தனி ஈழம் - சிங்களர்கள் கேட்க வைத்தார்கள்



அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் நிலை; ஆற்றொணாத் துயர்; அரச பயங்கரவாதச் சிங்கள இராணுவத்தினால் உயிர்களைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கும் மக்கள்; உண்ண உணவில்லை; உடல்மறைக்கத் துணியில்லை; உற்றார் பெற்றோர் உறவினர்கள் அருகில் இல்லை; வீடில்லை, விளக்கில்லை, வெந்த புண்ணுக்குத் தடவ மருந்துகூட இல்லை - ஆம்! இதுதான் இன்று ஈழத்தின் நிலை, ஈழ மக்களின் நிலை!

ஏறத்தாழ எல்லா அரசியல் கட்சிகளுமே ஈழ மக்களுக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடத்திவிட்டன - தமிழ்நாட்டில்! காங்கிரஸ் கட்சியினரே, இலங்கையின் ஒற்றுமை, ஒருமைப்பாடு என்று பேசிவிட்டு, திடீரென்று ஈழ மக்களுக்காக நிதி திரட்டத் தொடங்கிவிட்டார்கள். ‘போர் என்று வந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள், இலங்கை என்ற நாடுதான் உள்ளது; ஈழம் என்று சொல்லக்கூடாது’ என்று சொல்லி ஈழ மக்களுக்காகக் குரல் கொடுக்க முன்வராமல் இருந்த செல்வி ஜெயலலிதா திடீரென்று அறிவித்துவிட்டார், இலங்கை அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட சுயநிர்ணய அதிகாரம் பெற்ற ‘தமிழர் நாடு’ அமைவதை ஆதரிப்பதாக. புரியாவிட்டாலும் பரவாயில்லை. ஏதோ சொல்லியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் திடீர் நிதிதிரட்டலுக்கும், ஜெயலலிதாவின் திடீர் இ.அ.ச.உ.சு.அ.பெ. தமிழர் நாடு அறிவித்தலுக்கும் காரணமான நம் தேர்தல் ஆணையத்திற்கு முதலில் நம் நன்றியைச் சொல்லுவோம். அதுசரி, அதென்ன இலங்கை அரசமைப்புச் சட்டம், சுயநிர்ணய அதிகாரம்? ஜெயலலிதா பக்கத்தில் இருக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஒருவேளை புரிந்திருக்குமோ என்னவோ!

‘தேசியச் சிறுபான்மை இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும்’ என்று கார்ல் மார்க்ஸ் சொல்லி இருக்கிறார். அதாவது ஒரு நாட்டில் இருக்கும் தேசியச் சிறுபான்மை இன மக்கள், அவர்களின் உரிமையை அவர்களே முடிவு செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, இலங்கைத் தீவில் தமிழர்கள் இன்று தேசியச் சிறுபான்மை இன மக்களாக இருக்கிறார்கள். அவர்கள் சிங்களத் தேசிய இன மக்களின் அரசாகிய இலங்கை அரசுடன் இணைந்து இருப்பதா அல்லது தனியாகப் பிரிந்து போய்விடுவதா என்பதை அந்த மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களின் முடிவு அங்கீகரிக்கப்பட வேண்டும். இதுதான் தேசியச் சிறுபான்மை இனத்தின் சுயநிர்ணய அங்கீகாரம்.

ஈழ மக்களின் முடிவு? எல்லோருக்கும் தெரிந்ததுதான். தனிஈழம் - தமிழ்ஈழம். இங்கே சில செய்திகளைப் பார்ப்போம்.

1919 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள் இலங்கையில், இலங்கை தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பபைத் தொடங்குகிறார் சர். பொன். அருணாசலம். இந்தக் காங்கிரஸ் பின்னாளில் ஐக்கிய தேசியக் கட்சியாக மாறியது. சர். பொன். அருணாசலம் 1875 இல் இலங்கையின் முதல் பதிவாளர் நாயகமாகப் பதவி வகித்தவர். 1907 ஆம் ஆண்டும், 1912 ஆம் ஆண்டும் இலங்கைவாழ்த் தமிழர்கள் சார்பாக, இருமுறை சட்டமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றவர். இவரைப் பற்றி இலங்கையின் வரலாற்றிசிரியர் கே. எம்.டி. சில்வா, ‘மிக உயர்ந்த அரச அதிகாரியான அருணாசலம் அதிகம் பேசுவதில்லை. ஆனால் அற்புதமாகத் தமிழ் மக்களுக்குச் சேவை செய்திருக்கிறார். சிங்கள மக்களுக்கும் அவர் சேவை செய்திருக்கிறார். அவரைப் போல வேறு யாரும் சிங்களர்களுக்கு இப்படிச் சேவை செய்ததில்லை’ என்று எழுதி இருக்கிறார்.

