தமிழர்களை கொன்று குவிப்பதனை உடனடியாக தடுத்து நிறுத்தவும்: மலேசிய அமெரிக்கத் தூதரகத்திடம் மனு

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து அமெரிக்கா உடனடியாக தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் என்று கோரி மலேசிய தமிழ் மக்கள் சார்பில் அமெரிக்கத் தூதரகம் ஊடாக அமெரிக்க அரச தலைவர் பாராக் ஒபாமாவுக்கான மனு கையளிக்கப்பட்டது.

உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் வழக்கறிஞர் பசுபதி சிதம்பரம் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மா.மனோகரன், சார்ள்ஸ் சந்தியாகு, சிவராசா இராசையா, மாணிக்கவாசகம், சைல்டு நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் ஐங்கரன், 'மலேசியா இன்று' இணைய இதழின் ஆசிரியர் காத்தையா உட்பட எழுவர் அடங்கிய குழுவினர் இங்குள்ள அமெரிக்க தூதரகத்திடம் மனுவினை கையளித்தனர்.

இலங்கையில் 'பயங்கரவாதிகளுக்கு எதிரான போர்' என்ற பெயரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இராணுவத்தினரின் கண்முடித்தனமான குண்டுவீச்சினால் மக்கள் உயிர்ச் சேதம் அதிகமாகி வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்கா மனிதாபிமான அடிப்படையில் இலங்கை விவகாரத்தில் தலையிட்டு போரை முடிவுக்குக்கொண்டு வருவதுடன், தமிழ் மக்களின் உரிமைப்பூர்வமான கோரிக்கைகள் நிறைவேறவும் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரகத்திடம் கையளிக்கப்பட்ட மனுவின் விபரம் பின்வருமாறு:

மலேசியத் தமிழர்களாகிய நாங்கள், சிறிலங்கா அரசாங்கத்தால் ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் இனப்படுகொலை குறித்து உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

அரச தலைவர் ராஜபக்ச தலைமையிலான சிங்கள இனவாத அரசு தனது சொந்த மக்களை இனப்படுகொலை செய்து வருவதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைகின்றோம்.

ராஜபக்சவும் அவரது இராணுவத்தினரும் இதுவரையில் குழந்தைகள் உட்பட 77,000 தமிழ் மக்களைக் கொன்று குவித்துள்ளனர்.

கடந்த 3 மாதங்களில் மட்டும் சிறிலங்கா ஆயுதப் படையினரால் 4,100-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் 8,800-க்கும் அதிகமான பொதுமக்கள் படுகாயமடைந்தும் உள்ளனர்.

அரச தலைவர் அவர்களே!

குறைந்தது 190,000-க்கும் அதிகமான பொதுமக்கள் 20 மைல் சதுர பரப்பளவு மட்டுமே கொண்ட பகுதியில் இருக்கின்றனர்.

இலங்கையில் இருந்து தமிழர்களை முற்றாக துடைத்தொழிப்போம் என சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் உறுதி எடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

கோத்தபாய ராஜபக்ச, இப்போது தொடங்கி முல்லைத்தீவு பகுதியில் சிக்கும் தமிழ்ப்பெண்கள் இராணுவத்தினருக்கு விருந்தாகட்டும். ஆண்களாக இருந்தால் அவர்களின் இரத்தத்தால் இந்திய சமுத்திரம் சிவக்கட்டும்," என முழக்கமிட்டிருக்கிறார்.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அடோல்ப் ஹிட்லரைப் போன்று அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரசியா, சீனா போன்ற நாடுகளுக்கு ஐக்கிய நாட்டு சபையில் உள்ள வீட்டோ அதிகாரத்தின் ஆசியுடன் செயற்பட்டு வருகின்றார் என்று கூறலாம். ஹிட்லருக்கு எதிரான நின்ற இந்த நாடுகள் அனைத்துமே நின்று ராஜபக்சவுக்கு ஆதரவாக நிற்கின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகொரியா தனது ஏவுகணையைப் பாய்ச்ச முற்பட்டபோது மீண்டும் வீட்டோ அதிகாரம் பயன்பட்டுள்ளது.

ஆனால், கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தமது சொந்த மண்ணில் அமைதியாகவும் சுயமரியாதையுடனும் வாழ்கின்ற உரிமைக்காக போராடும் தமிழ் மக்களுக்கு இந்த நாடுகளிடம் இருந்து எந்தவகையிலும் ஆதரவான பதில் கிடைக்கவில்லை.

மலேசிய தமிழர்களாகிய நாங்கள், இன்றுவரையில் அமெரிக்கா, இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளைச் செவிமடுத்து அவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகொலையைக் களைவதில் தோல்வியடைந்து விட்டது என்றே கருதுகின்றோம்.

உங்கள் நாட்டில் குடியுரிமை பெற்றுள்ள கோத்தபாய ராஜபக்ச ஒருபோதும் தமிழர்களைக் காப்பாற்ற போவதில்லை.

அரச தலைவர் அவர்களே!,

பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் சிக்கிக் கொண்டுள்ள 190,000 தமிழர்களைக் இனப் படுகொலையில் இருந்து காக்க உடனே தலையிட்டு ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும், அரச தலைவர் அவர்களே!

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றத்தோடு இணைந்து உடனடியாக இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தத்தைக்கொண்டு வரவும் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்து அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையை அங்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

மாண்புமிகு அரச தலைவர் அவர்களே!

உங்கள் மீது முழு நம்பிக்கை கொண்டு நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு உடனடியாக தலையிட்டு இச்சிக்கலில் தீர்வு காண்பீர்கள் என பெரிதும் எதிர்பார்க்கின்றோம் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments