அவுஸ்திரேலியா நீயுமா...???

"சுதந்திரமான தமிழர் தாயகம் அமைவதால் இலங்கையின் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என அவுஸ்திரேலிய அரசோ சர்வதேச சமூகமோ நம்பவில்லை.
தமிழ்ப்புலிகள் தங்களது ஆயுதங்களை கீழே போடுவதை தாங்கள்(அவுஸ்திரேலியாவும் சர்வதேச சமூகமும்) பார்க்கவேண்டும்.-அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீவன் சிமித்"

இன்று காலை அவுஸ்திரேலிய ABCஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீவன் சிமித் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

அப்படியானால் 30 வருட காலமாக கிட்டத்தட்ட 1லட்சத்து 50 ஆயிரம் உயிர்களை இழந்து தன் சுயநிர்ணய உரிமைக்காக சுதந்திரப் போராட்டம் புரிந்துகொண்டிருக்கின்ற ஈழத்தமிழினத்துக்கு என்ன முடிவு?என்ன தீர்வு?
ஒரு இன விடுதலைக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 25 ஆயிரம் போராளிகளின் உயிர்களை தியாகம் செய்து சுதந்திர போரட்டத்தினை புரிந்து கொண்டிருக்கும் விடுதலை இயக்கத்தினை பார்த்து அவர்களது பாதுகாப்பு ஆயுதங்களை கீழே போடுங்கள் என்று சொல்வது எந்த வகையில் நியாயமான கோரிக்கை??

தமிழ்மக்களால் கொடுக்கப்பட்ட பாதுகாப்பு ஆயுதங்களை வேறு யாரும் காரணமின்றி கீழே போடுங்கள் என்று சொல்ல உரிமை இல்லை.இதைப்பற்றி பேச தமிழீழ மக்களுக்கு மாத்திரமே உரிமை இருக்கிறது.
இன்று சீனா,யப்பான்,இந்தியா போன்ற வல்லாதிக்க அரசுகள் வெளிப்படையாகவே பேரழிவு ஏற்படுத்தும் இராணுவ ஆயுதங்களையும் போர்த்தளபாடங்களையும் இராணுவ ஆள் உதவிகளையும் சிறிலங்கா அரசுக்கு வழங்குவதாக அறிவித்திருக்கின்றன.

தமிழினத்துக்கு எதிராக இத்தனை வல்லாதிக்க அரசுகளும் சிறிலங்காவோடு சேர்ந்து இனப்படுகொலையையும் மனிதநேயம் இல்லாத போரையும் புரிந்து கொண்டிருப்பது அவுஸ்திரேலிய அரச கண்களுக்கு தெரியவில்லையா??

சர்வதேச போர்விதிமுறைகளை மீறி இரசாயண ஆயுதங்களை சிறிலங்கா இராணுவம் பாவித்து தமிழர்களை கொல்வது இவர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?

தமிழீழத்திலும்,சர்வதேச நாடுகளில் புலம்பெயர் தமிழர்களாலும் "தமிழீழமே எங்களின் நிரந்தரமான தீர்வு,தமிழீழ விடுதலைப்புலிகளே எமது ஏகப்பிரதிநிதிகள்,அவர்களே தமிழினத்தின் சுதந்திர போராட்ட வீரர்கள்" என உரத்து குரல் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில்,

" சுதந்திர தமிழர் தயகம் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாகாது,தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை போடுவதை தாங்கள் பார்க்கவேன்டும்" என்பது தனிப்பட்ட ஸ்டீவன் சிமித்தின் கருத்து என்றால் நாங்கள் அதைப்பற்றி கவனத்தில் கொள்ளமாட்டோம்.ஆனால் அவர் அவுஸ்திரேலிய அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்பான பதவியில் உள்ளவர்.அதுமட்டுமல்ல சர்வதேச சமூகத்தினையும் தன்னுடைய கருத்துக்கு ஆதரவாக இழுத்திருப்பது மன வேதனை தருகிறது.சர்வதேச சமூகம் எப்போது சொன்னது அப்படி?யார் இந்த சர்வதேச சமூகம்????

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் நடைபெற்று முடிந்த உண்ணாவிரத போராட்டத்தின் முடிவில் தெரிவித்த வாக்குறுதிகளுக்கும் கருத்துகளுக்கும் நேர் எதிரான நிலைப்பாடும் கருத்தும் வெளிவந்திருப்பது அவுஸ்திரேலிய தமிழர்களின் வேதனையை மேலும் அதிகரிக்க வைக்கிறது.ஒட்டுமொத்த தமிழினத்தையும் விசனம் அடைய வைக்கிறது.

"உண்ணாவிரத போராட்டம்" என்பது வன்முறையான போராட்டம்(உணர்ச்சிப் பயமுறுத்தல்- emotional threat)எனவும்,தமிழர்கள் வன்முறையான போராட்டத்தினை இங்கே(அவுஸ்திரேலியா) செய்வதை தாங்கள் விரும்பவில்லை எனவும், அமைதிப்பேரணிகளை தமிழர்கள் அழகாக ஒழுங்காக செய்கிறார்கள் என்ற கருத்துப்படவும் கூறியவர்கள் உண்ணாநிலைப்போராட்டத்தினை கைவிடவேண்டும்,தங்களுக்கு செயற்படுவதற்கான கால அவகாசத்தினை வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டதின் பின்னரே உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக நிறைவு செய்யப்பட்டது.

இல்லை இதனையும் மீறி உண்ணாவிரத போரட்டத்தினை தொடருவதகவிருந்தால் "உங்கள் உண்ணாவிரத போரட்டதுக்கு நல்வாழ்த்துக்கள்-good luck for your hungerstrike" என கூறப்பட்டு உண்ணாவிரதிகள் அனுப்பப்பட்டார்கள்.

