சிறீலங்காவின் இறுதிப் போரும் வன்னியின் கடைசி மணித் துளிகளும்...

தமிழ் மக்களின் துன்பங்களுக்குத் தீர்வு காணப்படும் வரை எதிர்காலத்தில் இலங்கையை ஐக்கியப்படுத்தும் விடயத்தில் "சிறிதளவே" எதிர்பார்ப்புகள் காணப்படுவதாகத் தென்படுகிறது.

8 வருடங்களுக்கு முன்பு புலிகளின் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதிலிருந்து நடேசனையும் புலிகளின் சமாதானத் செயலகத் தலைவர் சீவரட்ணம் புலித்தேவனையும் நான் அறிந்திருந்தேன். அந்த காலகட்டத்தில் தீவின் மூன்றில் ஒரு பகுதியை புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.

இப்போது இந்த இருவரும் எஞ்சியிருக்கும் 300 போராளிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் பாதுகாப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பலர் காயமடைந்திருந்தனர். அவர்களுடன் பல்லாயிரணக்கணக்கான தமிழ்ப் பொதுமக்களும் அகப்பட்டிருந்தனர்.

கையால் கிண்டிய பதுங்கு குழிகளுக்குள் மறைந்திருந்தனர். தொடர்ச்சியான குண்டு வீச்சுகள் அருகாமையில் நீடித்திருந்தன. புலிகளின் கிளர்ச்சியை இராணுவம் வெற்றிகரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கும் போது பல நாட்களாக புலிகளின் தலைமைத்துவத்துக்கும் ஐ.நா.விற்கும் இடையில் நான் இடைத்தரகராக இருந்தேன்.

மூன்று விடயங்களை ஐ.நா. விற்குத் தெரிவிக்குமாறு நடேசன் என்னிடம் கேட்டுக்கொண்டார். - ஆயுதங்களைக் கீழே வைப்பார்கள்- அமெரிக்கர்கள் அல்லது பிரித்தானியாவிடமிருந்து பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை அவர்கள் விரும்புகின்றனர். - தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளுக்கு சிறீலங்கா அரசாங்கம் இணங்கவேண்டுமென்ற உறுதிமொழியை அவர்கள் விரும்பியிருந்தனர்.

பிரித்தானியா, அமெரிக்காவைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகளுாடாக கொழும்பில் இருந்து ஐ.நா.வின் விசேட தூதுவர் விஜே நம்பியாருடன் நான் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தேன். அவர் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பிரதம தலைமையதிகாரியாவார். சரணடைவதற்கு புலிகளின் நிபந்தனைகளை நான் அவருக்குத் தெரிவித்திருந்தேன். அவற்றை சிறீலங்கா அரசாங்கத்துக்கு தெரிவிப்பதாக அவர் கூறியிருந்தார்.

சமாதானமான பெறுபேற்றை மோதலானது கொண்டுவரும் என்று தோன்றியது. மகிழ்ச்சியாக இருப்பவரும் கண்ணாடி அணிந்தவருமான புலித்தேவன் பதுங்கு குழிக்குள் இருந்து தான் சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படமொன்றை எனக்கு அனுப்பியிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவுக்குப் பின்னர் புலிகளிடம் இருந்து மேலதிகமான அரசியல் கோரிக்கைகளோ படங்களோ வரவில்லை. சரண் என்ற வார்த்தையை நடேசன் உபயோகிக்க மறுத்தார்.

என்னிடம் அவர் தொலைபேசி மூலம் அழைப்புக்கொண்டபோது அந்த வார்த்தையை பிரயோகிக்க மறுத்திருந்தார். ஆனால், அதனைச் செய்யவே அவர் விரும்பியிருந்தார். புலிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்க நம்பியார் பிரசன்னமாகியிருக்க வேண்டுமென்று அவர் விரும்பியிருந்தார். நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.வின் 24 மணிநேரக் கட்டுப்பாட்டு நிலையமானது கொழும்பிலுள்ள நம்பியாருடன் எனக்குத் தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்தது.

இது திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணியாகும். நான் அவரை எழுப்பினேன். புலிகள் தமது ஆயுதங்களை கீழே வைத்துவிட்டார்கள் என்று நான் அவருக்குக் கூறினேன். தனக்கு ‘நடேசனும் புலித்தேவனும் சரணடையும் போது பாதுகாப்பாக இருப்பார்கள்' என்று சிறீலங்கா தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக எனக்குக் கூறினார். வெள்ளைக் கொடியன்றை உயர்த்திப் பிடித்தவாறு வருவதே அவர்கள் செய்ய வேண்டியது என்று அவர் தெரிவித்திருந்தார்.

