புலிகள் கடலிலா? கடற்படையிடம் கடலா? சிங்களப்படையை அதிர வைக்கும் கடற்புலிகள்?

முல்லைத்தீவுக் கடற்பரப்பில் பாரிய கடற் சமர் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளதாக விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். 70 வரையிலான டோராக்கள் புடை சூழ துருப்புக் காவிக்கப்பலிலிருந்து பாரிய படையிறக்கம் ஒன்றை முள்ளிவாய்க்கால் பகுதியில்

மேற்கொள்ள முனைந்த கடற்படை மற்றும் ராணுவத்திற்கெதிராக விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்களைத் தொடுத்ததாக எமது விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நீண்ட நேரம் இடம்பெற்ற மோதலில் இரு தரப்பிலும் ஏற்பட்ட முழுமையான சேதவிபரங்கள் குறித்து கள முனையிலிருந்து சுயாதீனத் தகவல்கள் எதனையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

எனினும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு விடுதலைப் புலிகளின் கரும்புலி படகுகள் உள்ளிட்ட 6 படகுகள் தம்மால் அழிக்கப்பட்டதாகவும் இதில் 24 கடற்புலிகள் கொல்லப்பட்டதாகவும் அதன் உத்தியோகபூர்வ செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

ஆயினும் தமது கடுமையான தாக்குதலில் அரச கடற்படையினரின் 2 டோரா படகுகள் முற்றாக மூழ்கடிக்கப்பட்டதாகவும் மேலும் சில படகுகள் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தெரிய வருகின்றது. எனினும் இதனை விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புல்மோட்டையிலிருந்து பருத்தித்துறை முனை ஈறாக கடற்புலிகளும் அரச கடற்படையினரும் தொடர் சமர் ஒன்றில் ஈடுபட்டதாக கொழும்பின் பாதுகாப்புத் தரப்புத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

இந்தச் சமரில் இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தொலை தூரத்திற்கு துரத்திச் சென்று தாக்குதல்களை மேற்கொண்டதாக அந்த தகவல் தெரிவிக்கின்றது.

கடற்புலிகள் அரச கடற்படையினரை புல்மோட்டை வரை துரத்திச் சென்று தாக்குதல்களை நடத்தியதாகவும் பின்னர் புல்மோட்டையிலிருந்து பருத்தித்துறை முனை வரை கடற்புலிகளை கடற்படையினர் துரத்தித் தாக்கியதாகவும் கடற்புலிகள் ஆழ்கடலைத் தாண்டிச் சென்றவுடன் கடற்படையினர் பின்வாங்கியதாகவும் தெரிய வருகின்றது.

கடற்புலிகளின் வலு முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அரச பாதுகாப்புத் தரப்பிற்கும் இலங்கை அரசாங்கத்தின் உயர் பாதுகாப்புக் கவுன்சிலுக்கும் கடற்புலிகளின் இத்தகைய செயற்பாடுகள் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் உண்டு பண்ணியிருப்பதாக கொழும்பின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறுகிய நிலப்பரப்பிற்குள் முடக்கப்பட்டிருக்கும் விடுதலைப்புலிகள் எவ்வாறு தமது கடல்சார் நடவடிக்கைகளை மிகவும் சாதுரியமாக மேற்கொள்கிறார்கள் என்பது குறித்தும் கடற்புலிகளுக்கான கடற்கலங்கள் ஆயுதங்கள் எரிபொருட்கள் என்பவை எவ்வாறு எங்கிருந்து கிடைக்கப் பெறுகின்றன என்பது குறித்தும் பாதுகாப்புத் தரப்பு குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்டத் தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.

எது எப்படியிருந்த போதிலும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் யுத்தச் செய்திகளை முழுமையாக இருட்டடிப்புச் செய்வதினாலும் தமது யுத்த செய்திகள் சந்திக்கு வருவது தமது பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் கருதுவதனாலும் இவ்வாறான செய்திகளுக்கான மூலங்கள் அல்லது ஆதாரங்களும் மறைக்கப்பட்டுவிடுகின்றன.

Comments