இரட்டைவாய்க்கால் சந்தி நோக்கி பாரிய படை நகர்வு: மூன்று நாள் கடும் சமரில் இதுவரை 500 படையினர் பலி

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இரட்டைவாய்க்கால் சந்தியை கைப்பற்ற சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நர்வு முயற்சிகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 500-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 600-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னி சமர்-கட்டளைப்பீட வட்டாரங்களின் தகவல்களை மேற்கோள் காட்டி 'புதினம்' வன்னிச் செய்தியாளர் தெரிவித்ததாவது:

புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு வீதியில் உள்ள இரட்டைவாய்க்கால் சந்தியை கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா படையினர் கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக - விடுதலைப் புலிகளின் முன்னரண்களை கைப்பற்றி இரட்டைவாய்க்கால் சந்திக்குள் நுழைய சிறிலங்காப் படையினர் மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

பீரங்கிகள், கனரக சுடுகலன்களின் தாக்குதல்கள் ஆகியவற்றை பக்க பலமாகக்கொண்டு முன்னேற முனையும் சிறிலங்கா படையினரை எதிர்கொண்டு, தொடர்ச்சியான எதிர்த்தாக்குதலில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளனர்.

தொடரும் சமரில் - இதுவரை - ஆகக் குறைந்தது 500 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 600 வரையானோர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

மேலும் - காயமடைந்தோரில் பெருமளவிலான படையினர் உடல் உறுப்புக்களை இழந்துள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments