ஈழத்தமிழர்களின் தெருவோர உரிமைக்குரல்கள்

புற்கள் செத்து விடுமென்பதால் பாதையோரத்தில் சாகும்வரை போராடும்படி பிரித்தானியா கேட்கிறது.

புலம்பெயர் நாடுகளில் உரிமைக் குரல் எழுப்பும், சகல தமிழ் மக்களின் தற்போதைய நிலையும் இதுதான்.

விடுதலைப் புலிகள் மீது வசைபாடும் பிரித் தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட்டின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. பிரான்ஸ் வெளிநாட்டமைச்சரோடு இணைந்து இவர் வெளியிட்ட அறிக்கையிலும் மனிதக் கேடய விவகாரமே துருத்திக் கொண்டு நிற்கிறது.

மேற்கு நாடுகளில் பிறந்து வளரும் புதிய தலைமுறை மாணவ இளைஞர்களின் போராட்டங்கள், பலவிதமான அரசியல் சிக்கல்களை உருவாக்கத் தொடங்குகின்றது. இரண்டு இலட்சம் மக்கள் ஒன்று கூடி நிகழ்த்திய ஆறு கிலோ மீற்றர் நீள ஆர்ப்பாட்டப் பேரணியில் பிரித்தானிய தமிழ் மாணவர்கள், தமது பல்கலைக்கழகங்களின் பெயர் பொறித்த பதாதைகளை உயர்த்திப் பிடித்தபடி முன்னணியில் சென்றார்கள்.

புலிச் சின்னம் பதித்த கொடிகளை பிரித்தானிய காவல் துறையினர் பறித்தெடுக்க முற்பட்ட வேளையில் மாணவர்கள் அதனைத் தடு த்து நிறுத்திய சம்பவங்கள் பல அப்பேரணியில் நிகழ்ந்தன.

பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக தொடர்ந்தும் உண்ணா நிலை நோன்பினை கடைப்பிடிக்கும் பரமேஸ்வரனிற்கு ஆதரவாக மாணவ இளைஞர்கள் அருகிலிருந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

புலிக் கொடி விவகாரத்தை வைத்து உண்ணா நிலைப் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வரலாöமன்று காவல் துறை முயற்சிக்கின்றது. கனடாவில் நிகழும் கவனியீர்ப்பு போராட்டங்களில் புலிக் கொடியை உயர்த்திப் பிடித்தால் அந்த இடத்திற்கு வரமாட்டோமென்று அடம் பிடிக்கிறார்கள் கனேடிய அரசியல்வாதிகள்.

மேற்குலக வல்லரசாளர்களுக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் போராட்டக் கோரிக்கைகள் நன்கு புரியும். அதைப் புரியாதது போல் பேசுவதும் மனிதக் கேடயமென்பதற்கு முக்கியத்துவமளிப்பதும் இலகுவில் புரிந்து கொள்ளப்படலாம்.

எல்லோரும் ஒரே குரலில் பேசும்போது, புதிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா என்ன சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எம்மில் பலரிடம் காணப்பட்டது.

ஒபாமாவின் இராஜாங்க திணைக்களப் பேச்சாளரும் வன்னி மக்களின் அவல நிலை குறித்து அமெரிக்க அரசின் பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.

புதிதாக இவர் ஒன்றும் அறிவுரை சொல்லவில்லை. இரு தரப்பும் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உள்ளான வன்னி மக்களின் வெளியேற்றத்திற்கு ஏற்ற வகையில் சுமூகமான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென்பதே அமேக்காவின் கருத்து.

மக்கள் மீது எறிகணைகளை ஏவக் கூடாது, வவுனியா முகாம்களுக்கு ஐ.நா. தொண்டு நிறுவங்கள் செல்ல வேண்டும் என்கிற ஏனையோரின் கருத்துக்களையே அமெரிக்காவும் திரும்பக் கூறியுள்ளது.

அதேவேளை பிரித்தானிய பிரான்ஸ் கூட்டறிக்கை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளரின் கருத்துரைப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிலரின் டெல்லி விஜயம் போன்ற விடயங்களுக்கு அப்பால் பாரிய இராஜதந்திர அசைவியக்கமொன்று ஐ.நா.வை மையப்படுத்தி சுழன்று கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.

அதாவது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் உணர்திறன் மிகுந்த களமாக புலம்பெயர்ந்த தேசம் மாற்றமடைவதை இந்தி யாவும் இலங்கையும் உன்னிப்பாக அவதானிக்கின்றன.