இப்படிப்பட்ட தமிழர் தலைவர், 1919 இல் இலங்கை தேசியக் காங்கிரசை, தமிழர் - சிங்களவர்களை இணைத்துத் தொடங்கினார். இதைப் பொறுக்கமாட்டாத சிங்கள இனவாதத்தலைவர்கள் சிலரால் தூண்டப்பட்ட கண்டியைச் சேர்ந்த டி.பி. எல். மூனமலே, ஜெ. ஏ. ஹலல்கொட, ஜி. மடவெல ஆகியோர் அடங்கிய மூவர் குழு லண்டன் சென்று காலனி நாடுகளின் செயலாளர் மில்லரைச் சந்தித்தனர். இலங்கை தேசிய காங்கிரஸ், நாட்டில் உள்ள அனைவருக்காகவும் ஏன் தேவைப்படுகிறது என்பதை அறியாமல் காங்கிரசுக்கோ அல்லது அதன் தலைமைக்கோ (சர். அருணாசலம்) அங்கீகாரம் கொடுக்கக்கூடாது என்று சிங்களர்களுக்கான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். இச்செய்தி இலங்கை ஆளுநர் மானிங்ஸ் மூலமாக சர். அருணாசலத்திற்கு வரவே, உடனே அவர் காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டு வெளியேறினார். தொடர்ந்து சிங்களத் தலைவர்களிடையே நிலவும் அதிருப்தி, தமிழர்களுக்கு எதிரான அவர்களின் செயல்களைக் கண்ட சர். அருணாசலம், அவரின் தமையன் பொன். இராமநாதனுடன் இணைந்து 1923 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர் மகாசபை என்ற அமைப்பைத் தொடங்கினார். மகா சபையின் தொடக்கவிழாவிலேயே சர். அருணாசலம் இப்படிப் பேசினார், ‘சிங்களத் தலைவர்களுடன் ஒத்துப்போக முடியும் எனத் தோன்றவில்லை. தமிழர் தன்மானத்துடன் வாழத் தனி ஈழம் தான் வழி. அதுதான் இனி நமது இலக்கு. அதனை அடையத் தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமை, தோழமை அவசியம். நமது இலக்கை விளக்கி நாடெங்கினும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.’

இலங்கையில், தமிழர்களுக்குத் தனி ஈழம் தான் வேண்டும், அதைப் பெற என்ன செய்ய வேண்டும் என்று 86 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்பதற்கு சர். அருணாசலம் சான்று! இது அவர்களின் உரிமை, சுயநிர்ணய உரிமை.

அடுத்து, தந்தை செல்வா. இவர் 1949 டிசம்பர் 18 ஆம் நாள் தமிழ் மக்களுக்குச் சம உரிமை; இன்றேல் தமிழ்ப்பகுதிகளைத் தனிமாநிலமாக்கி இலங்கையை இணைப்பாட்சி நாடாக்குவோம் என்ற முழக்கத்துடன் முருதானை அரசாங்க லிகிதர் சேவைச் சங்க மண்டபத்தில் தமிழரசுக் கட்சியைத் தொடங்கினார். அவரே அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1951 ஆம் ஆண்டு முதல் முறையாக, தமிழ் மக்கள் தனித்தேசிய இனம், சுயநிர்ணய உரிமையுள்ள தன்னாட்சி அமைப்பின் கீழ்தான் அவர்கள் தன்மானத்துடன் வாழமுடியும் என்று பிரகடனப்படுத்தினார்.

1969 ஏப்ரல் 15 ஆம் நாள் கொழும்பில் இருந்து வெளிவரும் தமிழ்நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் ‘இலங்கை இப்போதிருக்கும் கோலத்தில் சிங்கள மக்கள் யாரும் எமக்குச் சுயாதீனம் கொடுக்க ஆயத்தமாக இல்லை. அதுபோலத் தமிழ்மக்கள் விடாப்பிடியாகச் சுயாதீனம் கோரி நிற்க வேண்டும். உலகில் என்னென்ன மாற்றங்கள் வரக்கூடும் என்று கூறமுடியாது. இறுதியில் இலங்கை அரசாங்கமே தமிழ்ப் பிரதேசத்திற்குச் சுயாதீனம் அளிப்பதே அப்பிரதேச மக்களுக்கும், ஏனையோருக்கும் உண்மையான சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரே வழி என்பதை உணரக்கூடும். அந்த நாள் வரும் வரைக்கும் நாம் பொறுமை இழக்காமலும் இலக்கைக் கைவிடாமலும் இருக்க வேண்டும்’ என்று உறுதியாகச் சொல்லி இருக்கிறார் தந்தை செல்வா அவர்கள்.

