சோனியா வருகை ரத்து: பரபரப்பான பின்னணிகள்!

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் தமிழக வருகை திடீரென்று ரத்து செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் மேலிட பார்வையாளர் குலாம் நபி ஆசாத் கூறியிருந்த காரணத்தை தாண்டி மேலும் சில காரணங்கள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைப் பிரச்சனை திமுக- காங்கிரஸ் கூட்டணி எதிர்பார்த்தைவிட பெரும் தேர்தல் பிரச்சனையாகிவிட்ட நிலையில், அது குறித்து திருச்சியில் நடந்த மே தின + தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவதையே தவிர்த்த திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி, சோனியா காந்தி தமிழகம் வந்து பிரச்சாரம் செய்வதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

சோனியா காந்தி வருவதை தவிர்க்கும் (தடுக்கும்) பொருட்டே அவர் சில நாட்களுக்கு முன்னதாக மருத்துவமனையில் தன்னை அனுமதித்துக் கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் இன்று நிலவும் அரசியல் சூழலில் சோனியா காந்தி பிரச்சாரத்திற்கு வருவது எந்த விதத்திலும் தங்களது கூட்டணிக்கு பயன் தராது என்பது மட்டுமின்றி, அது எதிர் வினையையே ஏற்படுத்தும் என்று கருணாநிதி கருதியதாகக் கூறப்படுகிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சோனியா காந்தி இதுவரை வாய் திறக்காமல் இருந்து விட்டு இப்போது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அது பற்றி எது பேசினாலும் அது சாதகமான விளைவுகளைத் தராது என்பது மட்டுமின்றி, அவரது வருகையை எதிர்க்கும் தமிழ் உணர்வாளர்களின் கருப்புக் கொடி போராட்டம் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும் என்றும் கருதினாராம்.

இதையெல்லாம் உணராத காங்கிரஸ் கட்சியினர் சோனியாவை பிரச்சாரத்திற்கு அழைப்பதில் உறுதியாக இருந்த நிலையில், புதுவையிலும், சென்னையிலும் அவர் தனியாக பேசுவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று உணர்ந்த காரணத்தினால்தான் சோனியா காந்தியின் வருகை கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சோனியாவின் தமிழக வருகையை விரும்பாத காரணத்தினால்தான் கருணாநிதி மருத்துவமனையில் சென்று படுத்துக் கொண்டார் என்று காங்கிரஸ் தொண்டர்களே நினைக்கின்றனர். ஏற்கனவே பல தொகுதிகளில் இரு கட்சிகளின் தொண்டர்களிடையே தேர்தல் பணிகளில் ஒத்திசைவு இல்லாத நிலையில், தங்கள் தலைவரின் பிரச்சார பயணம் ரத்து செய்யப்பட்டது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கூட்டணி குறித்த கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

மக்களவைத் தேர்தலிற்குப் பின், ‘யாரால் .... ஏற்பட்டது’ என்ற பிரச்சனை ஏற்படும்போது எல்லாம் வெளிப்படையாக வெடிக்கும் என்றும், அதுவே கூட்டணிக்கு முடிவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Comments