வன்னியில் கொத்துக்குண்டு எறிகணை, துப்பாக்கிச் சூடு, குறிசூட்டுத் தாக்குதல்கள்: 169 தமிழர்கள் பலி; 234 பேர் படுகாயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் 169 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 234 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிளில் உள்ள வாழ்விடங்கள் மீது சிறிலங்கா படையினர் கொத்துக்குண்டு எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி, ஆர்பிஜி உந்துகணை, கனரக துப்பாக்கி மற்றும் குறிசூட்டுத் தாக்குதல்களை இன்று சனிக்கிழமை அதிகாலை தொடக்கம் இரவு வரை அகோரமாக நடத்தினர்.

'பாதுகாப்பு வலய' பகுதிகளான வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, மாத்தளன் மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகள் மீது படையினர் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு இன்று நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே 169 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டும் 234 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர்.

காயமடைந்தவர்கள் மாத்தளன் மருத்துமனைக்கு கொண்டுசெல்ல முடியாதவாறு மருத்துவமனை வீதியில் தொடர்ச்சியாக எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன.

கடும் சிரமத்தின் மத்தியில் காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு பொதுமருத்துவமனை சிகிச்சை நிலையத்திலும் நட்டாங்கண்டல் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அநேகமானோர் படையினரின் கனரக துப்பாக்கி மற்றும் குறிசூட்டுத் தாக்குதல்களிலேயே காயமடைந்துள்ளனர் என்று புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலையில் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளையில் இன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் கூடுதலாக நடத்தியிருந்தனர் என்று புதினத்தின் வன்னிச் செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

பிந்திய 10 செய்திகள்

Comments