சரணடையும் போது சாட்சியமாக இருப்பதற்கு அவரால் வடக்கிற்கு அவர் போகக் கூடாதா என்று நான் கேட்டேன். அவர் அவசியம் இல்லையென்றார். அச்சமயம் இலண்டனில் ஞாயிறு பின்னிரவாக இருந்தது. நடேசனின் செய்மதித் தொலைபேசியில் தொடர்பு கொள்ள நான் முயற்சித்தேன். முடியவில்லை. ஆதலால் தென்னாபிரிக்காவிலுள்ள புலிகளின் தொடர்புக்கு நான் அழைப்புவிடுத்தேன்.

நம்பியாருக்கும் செய்தியைத் தெரிவிப்பதற்காக அழைப்பு விடுத்தேன். வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்து அசைப்பதே அந்தச் செய்தியாகும். அதிகாலை 5 மணியளவில் தொலைபேசி அழைப்பொன்று வந்தது. நான் விழித்தெழும்பினேன். அதில் தென்கிழக்காசியாவில் இருந்து புலிகளின் மற்றொரு தொடர்பாடல் அழைப்பாகும். அவராலும் நடேசனுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.

'எல்லாம் முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்` என்று அவர் கூறினார். 'அவர்கள் யாவரும் இறந்துவிட்டனர்` என்று நான் நினைக்கிறேன் என்று அவர் தெரிவித்தார். அன்று மாலை சிறீலங்கா இராணுவம் அவர்களின் உடல்களை பார்வைக்கு வைத்தது. சரணடைவதற்குள் என்ன நடந்தது.

மிக விரைவில் நான் கண்டுபிடிக்கவேண்டும். ஞாயிறு இரவு சிறீலங்கா நாடாளுமன்றத்திலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ரொகான் சந்திரநேருவுக்கு நடேசன் அழைப்பு விடுத்திருந்தார். அவர் உயர்மட்டத்துடன் தொடர்பு கொண்டார். அடுத்த மணித்தியாலங்களில் நிகழ்ந்தவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் கூறியிருந்தார்.

நடேசனுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் பூரண பாதுகாப்பு அளிப்பதாக தமக்குக் கூறப்பட்டது என்றும் நடேசனுடன் 300 பேர் இருப்பதாகவும் சிலர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதாகவும் நடேசன் தெரிவித்திருந்தார். சரணடையும் போது தான் செல்வதாக சிறீலங்கா உயர்மட்டத்திற்கு தான் கூறியதாக சந்திரநேரு தெரிவித்திருந்தார்.

அங்கு செல்ல வேண்டிய தேவையில்லையென்றும் வீணாக அபாயத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியமில்லையென்றும் தமக்குக் கூறப்பட்டதாக சந்திரநேரு தெரிவித்திருந்தார். திங்கட்கிழமை உள்ளூர் நேரம் 6.20 மணியளவில் நடேசனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பு கொண்டார். துவக்குச் சூடு சத்தம் பெரிதாகக் கேட்டுக்கொண்டிருந்தது. நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று நடேசன் கூறினார்.

வெள்ளைக் கொடியுடன் நான் போகப்போகிறேன் என்று நடேசன் தெரிவித்தார். உயரமாகக் கொடியைப் பிடித்துக் கொண்டு போகுமாறும் அவர்கள் அதனைப் பார்க்க வேண்டுமென்றும் மாலையில் உங்களை சந்திக்கிறேன் என்றும் தான் நடேசனிடம் கூறியதாக சந்திரநேரு தெரிவித்தார். ஆனால் என்ன நடந்தது? என்ன நடந்தது? என்று அந்த இடத்தில் இருந்து தப்பிய தமிழர் ஒருவர் கூறியுள்ளார்.

அவர் நிவாரணப் பணியாளர் ஒருவரிடம் அதனைத் தெரிவித்திருக்கிறார். நடேசனும் புலித்தேவனும் மற்றும் ஆண்களும் பெண்களுமாக ஒரு குழுவினர் வந்ததாகவும் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஐ.நா. தூதுவரான நம்பியாரின் பங்களிப்புக் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

அவரின் சகோதரர் சதீஸ் நம்பியார் 2002 இல் இருந்து சிறீலங்கா இராணுவத்திற்கு ஆலோசகராக இருந்து வருகிறார். விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்டிருந்தனர். தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் என்பன தொடர்பாக அவர்கள் தடைசெய்யப்பட்டிருந்த போதும் புலித்தேவனும் நடேசனும் மோதலுக்கு அரசியல் தீர்வொன்றை காணவேண்டுமென்பதில் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.

அவர்கள் உயிருடன் இருந்தால் தமிழ் சிறுபான்மையினருக்கு நம்பகரமான அரசியல் தலைவர்களாக இருந்திருக்கக்கூடும். இலங்கைக்கு 2001 இல் நான் முதலாவதாகச் சென்றிருந்தேன். 5 இலட்சம் தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்களை தடைசெய்திருப்பதாக வெளியான செய்திகள் குறித்து ஆராய்ந்து செய்தி எழுதுவதற்காகச் சென்றிருந்தேன்.