இது ஒருபுறம் இருக்க, ஏன் இவர்கள் இப்படித் தனிஈழம் என்ற இலக்கை நோக்கித் தள்ளப்பட்டார்கள்?

இலங்கைக்குச் சுதந்திரம் கொடுக்க பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. அதனால் 26.05.1943 இல் இலங்கைத் தலைவர்களிடம், அரசு, அரசியலில் எத்தகைய மாற்றங்கள் தேவை என்பதற்கான பரிந்துரைகளை அறிக்ககையாகத் தரும்படியும், அதையும் இலங்கைச் சட்டமன்றச் சபாநாயகர் மற்றும் 3 வெள்ளையர் பிரதிநிதிகள் நீங்கலாக 75 விழுக்காடு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதலுடன் அவ்வறிக்கை இருக்க வேண்டும் என்றும் பிரிட்டிஷ் அரசு கூறியது. அதன்படி அறிக்கையும் தந்தார்கள் இலங்கைத் தலைவர்கள். அதில் திருப்தி அடையாத பிரிட்டிஷ் அரசு, சோல்பரி என்பவரின் தலைமையில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்பியது. அதை சோல்பரி ஆணையம் என்பார்கள். இவ்வாணையத்தைச் சிங்களவர்கள் எதிர்த்தார்கள்.

ஏனென்றால் பெரும்பான்மைச் சிங்களவர்களின் ஆதிக்கம், சிறுபான்மை மக்களிடம் ஏற்பட்டு விடக்கூடாது, அதைச் சிங்களத் தலைவர்கள் திணித்துவிட வழிவிடக்கூடாது என்று சோல்பரி நினைத்தார். ஆகவே சட்டசபையின் 75 சதவீத உறுப்பினர்கள் என்பதில் சிறுபான்மைத் தமிழர்கள், இஸ்லாமியர் பலரும் சமமாக இடம்பெறச் சட்டவடிவு பெறவேண்டும் என்பது சோல்பரியின் திட்டம். இதனை அறிந்த சிங்களத் தலைவர்கள் சோல்பரியிடம் நாடகமாடியும், சர். பொன். அருணாசலம், சர். பொன். இராமநாதன் ஆகிய தமிழர் தலைவர்களிடம் நயவஞ்சகப் பொய்வாக்குமூலம் அளித்தும், மேற்சொன்ன 75 சதவித பெரும்பான்மை என்பது சட்டவடிவம் பெறாமல் சோல்பரி அறிக்கையின் 29 ஆம் சரத்தோடு அது நின்றுவிட்டது.

அதன் விளைவு என்ன தெரியுமா? சுதந்திர இலங்கையின் முதல் சட்டங்களாக நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம், வாக்குரிமைச் சட்டங்களால் தமிழர்கள் நடுத் தெருவுக்குத் தள்ளப்பட்டார்கள். இலங்கையின் பொருளாதார முதுபெலும்பாகத் திகழ்ந்த மலையகத் தமிழர்களின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டன. அவர்களின் குடியுரிமையும் பறிக்கப்பட்டு நாடற்றவர்கள் ஆக்கப்பட்டார்கள். நிலச்சீர்திருத்தம் என்ற பெயரால் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுச் சிங்களவர்களுக்கு இலவச நிலங்கள் கொடுக்கப்பட்டன. மீன்பிடிப் படகுகள் சட்டம், ஆம்னி பஸ் உரிமைச்சட்டங்களின் மூலம் தமிழர்கள் (குறிப்பாக இந்தியத் தமிழர்கள்) படகு உரிமை பெறவும், ஆம்னி பஸ் உரிமை பெறவும் தடுக்கப்பட்டார்கள். சிங்களவர்களே இதில் பொரும் பயன் அடைந்தார்கள்.

சோல்பரி அறிக்கையின் 29 ஆம் விதியை மீறிய சிங்கள இனவெறி ஆதிக்கத்தைக் கண்ட சோல்பரி பிரபுவே இதனைப் பார்த்து மனம் நொந்து போனார் என்று காலம் சென்ற மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கார்மேகம் கூறுகிறார். அதைத் தொடர்ந்து தமிழரை ஒழிக்கத் தமிழைப் புறக்கணித்துச் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்ற நிலைப்பாட்டிற்குச் சிங்களத் தலைவர்கள் வந்தார்கள்.

1955இல் யாழ்ப்பாணம் சென்று கொழும்பு திரும்பிய அன்றைய பிரதமர் சர் ஜான் கொத்தலாவல தமிழுக்குச் சம வாய்ப்புக் கொடுக்கப்படும் என்று கூறிவிட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரி 6 ஆம் நாள், களனியில், அவரது ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானமாகச் சிங்களமே ஆட்சிமொழி என்ற தீர்மானத்தைப் பிரகடனமாக்கினார்.

