"நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இரத்தக்குளிப்பு": வன்னித் தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம்

வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டமையை, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இரத்தக்குளிப்பு எனக் கடுமையாகக் கண்டித்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபை, இது தொடர்பாக தாம் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்திருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

நேற்று முன்நாள் சனிக்கிழமை தொடக்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதி 'பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் நடத்திய கொடூரமான எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டித்து அறிக்கை ஒன்றை ஐ.நா. வெளியிட்டிருக்கின்றது.

''இரத்தக் குளிப்பு ஒன்று இடம்பெறப்போகின்றது என்பதையிட்டு நாம் தொடர்ச்சியாகவே எச்சரித்து வந்திருக்கின்றோம். இந்த நிலையில் இந்த வார இறுதியில் 100-க்கும் அதிகமான சிறுவர்கள் உட்பட பெருந்தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பது எதிர்பார்த்த இந்த இரத்தக்குளிப்பு இடம்பெற்று விட்டதையே காட்டுகின்றது" என ஐ.நா.வின் பேச்சாளரான கோர்டன் வைஸ் தெரிவித்திருக்கின்றார்.

ஐ.நா. சபை மார்ச் மாதத்தில் வெளியிட்ட உள்ளக ஆவணம் ஒன்றில், பெருந்தொகையான பொதுமக்கள் கொல்லப்படக்கூடிய நிலை காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

Comments