நியூசிலாந்தில் தமிழ் மக்கள் தொலைக்காட்சியை முற்றுகையிட்டுப் போராட்டம்

நியூசிலாந்துவாழ் தமிழ் மக்கள் இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டம், மற்றும் முற்றுகைப் போராட்டம் என்பவற்றை நடத்தியுள்ளனர்.

வன்னியில் தமிழ் மக்களின் வாழ்வுரிமை மறுக்கப்பட்டு, குழந்தைகள், சிறுவர், கண்பிணிப் பெண்கள், தாய்மார், மூதாளர் என அகவை வேறுபாடின்றி சிறீலங்கா அரச பயங்கரவாதத்தினால் பொதுமக்கள் நாளாந்தம் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த மக்கள் தொடர்பாக அனைத்துலக சமூகம் கவனம் கொள்ளாது இருப்பதுடன், மேற்குலக ஊடகங்களும் கண்டு கொள்ளாமல் இருப்பதைக் கண்டித்து ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் நாளாந்தம் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இன்று நியூசிலாந்துவாழ் மக்கள் ஓக்லண்ட பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாலை 3:00 மணி முதல் 5:30 மணிவரை நடபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, சில கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த TV NZ தொலைக்காட்சி அமைவிடத்திற்குச் சென்ற மக்கள் அங்கு முற்றுகைப் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அந்த தொலைக்காட்சி நிருவாகத்தினர் வெளியே வந்து தமிழ் மக்களின் கோரிக்கை பற்றிக் கேட்டறிந்ததுடன், அவர்களிடம் இருந்த காணொளி, மற்றும் சில ஆவணங்களையும் பெற்று, அவற்றை தமது தொலைக்காட்சியில் அவற்றை ஒளிபரப்புவதாக உறுதியளித்துள்ளனர்.

Comments