6 வருடங்களாக பத்திரிகையாளர்களுக்கு வடக்கே அச்சமயம் தடைவிதிக்கப்பட்டிருந்தது. மக்கள் மிகவும் கஷ்டமான நிலைமையில் இருந்தனர். மருத்துவர்கள் மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு குறித்து கோரிக்கை விடுத்தவாறு இருந்தனர். நடேசன், புலித்தேவன் போன்றவர்கள் தமது கோரிக்கைகளைத் தாங்கள் குறைத்துக்கொண்டிருப்பதாகவும் சுதந்திரத்தில் இருந்து இலங்கைக்குள் சுயாட்சியைக் கோரவிரும்புவதாகவும் என்னிடம் தெரிவித்திருந்தனர்.

இரவு வேளையில் நான் அவர்களின் இடத்திற்குக் கடத்திச் செல்லப்பட்டேன். ஆயினும் சிறீலங்கா இராணுவத்தினர் பதுங்கியிருந்து நடவடிக்கையை மேற்கொண்டனர். "பத்திரிகையாளர்... பத்திரிகையாளர்..." என்று சத்தமிடும்வரை நான் காயமடைந்திருக்கவில்லை.

அதன் பின்னர் தமிழர்களுடன் எனக்கு இடைக்கிடையே தொடர்புகள் இருந்தது. இராணுவத்தின் புதிய நடவடிக்கை புலிகள் எதிர்கொண்ட அண்மைய மாதங்களில் தலைமைத்துவத்திடமிருந்து எனக்குத் தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புகள் கிடைத்தன. ஒரு தொலைபேசி அழைப்பில் சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுக்குத் தாங்கள் கட்டுப்படுவார்கள் என்று நடேசன் கூறியிருந்தார்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து வெற்றி கிடைத்துள்ளது. தமிழ்ப் பொதுமக்களின் விலை செலுத்தப்பட்டதாக அது வந்துள்ளது. இறுதி யுத்த நடவடிக்கையின் போது 7 ஆயிரம் பொதுமக்கள் இறந்ததாக ஐ.நா. கூறுகிறது. ஆயினும் அதன் இழப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமென்றும் நம்பப்படுகிறது.

மோதல் வலயத்திலிருந்த 2 இலட்சத்து 80 ஆயிரம் பேர் முகாம்களுக்குள் உள்ளனர். அவர்களின் நிலைமை மிக மோசமாகிவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு கூடாரத்திற்குள்ளும் மூன்று குடும்பங்கள் உள்ளதாக சர்வதேச உதவி வழங்கும் நிறுவனங்கள் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தன. உணவுக்கும் தண்ணீருக்கும் பல மணிநேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

44 ஆயிரம் பேர் உள்ள முகாமில் ஒரே ஒரு மருத்துவரே இருப்பதாக ஒரு நிவாரணப் பணியாளர் ஒருவர் கூறியுள்ளார். உதவி வழங்கும் அமைப்புகளுாடாக அகதிகள் சண்டே டைம்ஸ் (இலண்டன்) உடன் தொடர்பு கொள்ள முடிந்தது. 'நாங்கள் எப்படி வாழ்கிறோம்` என்று முகாமில் இரு பிள்ளைகளுடன் இருக்கும் பெண்ணொருவர் கூறினார்.

"எமக்கு இடமில்லை. வெயிலில் இருந்து பாதுகாப்பு இல்லை. கைதிகளாக முட்கம்பி வேலிக்குள் இருக்கின்றோம். இரண்டு பிள்ளைகளின் தாயான நான் என்ன செய்வேன் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நாங்கள் ஏன் இங்கு இருக்கிறோம்" என்று அந்தப் பெண் கேள்வியெழுப்பினார். நாட்டை ஐக்கியப்படுத்துவதாகவும் 80 வீதமான அகதிகளை ஆண்டு முடிவதற்குள் மீளக்குடியேற்றப் போவதாகவும் சிறீலங்கா ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது யதார்த்த பூர்வமானது என்று நான் நினைக்கவில்லை.

எவரையும் விடுவிப்பதற்கான நடைமுறை இல்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அன்னா நெய்சாட் டைம்ஸ் இற்குக் கூறியுள்ளார். அரசாங்கம் எத்தகைய நோக்கங்களை பிரகடனப்படுத்தினாலும் தமிழ் மக்களின் துன்பங்களுக்குத் தீர்வு காணப்படும் வரை எதிர்காலத்தில் இலங்கையை ஐக்கியப்படுத்தும் விடயத்தில் "சிறிதளவே" எதிர்பார்ப்புகள் காணப்படுவதாகத் தென்படுகிறது.

நன்றி

ஈழமுரசு(29.05.09)

www.tamilkathir.com

Comments