சதிவலை விரிக்கும் சிங்களம்! சரித்திரம் படைக்கும் தமிழினம்!

புலிகளுக்கு "பயங்கரவாதிகள்" என பட்டங்கொடுத்து புலிகளை முற்றாக அழித்து தமிழர்களின் தலைமையை இல்லாதொழித்து அதன்பின் புலிகளின் நாமம் அறவே இல்லாத தன் கைப்பொம்மையாகவே எப்பொழுதும் இருக்கக்கூடிய ஒரு தமிழர் தலைமையை உருவாக்கி அதன்மூலம் தன் இஷ்டப்படி மிகவும் கீழ்மட்டமான தீர்வொன்றினை தமிழர்மேல் திணிப்பதே சிங்கள அரசின் திட்டம்.

ஆனால் அதன் திட்டத்தை தவிடுபொடியாக்கி வருகிறது தமிழர்சேனை. வன்னிக் களத்தில் தம் வெற்றிக்கு தேதி குறித்து இறங்கிய சிங்களத்தால் இன்றுவரைக்கும் அதை எட்டிப்பார்க்கக் கூட முடியவில்லை. புலிகளை அழிக்கவும் வன்னி மக்களை தன் பக்கம் இழுக்கவும் அது போட்டிருந்த திட்டம் துளியளவேனும் ஈடேறவில்லை.

இது இவ்வாறிருக்க சர்வதேச நாடுகள் அனைத்தும் தன் பக்கமே இருக்கின்றன என்ற சிறீலங்கா அரசின் நினைப்பிலும் மண்ணள்ளிப் போட்டிருக்கின்றார்கள் உலகத் தமிழர்கள். உலகம் பூராவும் பரந்துவாழும் தமிழர்கள் அனைவரும் பேரெழுச்சி கொண்டு பொங்கியெழுந்திருக்கும் நிலையில் சர்வதேசம் அவர்களின் குரல்களை செவிமடுக்கத் தொடங்கியிருக்கின்றது.தமிழர்களின் ஒன்றுதிரண்டு ஓங்கியெழுந்த எழுச்சிக் குரலினை தட்டிக்கழிக்க அதனால் முடியவில்லை.

சிங்கள அரசு தமிழர்மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறைகளையும் தமிழர் பக்கமுள்ள நியாயப்பாட்டினையும் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளது சர்வதேசம். வன்னிக்களத்தில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் யாவும் தோல்வியை நோக்கிச் செல்ல ஆரம்பிதிருக்கின்றன. வெற்றிகள் தன்னை விட்டு தூரத்தள்ளிச் செல்கின்றது என்பதை சகித்துக்கொள்ள முடியாத சிங்களம் தற்போது தனது பாரம்பரிய ஆயுதமான சூழ்ச்சி வலையை தமிழர்கள் மீது விரித்திருக்கின்றது.

இப்பொழுது சிறீலங்கா அரசிற்கு பெரும் தலைவலியை கொடுத்து வருவது சர்வதேச ரீதியிலான தமிழ்மக்களின் போராட்டங்கள்தான். ஆதலால் தமிழ் மக்களின் எழுச்சிப் போராட்டங்களை குறிவைத்து தனது சூழ்ச்சி வலையை போட மும்முரமாக முனைந்திருக்கின்றது சிங்களம். தமிழர்களின் போராட்டங்களை சீர்குலைத்து அவர்களின் முக்கிய வெளிப்பாடான "தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்" என்ற நிலைப்பாட்டை மாற்றி தனக்குச் சாதகமான "மாற்றுத் தலைமைத்துவம்" ஒன்றினை உருவாக்குவதே அதன் சதித் திட்டத்தின் முக்கிய நோக்கம்.

அதன் ஆரம்பமாகத் தான் தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பேசுவதற்கு வருமாறு இலங்கை ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஸ அழைப்பு விடுத்திருந்தார். ஆனால். தமிழ்க் கூட்டமைப்பினர் அதை முற்றாக நிராகரித்திருந்தனர். இதை சற்றும் எதிர்பாராத சிங்கள அரசு புலிகளை ஓரங்கடுவதற்கும் தமிழர் போராட்டங்களை சீர்குலைப்பதற்கும் வேற்று வழியை தேடியது.

