மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பணிப்பாளர் கொழும்பு செல்ல சிறிலங்கா தடை

அமெரிக்காவின் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (Human Rights Watch) ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் கலாநிதி அனா நெய்ஸ்டற் (Anna Neistat ) சிறிலங்கா செல்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்திருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் பிரபல சிங்கள நாளேடான 'திவயின' இன்று புதன்கிழமை செய்தி வெளியிட்டிருக்கின்றது.

வவுனியா சென்ற இவர், அனைத்துலக அனைத்துலக சமூகத்தின் முன்பாக சிறிலங்கா தொடர்பில் 45 பக்க அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்ததாகவும், இந்த அறிக்கையையடுத்தே அவர் மீது சீற்றமடைந்த சிறிலங்கா அரசு, அவர் எதிர்காலத்தில் நாட்டுக்குள் வருவதற்கு தடைவித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவைப் பெற்றுக்கொண்டு கொழும்பு வந்து, அங்கிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அரச சார்பற்ற அமைப்புக்களின் ஆதரவுடன் வவுனியா சென்று தவறான தகவல்களை இவர் சேகரித்திருப்பதாக தகவல் கிடைத்திருப்பதையடுத்தே எதிர்காலத்தில் அவரது வருகை தடை செய்யப்பட்டிருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

தன்னை ஒரு சட்டத்தரணி எனக் கூறி குடிவரவு அதிகாரிகளை ஏமாற்றிவிட்டே இவர் கொழும்பு வந்ததாகவும் சிறிலங்காவின் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்தன.

அனா நெய்ஸ்டற், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பசிபிப் பிராந்தியப் பணிப்பாளர் என 'திவயின' பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இவர் கண்காணிப்பகத்தின் ஒரு மூத்த ஆய்வாளர் என அந்த அமைப்பின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மனித உரிமைகள் விவகாரத்தில் நிபுணத்துவம் பெற்ற இவர், நெருக்கடியான காலகட்டங்களில் மனித உரிமை மீறப்படுவது தொடர்பில் புலனாய்வு செய்து அவற்றை அம்பலமாக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்திருந்தார்.

Comments