பிரித்தானியாவில் தமிழர்களின் தொடர் போராட்டம் முக்கிய திருப்பத்தில்

பிரித்தானியாவில் நான்காவது நாளாக உணர்வெளிச்சிவுடன் இடம்பெற்று வரும் போராட்டத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுபப்பினர் சைமன் குரூஸ் அவர்கள் கலந்து கொண்டு பிரித்தானிய அரசாங்கம் இதுதொடர்பில் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள்.

பிரித்தானிய அரசாங்கம் மாணவர்களுடன் இணைந்து நாளையில் இருந்து எதிர்வரும் 10 நாட்களுக்குள் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மூன்று மாணவர்கள் வீதம் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஒரு குழுவும் மற்றைய குழு பெல்லியத்தில் ஐரோப்பிய ஆணையகத்திற்கும், மூன்றாவது குழு பிரித்தானியாவில் கொமன்வெல்த்திற்கும் சென்று போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் பொதுவான அடிப்படையில் தீர்வினை எய்துவதற்கான சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நியூயோர்க் செல்லும் மாணவர் குழுவில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடும் சிவா என்ற இளைஞர் செல்லவிருப்பதாகவும் மற்றய மாணவர்கள் பற்றிய விபரங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்கு முன்பாக அமைந்துள்ள சதுக்கத்தில் இடம்பெற்றுவரும் இப்போராட்டத்தை மாணவர்கள் விரும்பினால் எதிர்வரும் செவ்வாய் வரை பாராளுமன்ற சதுக்கத்தில் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குவதாகவும் அதன்பிற்பாடு அதற்கு அருகில் அமைந்துள்ள தேவாலய பகுதியில் உள்ள மைதானப்பகுதியில் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை பொதுவான போராட்டங்களில் தமிழர்களின் சின்னமான புலிக்கொடி போன்றவற்றை பாவிப்பதற்குகான அனுமதியை நீதிமன்றம் மூலம் எடுப்பதற்கும் மற்றும் இதன்மூலம் விடுதலைப்புலிகளின் தடையை எடுப்பதற்கும் வழிவகைகள் செய்ய முடியும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஐந்து அம்சக் கோரிக்கை:

1) சிறிலங்காவில் உடனடியாக நிரந்தரமான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்

2) ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்கீ மூன் அல்லது பிரித்தானியப் பிரதமர் கோடன் பிறவுண் தங்களை நேரில் சந்தித்து தமிழர்களின் இனப்பிரச்சினை குறித்து பரிசீலித்து உறுதிமொழி வழங்க வேண்டும்

3) வன்னியில் உள்ள மக்களுக்கு உடனடி உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும்

4) இலங்கையில் தமிழர்கள் சிங்கள மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வதா அல்லது தனித்து நாடு அமைப்பதா என்பதை அறிய ஐ.நாவின் ஏற்பாட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்

5) தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும்

Comments