கனடாவில் மாபெரும் பேரணி: மாற்றினத்தோர் உட்பட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்பு

கனடிய மாணவர் மற்றும் பல் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து கனடாவின் ரொறன்ரோ நகரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்துக்கு முன்பாக நடத்திய பேரணியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர்.

அமெரிக்க துணைத் தூதரகத்துக்கு முன்பாக நேற்று சனிக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு தொடங்கிய பேரணி ஒன்ராறியோ மாநில நாடாளுமன்றத்துக்கு முன்பாக முடிவடைந்தது.

இப்பேரணி ரொறன்ரோவின் முக்கிய வீதியான யூனிவெர்சிட்டி அவனியூவில் தொடங்கி ரொறன்ரோவின் பெருந்தெருக்களான கொலிஜ் வீதி, யங் வீதி, கிங் வீதி,வழியாக மீண்டும் யூனிவெர்சிட்டி அவனியூ ஊடாகச் சென்றது.





நீண்ட தூரம் நகர்ந்து சென்ற பேரணியானது ஒன்ராறியோ மாநில நாடாளுமன்றத்துக்கு முன்பாக முடிவடைந்தது.

அங்கு மாதகல் குணம் தொடர்ந்து ஆறாவது நாட்களாக உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரணியின் நிறைவில் கனடிய பிரதிநிதிகள் மற்றும் தமிழ் மாணவர் பிரதிநிதிகள் உரையாற்றினர். உண்ணாநிலைப் போராட்டம் நடத்தவரும் குணமும் உரையாற்றினார்.

இப்பேரணியில் தமிழீழ தேசியக் கொடியினை தாங்கியவாறு கனடாவில் வசிக்கும் ஏனைய இனத்தவரும் கலந்து கொண்டமை சிறப்பு அம்சமாகும்.







உடனடிப் போர் நிறுத்தம்

இனப்படுகொலையை தடுத்து நிறுத்தவும்

உணவு, மருந்து வான்வழி விநியோகம்

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி

தமிழீழமே நிரந்தரத் தீர்வு

விடுதலைப் புலிகள் சுதந்திரப் போராளிகள்

எமது தலைவர் பிரபாகரன்

போன்ற முழக்கங்களை பேரணியில் கலந்துகொடோர் எழுப்பினர்.

பேரணியில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கானோர் காலை தொடக்கம் காற்றுடன் கூடிய பெருமழை பெய்து கொண்டிருந்தபோதும் அதனையும் பொருட்படுத்தாது உணர்வு மேலிட உரிமை முழக்கங்களை முன்வைத்தனர்.

கனடிய தேசிய ஊடகங்கள் இப்பேரணி தொடர்பான செய்திகளை பதிவு செய்ததுடன் முதன்மைச் செய்திகளாக வெளியிட்டன.



Comments