்கிறது.

முதலாவதாக, அரசாங்கம் வன்னியிலுள்ள மக்களின் உரிமைகளை அலட்சியம் செய்து வருகிறது. அவர்கள் பெருமளவில் இன ரீதியாகத் தமிழர்களாக உள்ளனர்.

போருக்குப் பின்னர் ஒரு நியாயமான அரசியல் தீர்வு காணப்படும் என்கிற நம்பிக்கை படிப்படியாக தமிழ் மக்களிடம் சிதைந்து போயுள்ளது. அரசாங்கம் வன்னிக்கான மனிதாய உதவிகளைத் தடுப்பதிலிருந்தும், புலிகளின் பிடியில் அகப்பட்டுள்ள மக்களை நோக்கித் தொடர்ச்சியாகச் செல் வீசுவதிலிருந்தும் காலவரையறை எதுவுமில்லாமல் இனக்கொலை முகாம்களில் அவர்களைத் தடுத்து வைத்திருப்பதிலிருந்தும் அரசாங்கத்தின் இந்தப்புறக்கணிப்பு வெளிப்படையாகத் தெரிகிறது.

இரண்டாவதாக, இடம் பெயர்ந்தவர்கள் தமது இருப்பிடங்களுக்குத் திரும்பும் உரிமையை மதிப்பதும் அதற்கு உதவியளிப்பதுமே மீள்குடியேற்றம் மீள்கட்டுமானம், புனர்வாழ்வு எனபவற்றினை வெற்றியளிக்கச் செய்யும். ஆனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இடம் பெயர்ந்த மக்களிடம் நம்பிக்கையைத் தோற்றுவதாக இல்லை என்பது மிக வெளிப்படையாகத் தெரிகிறது. இடம் பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் மற்றும் காயப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகள் மீதான மிக இறுக்கமான இராணுவக் கட்டுப்பாடுகளும் அரசாங்கத்தின் கடந்தகால நடவடிக்கைகளும் அதன் நோக்கம் குறித்த பல கேள்விகளை எழுப்புகிறது.

அரசாங்கம் ஆகக் குறைந்தது மிகக்குறைந்தளவிலாவது தனது அக்கறையை வெளிப்படுத்ததாதவரை இந்த அவசரகால உதவிப்பணம் மனிதாபிமானத் தேவைகளுக்காகப் பயன்படப் போவதில்லை என்று ஹியூமன் ரைட்ஸ் வாச் அமைப்பு நம்புகிறது.

இவ்வுதவிப்பணம் தவறாகப்பயன்படுத்தப்பட மாட்டாது என்றோ வீணடிக்கப்பட மாட்டாது என்றோ உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். இப்பணம் சரியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தவும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

போரில் ஈடுபடும் இரண்டு தரப்பும் சர்வதேச மனித நேயச் சட்டங்களைப் பின்பற்றுவதோடு வன்னியில் உள்ள மக்கள் வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று ஹியூமன் ரைட் வாச் வேண்டுகோள் விடுக்கிறது. விசேடமாக இலங்கை அரசாங்கம் பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்:

மனிதாபிமான நிறுவனங்கள் வன்னியில் பணியாற்ற செப்டம்பர் 15ஆம் திகதி அரசாங்கம் விடுத்த தடையை இரத்துச் செய்ய வேண்டும்.

இடம் பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் அடிப்படை உரிமைகள் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். இம்முகாம்கள் இராணுவக்கட்டுப்பாட்டிலிருந்து அரச அதிகாரிகளது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படல் வேண்டும். எல்லா இலங்கைப்; பிரசைகளுக்கும் இருப்பது போல நடமாடும் சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். தேவையற்ற இடர்ப்பாடுகளின்றி மனிதாய நிறுவனங்கள் அவர்களைத் தொடர்பு கொண்டு பணியாற்ற இடமளிக்கப்படல் வேண்டும்.

இதைவிட இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் உள்ளக இடம் பெயர்ந்தவர்கள் தொடர்பான அடிப்படைகளையும் பின்பற்ற வேண்டும். அவையாவன:

இடம் பெயர்ந்தவர்கள் சுதந்திரமாகவும் கௌரவத்துடனும் தமது இருப்பிடங்களுக்குத் தாமாகவே திரும்பிச் செல்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அல்லது நாட்டின் எப்பாகத்திலாயினும் அவர்கள் விரும்பிய இடங்களில் குடியேற அனுமதிக்கப்பட வேண்டும்.

இடம்பெயர்ந்த மக்கள் தமது சொத்துக்களை மீளப்பெற வழிவகை செய்யவேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு அதற்கீடான நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.

இடம் பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதற்கு ஏதுவான உதவிகளைப் புரிய சர்வதேச மனிதாய நிறுவனங்கள் பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டும்.

Comments