அதன்படி புலம்பெயர் தமிழர்களில் இருந்தே சில "காக்கை வன்னியர்களை" விலை கொடுத்து வாங்கியிருக்கின்றது சிங்களம். தமிழர் எழுச்சிப் போராட்டங்கள் எங்கெங்கெல்லாம் பேரெழுச்சியோடு நடக்கின்றதோ அங்கெல்லாம் இருந்து இந்த "கறுத்த ஆடுகளை " விலைக்கு வாங்கியிருக்கின்றது மஹிந்த அரசாங்கம். இந்த "காக்கை வன்னியர்கள் " கடந்த வாரம் "புலம்பெயர் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள்" என தங்களைத் தாங்களே கூறிக்கொண்டு சிறீலங்கா அரசின் சிறப்பு விருந்தினர்களாக சென்று ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஸவின் சகோதரர் பசில் ராஐபக்ஸவை சந்தித்து பேசி திட்டமிட்டு திரும்பியிருக்கின்றார்கள்.

போராட்டங்கள் நடத்தப்படுவதை இயன்றவரை தடுக்கவும் தமிழர் எழுச்சிப் போராட்டங்களை திசை திருப்பவும் ஈழ விடுதலைக்கு எதிரான கருத்துக்களை பரப்பவும் புலிகளையும் மக்களையும் வேறுவேறானவர்கள் என சித்தரிக்கவும் சிங்கள அரசின் பொய்ப் பரப்புரைகளை பிரச்சாரப் படுத்துவதற்கும் இவர்கள் சிங்கள அரசிடம் உறுதியளித்திருக்கின்றார்கள் என்று நம்பப்படுகிறது. அதற்காக இவர்களுக்கு பெருமளவில் பணமும் சலுகைகளும் சிங்கள அரசினால் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

கடந்த காலங்களில் இப்படித்தான் "தமிழினத் துரோகிகள்" விலைக்கு வாங்கப்பட்டார்கள். உங்கள் தாயக உறவுகளின் அவலங்களை கண்ணுற்று தாங்கொணாமல்.. அவ்வுறவுகளின் அவலத்தினைப் போக்கவும் தமிழீழ தேசத்தின் விடுதலைக்காகவும் ஒரு கொடியின் கீழ் ஒன்றுதிரண்டு வரலாறு காணாத எழுச்சி கொண்டிருக்கும் உலகத் தமிழினமே!!! உங்களுக்குள் இருக்கும் தன்மானமிக்க எழுச்சியுணர்வை இல்லாதொழிக்க உங்களுக்குள்ளேயே ஊடுவியிருக்கின்றார்கள் இந்த காக்கை வன்னியர்கள்.

"காக்கை வன்னியன்" என்ற ஒரு துரோகியின் துரோகத்தனத்தால்தான் யாருக்குமே அடிபணியாமல் இருந்த அன்றைய வன்னி இராச்சியம் வீழ்ந்தது. இப்போதும் அந்த வன்னிமண் சிங்கள வல்லாதிக்கத்தின் பெரும் படையெடுப்புக்கு முகங்கொடுத்திருக்கும் தருணத்தில் நேரடியாக வெல்ல இயலாத சிங்களம் இந்த "காக்கை வன்னியர்கள் " எனும் விஷக்கிருமிகளை உலகத் தமிழர்களுக்குள் ஊடுருவ விட்டிருக்கின்றது

சில ஊடகங்கள் கூட இத்துரோகச் செயலை முன்னெடுப்பதற்கான காவிகளாக செயற்படுகி்ன்றன. ஊடகம் என்பது பொதுக்கழிப்பறை அல்ல கண்டதையும் எழுதவும் பேசவும். அது ஒரு தனி மனிதனின் சுய விருப்பு வெறுப்புகளை எழுதும் நாட்குறிப்போ அல்ல. ஊடகம் என்பது ஒரு சமூகத்தின் குரல். இனத்தின் அடையாளம். இதில் வேதனை என்னவென்றால் சில தமி்ழ் உணர்வுமிக்க வியாபார நிறுவனங்கள் கூட இவ்வாறான ஊடகங்களுக்கு ஆதரவளித்து வருவதுதான்.

எங்கள் உறவுகளின் அவலங்கள் தொடர்பான செய்திகளை தணிக்கை செய்பவர்களையும் நம் இனத்துக்காக உயிர்கொடுத்து மடியும் உன்னதமானவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் செயலையும் செய்பவர்களை இனங்கண்டு புறக்கணிப்பது எங்கள் எல்லோரினதும் கடமையும் உரிமையும் ஆகும். துரோகத்தனத்தின் சதிவலை நாடகங்கள் ஏற்கனவே பல இடங்களில் அரங்கேறத்தொடங்கி விட்டன.

அண்மைக் காலங்களில் பல சர்வதேச நாடுகளில் நடத்தப்பட்ட எழுச்சிப் பேரணிகளில் முன்னின்று செயற்பட்டவர்களிற்கு மிரட்டல் தொனியிலான அநாமதேய தொலைபேசி அழைப்புக்களும் மொட்டைக் கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன. அவை அனைத்துமே இப்படிப்பட்ட தமிழினத் துரோகிகளினாலேயே அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் இவ்வாறான துரோகத்தனமான செயற்பாடுகள் இனிவரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கும் என்பது நிச்சயம். ஆயினும் இவ்வாறான மிகக் கேவலங்கெட்ட துரோகச் செயற்பாடுகளுக்கு தன்மானமிக்க தமிழர்கள் எவரும் அஞ்சி அடிபணியப் போவதில்லை என்பது உறுதி.

