கனவுகள் பொய்க்கும்

பிச்சை எடுத்தாராம் பெருமாள். அதைத் தட்டிப் பறித்தாராம் அனுமார். உலகப் பொருளாதாரம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. உலகத் தலைவர்கள் இந்த நெருக்கடியைத் எவ்வாறு தீர்ப்பதென அவசர அவசரமாக கூடி ஆராய்ந்துகொண்டிருக்கின்றார்கள். தேவையற்ற செலவுகளை தவிர்க்குமாறு உலகிற்கு அவர்கள் ஆலோசனை வழங்குகின்றார்கள். குறிப்பாக போர் நடைபெறும் நாடுகள் போரை நிறுத்தினாலேயே மீண்டெழ முடியும் என்று எச்சரிக்கின்றார்கள்.

பிச்சை எடுத்தாராம் பெருமாள். அதைத் தட்டிப் பறித்தாராம் அனுமார். உலகப் பொருளாதாரம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. உலகத் தலைவர்கள் இந்த நெருக்கடியைத் எவ்வாறு தீர்ப்பதென அவசர அவசரமாக கூடி ஆராய்ந்துகொண்டிருக்கின்றார்கள். தேவையற்ற செலவுகளை தவிர்க்குமாறு உலகிற்கு அவர்கள் ஆலோசனை வழங்குகின்றார்கள். குறிப்பாக போர் நடைபெறும் நாடுகள் போரை நிறுத்தினாலேயே மீண்டெழ முடியும் என்று எச்சரிக்கின்றார்கள்.

ஆனால், யார் சொன்னாலும் போரை நிறுத்த மாட்டோம் என்று சிறீலங்கா இறுமாப்புடன் கூறுகின்றது. புலிகள் பலமாக இருந்தபோது, போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று வலியுறுத்திய உலகம் இப்போது போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று வலியுறுத்துவதில்லை. போர் வலயத்தில் இருக்கும் மக்கள் வெளியேற வழிவகுத்துவிட்டு போரைத் தொடருங்கள் என்பதுபோல் அதன் அறிக்கைகள் அமைந்திருக்கின்றன. சர்வதேசத்தின் இந்தச் சிந்தனைப் போக்கு சிறீலங்காவிற்கு பலத்த உற்சாகத்தை வழங்கியுள்ளது. அதனால், யார் சொன்னாலும் போரை நிறுத்த முடியாது என்பதில் அது உறுதியாக இருக்கின்றது.

மாவிலாற்றில் தொடங்கிய மகிந்தவின் போர்ப் பயணம் மாத்தளனில் வந்து நிற்கிறது. இரண்டரை ஆண்டுகளாக ஓய்வின்றித் தொடரும் போரால் பெரும் அழிவுகளையும் நாசங்களையும் இடப்பெயர்வுகளையும் வரலாற்றில் என்றும் இல்லாதளவிற்கு சந்தித்திருக்கிறது தமிழினம். ஒரு குறுகிய பிரதேசத்திற்குள் குவிந்திருக்கும் மக்கள், நாள்தோறும் மரணங்களையும் அவலங்களையும் சந்தித்துக்கொண்டிருக்கின்றார்கள். உலகில் எங்கும் பார்த்திருக்க முடியாத, வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாதவை இந்த அவலங்கள்.

மறுபுறத்தே விடுதலைக்கான உயர்ந்த அர்ப்பணிப்புக்களுடன் போராளிகள் மிகக்கடுமையான போரை எதிர்கொண்டிருக்கின்றார்கள். மக்களைப் பாதுகாக்க தங்களை வேலிகளாக்கி போரிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். விடுதலைப் போராட்ட வரலாற்றில் சந்திக்காத பல களமுனைகளை போராளிகள் இன்று எதிர்கொண்டிருக்கின்றார்கள். சர்வதேச ஆலோசனைகளுடனும், ஆசீர்வாதங்களுடனும் முன்னேற முனையும் ஐந்துக்கும் மேற்பட்ட படையணிகளின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தும் மிகப்பெரும் முயற்சியில் போராளிகள் தினமும் விடுதலைக்கான பெரும் விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

போராளிகளின் அர்ப்பணிப்பு, போரை விரைவாக வெற்றி கொண்டு விட்டு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற மகிந்த கண்ட கனவைச் சிதைக்கத் தொடங்கியுள்ளது. மகிந்தவின் கனவு பொய்க்கத் தொடங்கியுள்ளது. தமிழர்களின் விடுதலை வேட்கையை அழித்துவிட்டு பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றுவிடலாம் என்று போருக்கு ஆதரவைக் கொடுத்துவிட்டு காத்திருக்கும் சிங்கள மக்களின் நிலைமை இலவம் காத்த கிளியின் கதையாக மாறிக்கொண்டிருக்கின்றது. பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டவனின் கட்டியிருந்த கோவணமும் பறிபோய்விடும் நிலையில் இன்று சிங்களம் விழி பிதுங்கித் தவிக்கின்றது.

சிறீலங்காவின் போர் வெறியும், அதனால் ஏற்பட்ட தெற்கின் பொருளாதார வீழ்ச்சிகளும் உலகப் பொருளதார நெருக்கடியும் சேர்ந்து மகிந்த எதிர்பார்த்ததை விட எதிர்மாறான விளைவுகளை, சிறீலங்காவின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. ஓராண்டுக்குள் ஓடுக்கி விடலாம், இரண்டாடிற்குள் முடித்து விடலாம், ஒரு நாளுக்குள் அழித்து விடலாம் என்று மகிந்த சிந்தனையில் போட்ட போர்க் கணக்குகள் பிழைத்துப் போயுள்ளன. காலநிர்ணயம் செய்து முன்னெடுக்கப்பட்ட போர், காலம் நிர்ணயிக்க முடியாதளவிற்கு நீண்டுகொண்டிருக்கின்றது. ஒரு வருடம் போருக்கு தேவை என ஒதுக்கிய நிதியை மூன்று மாதத்திற்குள் விழுங்கிவிட்டு நிற்கின்றது சிங்கள இராணுவ பூதம்.

இப்போது அடுத்த அடியை எடுத்து வைப்பதற்கு ஏற்கனவே தோள் கொடுத்த நாடுகள் தான் உதவ வேண்டும் என்று சிங்கள தேசம் எதிர்பார்க்கின்றது. ஆனால், உலகப் பொருளாதார நெருக்கடி, சிங்கள தேசத்தை கைகொடுத்து தூக்கிவிட விரும்பும் நாடுகளையும் இக்கட்டுக்குள் தள்ளி விட்டுள்ளது. ஆனாலும், அழிவுப் போருக்கு மேலும் உலக நிதியை வளைத்துப்போட்டுவிட பல்வேறு முயற்சிகளிலும் சிறீலங்கா தீவிரமாக இறங்கியுள்ளது. தோற்கிற குதிரையில் பணம் கட்டாத உலகம், சிங்கள தேசத்திற்கு எஸ் ஏதோ ஒரு வகையில் "நிதியை" நிபந்தனைகளுடன் என்றாலும் ஒதுக்கிவிட முனைகின்றன.

தண்ணீரில் உப்பைப் போடுவதுபோல், போர் நடைபெறும் நாட்டில் பணத்தை இறைக்கும் நாடுகளின் எதிர்பார்ப்புக்களுக்குப் பின்னால் உள்ள இராஜதந்திரம் புரியாமலில்லை. மீனுக்கு தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டும் விலாங்கு மீன்கள் போல் தமிழரின் கண்ணீருக்கு "கருணை"யையும் சிறீலங்காவின் போருக்கு "நிதி"யையும் கொடுக்கும் சர்வதேசத்தின் நிலைப்பாடு மாறாத வரைக்கும் சிறீலங்காவின் போர் வெறியையும், தமிழ் மக்களின் கண்ணீரையும் இலகுவில் தணித்துவிட முடியாது.

-ஆசிரியர் தலையங்கம்-

நன்றி

ஈழமுரசு(03.04.2009)

Comments