1956 தேர்தலைச் சந்தித்த எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கா தாம் ஆட்சிக்கு வந்தால் 24 மணிநேரத்தில் சிங்களத்தை ஆட்சிமொழி ஆக்குவோம் என்று கூறி ஆட்சியைப் பிடித்தார். அவருக்கு ஆதரவாக பிலிப்குணவர்தன, ஈறிய கொலை, ஆர்.ஜி. சேனநாயகா போன்ற பொது உடைமை பேசும் இடதுசாரிகளும், சிங்கள பாஷா (மொழி) பெரமுனத் தலைவர் டபிள்யூ. தகநாயகாவும், தலைமை பவுத்த பிக்கு குருபுத்ரசித்த தேரோ போன்ற சிங்கள இனவாதிகளும், தமிழுக்கு எதிராக சிங்களத்திற்கு ஆதரவாகக் களத்தில் இறங்கினர். சொன்னபடி செய்தார் பணடாரநாயக்கா. 1956 ஜீலை 7 ஆம்நாள் கவர்னர் ஜெனரலின் ஒப்புதல் பெற்று தனிச்சிங்களம் ஆட்சி மொழிச் சட்டத்தை நிறைவேற்றினார்.

இதுகுறித்துச் சிங்கள இடதுசாரி முக்கியத் தலைவரான கொல்வின் ஆர்.டி. சில்வா கருத்துக் கூறும்போது ‘ஒரு மொழி என்றால் இரண்டு நாடுகள். இரண்டுமொழி என்றால் ஒரு நாடு. தனிச்சிங்களச் சட்டத்தின் மூலம் தனித்துவமும், சிறந்த பாரம்பரியமும் கொண்ட தமிழ் மக்களை அடக்கி ஒடுக்க முற்படுவீர்களானால் அவர்கள் புதிய தேசம் அமைத்துக் கொள்ள நீங்களே காரணமாகி விடுவீர்கள். இப்போது அவர்கள் கேட்பதை விட, பிறகுக் கூடுதலாகக் கேட்பார்கள். அதற்கு நீங்கள் உடன்பட வேண்டி இருக்கும்’ என்று எச்சரித்தார்.

கவனத்தீர்களா! தனிச் சிங்களச் சட்டத்தினால் தமிழர்கள் இரண்டாந்தர மக்களாக்கப்பட்டதை உணர்ந்த சில்வா, தமிழர்கள் புதிய தேசத்தைக் (தனிஈழம்) கேட்பார்கள் என்று 1956 ஆம் ஆண்டே கூறிவிட்டார்.

இவைமட்டுமா!

- பண்டா - செல்வா ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது சிங்களர்களால்
- மோட்டார் வாகன இலக்கத் தகடுகளில் சிங்களத்தில் ஸ்ரீ போடவேண்டும் என்ற சட்டம்
- சிங்களர்களுக்குச் சலுகையும், தமிழ் மாணவர்களுக்குப் பாதிப்பையும் ஏற்படுத்தும் கல்வியைத் தரப்படுத்தல் என்னும் சட்டம்.
- சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் மலையகத் தமிழர்கள் 10 லட்சம் பேரை நாடற்றவராக ஆக்குதல்.

இன்னும், தமிழர்க்கு எதிராக 1958 முதல் நிகழ்த்தப்பட்ட இனக்கலவரங்கள்; அதனால் உயிரை, உடைமைகளை இழந்த ஆண்கள், பெண்கள், முதியோர், சிறியோர், குழந்தைகள் நோயாளி என்று பாதிப்புக்கு ஆளானார்கள் தமிழர்கள். பெண்கள் பாலியல் படுகொலைகளையும், தேடிப்பிடித்து, ஓடஓட விரட்டித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை அனுபவித்தவர்கள் நாம் அல்ல - ஈழத் தமிழர்கள்.

1983 இல் வெலிக்கடைச் சிறையில் குட்டிமணி, ஜெகன் போன்றோர் விழிகள் பிடுங்கப்பட்டு, காலில் போட்டு மிதிக்கப்பட்டக் கொடுமையை நாடு அறியும், உலகு அறியும். வாழ்வா சாவா என்ற நிலை. ஆயுதபாணியான சிங்கள இராணுவம் வரும் போது, சிங்களர்கள் ஆயுதம் ஏந்தும் போது, வேறு வழியின்றித் தமிழ் இளைஞர் களும் ஆயுதம் ஏந்தினார்கள். போராளிகளானார்கள் - இன்று, களத்தில் நிற்கிறார்கள்.

இப்பொழுது ஈழத்தில் கொத்துக் கொத்தாய் அழிந்து கொண்டு இருக்கும் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டியதுதான் முதல் தேவை. அதாவது போர் நிறுத்தம்.

எழில்.இளங்கோவன்

Comments