தடைகளை தாண்டும் போது தான் உத்வேகம் பிறக்கும்.ஓர்மம் வளரும்.செயற்பாடுகளில் புது வேகம் பிறக்கும். அத்துடன் உலகம் பூராவுமுள்ள தமிழ் மக்களின் கைகளில் தமிழீழ தேசத்தின் விடிவுக்கான மிக முக்கியமான பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில் இவ்வாறான துரோகிகளின் சதிவலைக்குள் விழாமல் தங்களது போராட்டத்தினை இன்னும் உத்வேகத்துடன் முன்னெடுக்க வேண்டியது அவர்களின் கடமையாகிறது.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல இடங்களில் துரோகத்தனங்களை சந்தித்து அவற்றையெல்லாம் வெற்றிகரமாக எதிர்கொண்டிருந்தாலும்... இப்பொழுது சிங்கள அரசினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த "கறுத்த ஆடுகள்" குறித்து தமிழர்கள் மிக விழிப்புடன் இருப்பது மிக அவசியம். அவர்கள் யார் யார் என கண்டறிந்து அவர்களை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் வைத்து அவர்களை ஓரங்கட்ட வேண்டும் என்பதும் தமிழ் மக்கள் அனைவரும் காலத்தின் தேவையறிந்து செய்யவேண்டிய கடமையாகும்.

வன்னி மக்கள் சிதறிச் சின்னாபின்னமாகி சிந்தும் இரத்தத்தினால் தங்கள் வீட்டுக்கு கோலம் போட்டு அலங்கரிப்பவர்கள் இந்த தன்மானமற்ற தமிழினத் துரோகிகள். தமிழ் மக்களின் அழுகுரல்களையும் அவலக்குரல்களையும் இன்னிசையாக இரசிக்கும் இரக்கமற்ற ஜீவன்கள். குறுகிய சுயநல நோக்கங்களுக்காக தமது தாய்நாட்டையே ஏலம்விடத் துணிந்த ஈனப்பிறவிகள் இவர்கள்.

தமிழர்களின் தன்மானத்தினை விலைபேசி விற்க இவர்கள் யார்???

தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிகொள்ள இந்த புல்லுருவிகளுக்கு என்ன அருகதை இருக்கின்றது???

சிங்களத்தோடும் அதன் நாசகாரக் கூட்டத்தோடும் சேர்ந்துகொண்டு தமிழரின் தாயகத்தினை அடகுவைக்க இவர்கள் யார்???

ஒரு மாவீரனின் தியாகத்தில் இலட்சத்தில் ஒருபங்கு தியாகத்தினையேனும் தமிழ்மண்ணுக்காக செய்திருக்கின்றார்களா இவர்கள்???

இவர்கள் மட்டில் அனைத்துத் தமிழரும் சிந்திக்க வேண்டிய விடயங்கள் இவை. வரலாற்றில் மன்னிக்கவே முடியாத துரோகத்தனத்தினை புரிந்து கொண்டிருக்கும் இவர்கள் தமிழ் சமூகத்திலிருந்து முற்றிலுமாக புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள்.

உங்களது போராட்டங்களை மேன்மேலும் வீரியத்துடனும் உத்வேகத்துடனும் முன்னெடுத்து இந்த தமிழினத் துரோகிகளின் முகத்திலும் சிங்கள வல்லாதிக்கத்தின் முகத்திலும் கரியை பூசுங்கள்!

"தமிழர்களின் தாகமே தமிழீழம்"

"தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் விடுதலைப் புலிகள் மட்டுமே" என்று உரக்கக் கூறுங்கள்!!

தமிழீழத் தாயகத்தின் விடுதலையை விரைவுபடுத்துங்கள்!!!

" உலகத்தமிழினமே எண்ணிப்பார்! - நீ உறங்கினால்வரலாற்றில் யார் உன்னை மன்னிப்பார்???"

- பருத்தியன்-

நன்றி

ஈழமுரசு (28.03.2009)

Comments

நன்றிகள் பல.
எனது ஆக்கங்கள் பலரை சென்றடைவதற்கு உதவி செய்கின்றீர்கள்.அதற்காக நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
-பருத்தியன்-
www.paruththiyan.blogspot.com
paruththiyan@gmail.com
உங்கள் கட்டுரைகள் நன்றாக இருக்கின்றன

நன்றிகள்