வன்னிக் களமுனையில் இந்தியத் தலையீடு நிறைந்து காணப்படுவதாக முழுமையாக நம்பும் புலம்பெயர்ந்த தமிழர்கள், இதுவரை இந்தியாவினூடாக புவிசார் அரசியலை பார்வையிடும் கருத்தியலை மறுதலித்து போர்க் களத்திற்கு அப்பால், வாய் திறக்க முடியாத கையறு நிலையில் வாழும் தாயக மக்களின் குரலாக மேற்கிலிருந்து ஐ.நா. சபை நோக்கிய தமது விடுதலைக் குரலை ஒலிக்கின்றனர்.

இருப்பினும் பேரினவாதத்தின் குசும்புகளும் மேற்குலகில் குறைவில்லாமல் இருக்கிறது. போராட்ட முனைப்புக்களை சிதைப்பதற்கு பல்வேறு சதி முயற்சிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

தேசியக் கருத்தியலின் எதிர்ச் சிந்தனாவாதிகள், அவல வாழ்வினை தமக்கான பரப்புரைக் களமாக மாற்ற முயற்சிக்கின்றார்கள். இருப்பினும் அடக்கப்படும் மக்களின் குரல் என்றுமில்லாதவாறு ஒங்கி ஒலிக்கத்தான் செய்கிறது. போராட்ட வடிவங்களும் மாற்றமடைகின்றன.

பரபரப்பாக பேசப்படும் ஐ.நா. பொதுச் செயலாளரின் பிரத்தியேக தூதுவர் விஜய் நம்பியாரின் இலங்கைப் பயணம் குறித்துபலதரப்பட்ட கோணங்களில் அலசிசி ஆராயப்படுகின்றன.

நம்பியாரின் விஜயத்திற்கு முன்பு எதிர்ப்பு தெவித்த அரசாங்கம் தற்போது இந்தியாவின் அறிவுரையால் அதனையும் ஏற்றுக் கொண்டுள்ளது போல் தெரிகிறது.

உலக சந்நிதானங்களிலிருந்து எவர் வருகை தந்தாலும் அவர் இந்தியராக இருந்தால் அதனை மறுத்திட முடியாத இக்கட்டான நிலையில் இலங்கை இருப்பதனை புரிந்து கொள்ளலாம்.

அவர் ஒரு இந்தியர் என்பதற்கும் அப்பால் ஐ.நா. உயர் பீடத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நபர் என்கிற விடயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வன்னி நிலைவரம் குறித்து அமெரிக்கா சொல்ல விளையும் செய்தியில் அடுத்த கட்ட நகர்வு, ஐ.நா. சபை நோக்கி அமையப் போவதை கோடிட்டுக் காட்டுகிறது. அதற்கு முன்பாக நிகழும் காய் நகர்த்தல்களே இந்த விஜய் நம்பியாரின் அறிவுரைப் பயணங்களும் மெக்சிக்கோ நாட்டின் இறுக்கமான நிலைப்பாடுமாகும்.

மேற்குலகு முன்னகர்த்திய சமாதான ஒப்பந்தத்தில் அனுசரணைப் பாத்திரம் வகித்த நோர்வேயின் வகிபாகத்தை மிகச் சாதுரியமாக இந்தியா அகற்றி விட்டது. ஒப்பந்தக் காகிதம் கிழித்தெறியப்பட்டவுடன் தமது அனுசரணை உறவு அறுந்து விட்டதென மீசையில் மண் ஒட்டாத குறையாக கருத்துக்களைத் தெரிவித்தது மேற்குலகின் குரல் நோர்வே.

இந்தியாவைப் பொறுத்தவரை அதன் பிராந்திய ஆதிபத்திய நலனிற்கு எதிராக 2002 இல் உள் நுழைந்த மேற்குலகின் தரையிறக்கம் தடுக்கப்பட்டு விட்டது என்கிற மகிழ்ச்சி ஒரு புறமாக இருந்தாலும் ஐ.நா. தூதுவரின் வருகை ஊடாக மறுபடியும் மேற்கு நாடுகள் கால் பதிக்கலாமென்கிற பதட்டம் உருவாகிறது.

அடுத்ததாக தென்னிலங்கையில் விரிவடையும் சீனாவின் வர்த்தக முதலீடுகள் பற்றிய கவலையும் இந்தியாவிற்கு உண்டு. அதாவது ஒரு நேரத்தில் இரண்டு அதி சக்திமிக்க வல்லரசுக் கூட்டுக்களை ஸ்ரீலங்காவினுள் உள் நுழைய விடாமல் தடுப்பதற்கு இரு முனையில் தனது இராஜதந்திரப் போர்க் களங்களை இந்தியா திறந்து விட்டுள்ளதென்பதைக் கவனிக்கலாம்.

