தனித் தமிழீழத்தை இலங்கை அரசு அங்கீகரிக்க வேண்டும்: தென்னாபிரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்

தனித் தமிழீழ இராச்சியத்தை இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டுமென தென் ஆபிரிக்க ஆளும் கட்சியான ஏ.என்.சீயின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசா நெஜிகெல்னா தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் நிரந்தர யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதன் மூலம் தமிழர் உரிமைகளை மறுக்க முடியும் என இலங்கை அரசு கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தென் ஆபிரிக்காவில் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் பிரதிநிதியென்ற வகையில் இலங்கை ஜனாதிபதியிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கத் தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

· நிரந்தர யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும்

· சமாதான உடன்படிக்கை மீள அமுல்படுத்தப்பட வேண்டும்

· மனிதாபிமான உதவிகள் தடையின்றி கிடைக்க வழி ஏற்படுத்தப்பட வேண்டும்

· யுத்த வலயத்திற்கு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்

· இலங்கையின் சகல பாகங்களிலும் ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்பட அனுமதியளிக்கப்பட வேண்டும்

உலகக் கிராமத்தின் ஓர் அங்கம் என்ற வகையில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழர் உரிமைகளுக்காக கடந்த காலங்களில் வெற்றிகரமாக குரல் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தின் பலம்பொருந்திய நாடு என்ற ரீதியில் இந்தியா அரசாங்கம் இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டுமென சிசா நெஜிகெல்னா குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு சகல புலம்பெயர் தமிழர்களும் ஆதரவளிக்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்புத் தலைவர்கள் தமிழர்களை இல்லாதொழிக்கும் முயற்சிகளை முதன்மைபடுத்தி செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments