இலங்கை தமிழர்கள் தொடர்பில் பிரித்தானியா என்ன செய்திருக்கிறது?: த கார்டியன் கேள்வி

பிரித்தானிய அரசாங்கம் இலங்கை தமிழர்கள் தொடர்பில் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என, பிரித்தானியாவின் த கார்டியன் இணையத்தளம் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச நாடுகளின் அவதானிப்பு தடையின் காரணமாகவே, அரசாங்கத்தினால் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த நிலையினை பிரித்தானிய அரசாங்கம் மாற்ற வேண்டும் என த கார்டியன் கோரியுள்ளது.

சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்த போதும், இலங்கை அரசாங்கம் தொடர்ந்து தமிழர்களை கொன்று குவிக்கிறது.

மூன்றாயிரத்துக்கும் அதிகமான எறிகனைகளை நேற்று (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் சிறிய பரப்பினை கொண்ட பாதுகாப்பு வலயத்தினுள் அதனை சுற்றி வளைத்துள்ள இராணுவம் வீசியுள்ளது.

இதனால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதை அரசாங்கம் உலகத்திற்கு மறைத்து வருகிறது." என த கார்டியன் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கனரக ஆயதப் பாவனையை இடைநிறுத்திவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்ததது. எனினும் அதன் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கம் மேற்கொண்ட எறிகணை வீச்சுக்களில், சிறுவர்கள் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர்.

இதன் பொருட்டு வெள்ளை மாளிகை எவ்விதமான அறிக்கையினையும் வெளியிடவில்லை. இலங்கையின் தமிழினப்படுகொலை தொடர்பில் சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் மௌனமாகவே செயற்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் சுவீடன் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இலங்கை செல்வதாக இருந்தது.

இந்த நிலையில் சுவீடன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விசா அனுமதி வழங்க இலங்கை அரசாங்கம் மறுத்துவிட்டது. எனினும் பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அமைச்சர்கள் இலங்கை செல்கின்றனர்.

இந்த நிலை, இலங்கை நிலவரம் குறித்து சர்வதேச நாடுகளிரடையே ஒன்றித்த கவனமோ, சீரான தொடர்போ இல்லை என்பதை எடுத்து காட்டுகிறது. இந்த நிலையினை மாற்ற பிரித்தானிய முன்வர வேண்டும்.

இலங்கையின் தமிழின அழிப்புக்கு எதிராக பல்வேறு நாடுகளிலும் பல்வேறு பேராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிரித்தானிய அரசாங்கம் தலைமைதாங்கி தொடரும் இனவழிப்புகளை இல்லாது செய்ய முன்வர வேண்டும் என அனைத்துலக நாடுகள் விரும்புகின்றன.

இதன் பொருட்டு பிரித்தானிய அரசாங்கம் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என அந்த செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன்,' இலங்கையில் கொல்லப்படுகின்ற சிறுவர்கள் தொடர்பில், பிரித்தானிய சிறுவர்கள் கேள்வி எழுப்பும் போது, அவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் பிரித்தானியா என்ன செய்யப் போகிறது?" என த கார்டியன் கேள்வி எழுப்பியுள்ளது

Comments