1987 இல் இலங்கையோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் சிதைத்து விட்டார்களென்பதால் 2002 இல் மேற்குலகின் அனுசரணையோடு புலிகள் மேற்கொண்ட சமாதான ஒப்பந்தத்தை தாம் அழித்துவிட்டோமென்கிற வகையில் செல்கிறது இந்திய ஆய்வாளர்களின் கிணற்றுத் தவளைச் சிந்தனையின் வெளிப்பாடுகள்.

தமிழ்த் தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை அழிப்பதற்கு இந்தியா வழங்கும் முழுமையான பங்களிப்பின் அரசியல் சூத்திரம் சிங்கள தேசத்திற்குப் புரியும். ஆனாலும் இந்தியத் தலையீட்டினை அனுமதித்தால் மேற்குலகின் அழுத்தங்கள் குறைவடையும் என்கிற தந்திரோபாயத்தின் அடிப்படையில் இதனைச் சகித்துக் கொள்கிறது.

இதனைத் தவிர்த்து நேரடியாகவே சீனா பாகிஸ்தானுடன் கைகோர்த்து யுத்தத்தை நடத்தினால் தலைமாட்டில் இருக்கும் இந்தியாவும் மேற்குலகும் இணைந்து தமிழர்களுக்கு ஆதரவாக திரும்பிவிடுவார்கள் என்கிற அச்சத்தால் இந்திய ஊடுருவலை உள்வாங்கிக் கொள்கிறது இலங்கை.

புவிசார் அரசியலையும் பிராந்தியவல்லா திக்கங்களின் நலன்களையும் தெளிவாகப் புரிந்து வைத்துள்ள இலங்கை, இனிவரும் காலங்களில் நிரந்தர நண்பரோடு இணைய முடியாதவாறு பெருந் தடையாக இந்தியா இருக்கப் போவதையும் உணர்ந்து கொள்கிறது.

ஆனாலும் அபிவிருத்தி என்கிற போர்வையில் பொருண்மிய ஆக்கிரமிப்பொன்றை நிகழ்த்த இந்தியாவும் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இலங்கையை தனது பூரண பொருளாதார பாதுகாப்பு வலையமைப்புக்குள் கொண்டுவர இந்தியா மேற்கொள்ளும் நிகழ்ச்சி நிரலில் இந்தியஇலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் என்கிற விடயம் உள்ளடக்கப்படும் வாய்ப்புகள் தென்படுகின்றன.

முன்பு பல தடவைகள், சிங்களத்தால் இத்தகைய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட வேண்டுமென்று இலங்கை கோரிக்கை விடுத்தபோது அதனை கண்டும் காணாதது போன்று புறக்கணித்த இந்தியா அதற்கான காலம் கூடி வரும் வரை காத்திருக்க வேண்டிய தேவையி ருந்தது.

ஆனாலும் இன்னமும் பல தடைப் படிக்கற்களை தாண்டிச் செல்ல வேண்டிய அவசியம் இருப்பதால் இத்தகைய ஒப்பந்தங்கள் ஒத்தி வைக்கப்படுகின்றன.ஆகவே இந்தியாவும் இலங்கையும் எதிர்கொள்ளும் சிக்கல் நிறைந்த நிலைகளிலிருந்தே விடுதலைக்கான பாதைகளையும் தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அதன் வெளியுறவுக் கொள்கையில் சடுதியான மாறுதல்கள் ஏற்படப் போவதில்லை.

அடுத்த ஆட்சி அமையும் முன்பாக அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தமும் அண்டை நாட்டு ஆயுதப் போராட்டத்தை அழித்து விட வேண்டுமென்கிற தீர்மானமும் தற்போதைய இந்திய ஆட்சியாளர்களின் முதன்மையான வெளியுறவுக் கொள்கை விடயங்களாக இருந்தன.

அதில் அமெரிக்க ஒப்பந்தம் நிறைவேறி விட்டது. அடுத்த விவகாரம் இன்னமும் முற்றுப் பெறவில்லை. ஆனாலும் வன்னிப் போர்க்களமும் புலம்பெயர் நாடுகளில் நிகழும் தெருவோர உரிமைக் குரல் போராட்டங்களுமே இந்திய கனவைத் தீர்மானிக்கும் சக்தியாக அமையப் போகிறது.

""இந்தியா எமது எதி?'' என்று சொல்வதற்கு, ஈழத் தமிழினத்திற்கு பல காலம் செல்லாது.

அதனையும் இந்தியா ஆளும் வர்க்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் காலாதி காலமாக மனதில் குடி கொண்டிருந்த இந்திய மயக்கத்திலிருந்து ஈழத் தமிழினம் விடுபட்டு நீண்டகாலமாகி விட்டது.

-சி.இதயச்சந்திரன் -

Comments