மேலும் தாங்கள்(அவுஸ்திரேலியா) நேரடியானதும் மறைமுகமானதுமான அழுத்தங்களை சிறிலங்கா அரசின் மேல் மேற்கொள்வதாகவும்,தமது நேச நாடுகளான அமெரிக்கா,பிரித்தானியா,பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் கலந்து ஆலோசித்து கூட்டு நடவடிக்கைகளையே மேற்கொள்ளமுடியும் எனவும் தொனிப்பட கருத்து தெரிவித்தார்கள்.இப்போது என்னவென்றால் திடீரென அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு கருத்தினை கூறியிருப்பது பலவிதமான சந்தேகங்களை ஏற்படுத்திநிற்கிறது.

இப்போது சிறிலங்காவில் நடந்து கொண்டிருக்கும் தமிழின அழிப்பு போர் பற்றிய அவுஸ்திரேலியாவின் உண்மையான நிலைப்பாடு என்ன?

சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குரிமை உடைய,அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை பெற்ற ஈழத்தமிழர்களும் அதேயளவு தொகையான மலேசிய,சிங்கப்பூர்,இந்திய தமிழர்களும் அவுஸ்திரேலியாவில் வாழ்கின்றார்கள்.

சிறிலங்காவின் இனப்பிரச்சினை பற்றி கருத்து கூற முன் இங்குள்ள தமிழர்களின் விருப்பத்தினை அறிய பகிரங்க வாக்கெடுப்பு நடத்த அவுஸ்திரேலிய அரசு தயாரா?

ஒரு சனநாயக நாட்டில் அதன் குடிமக்களின் பிரச்சினை சம்பந்தமான கருத்தினையோ முடிவையோ தெரிவிக்கமுன் அவர்களின் அபிலாசை என்ன?அவர்களின் உணவுகள் என்ன?என்பவற்றை அவர்களிடம் கேட்டு அறியவேண்டியது ஒரு சனநாயக அரசின் கடமை.அதை அமெரிக்காவானது ஈராக்கிய பிரச்சினையில் செய்யவில்லை! கொசோவா பிரச்சினையில் செய்யவில்லை! அவுஸ்திரேலியா அரசு கிழக்குதீமோர்,ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் செய்யவில்லை!

இந்திய மத்திய அரசும் சீனாவும் ரஸ்ஸியாவும் ஜப்பானும் பாகிஸ்தானும் ஈழத்தமிழர் பிரச்சினையில் செய்யவில்லை!

சர்வதேச சமூகம் ஈழத்தமிழர் பிரச்சினையில் எத்தகைய அடிப்படையில் செயற்பட்டுகொண்டிருக்கிறது என்பது இப்போது கூட குழப்பமாகத்தான் இருக்கிறது.ஈழத்தமிழர் பிரச்சினையை உள்நாட்டு பிரச்சினையாக சர்வதேசம் பார்க்குமானால் இந்தியா,சீனா,ரஸ்சியா போன்ற வல்லதிக்க அரசுகள் வெளிப்படையாகவே சிறிலங்கா இராணுவதுக்கு உதவி செய்து போரை நடாத்த பின்புலத்தில் செயற்படுவது அவர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?
யார் இந்த சர்வதேச சமூகம்?

அமெரிக்காவா?பிரித்தானியாவா?இல்லை வல்லாதிக்க சக்திகளா?இல்லை சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களா?

சர்வதேச சமூகம் என்ற மாயையான ஒரு தோற்றப்பாட்டை நம்பி தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது.

2006 ம் ஆண்டு காலப்பகுதியில், தமிழீழம் என்று சொல்லப்படுகின்ற பிரதேசத்தின் 85% இக்கும் அதிகமான நிலப்பரப்பையும் அதற்கான உட்கட்டுமான அமைப்புகளையும் கட்டியெழுப்பிவிட்டு இந்த சர்வதேச சமூகத்திடம் தான் "தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரியுங்கள்" என்று தமிழ்மக்கள் கேட்டார்கள்.தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்ததா சர்வதேச சமூகம்?இல்லை.

இப்போது தமிழீழத்தின் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு தமிழ்மக்கள் சாவின் விளிம்பில் நிண்டுகொண்டிருக்கும் போது இந்த சர்வதேச சமூகம் தமிழீழத்தை அங்கீகரிக்கும் என்று தமிழர்கள் நம்பவில்லை.

ஆனால் சுதந்திர விடுதலைப்போராட்டங்களின் வலிகளையும்,ஒரு இனத்தின் சுயநிர்ணய உரிமைகளையும் உணர்ந்த பல நாடுகள் இந்த பூமிப்பந்தில் இருக்கின்றன.அதனிலும் மேலாக தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகள் இருக்கிறார்கள்.

ஈழத்தமிழர் பற்றியும் அவர்களின் சுதந்திர விடுதலைப்போராட்டம் பற்றியும் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் கூறட்டும்.

சுதந்திர விடுதலைப்போரட்டத்தின் மூலம் விடுதலை பெற்ற நாடுகளும் அதன் தலைவர்களும் மக்களும் அதனிலும் மேலாக தமிழக தொப்புள் கொடி உறவுகளின் ஆத்மார்த்தமான ஆதரவு உள்ளவரை உலகின் எந்த வல்லா
திக்க சக்திகளாலும் ஈழத்தமிழனின் விடுதலைப்போரட்டத்தினை நிறுத்தவும் முடியாது.

தமிழர்களுக்கான சுதந்திர தமிழீழ தனியரசு மலர்வதை தடுக்கவும் முடியாது.

தமிழ்ப்பொடியன்-

Comments