இலங்கைக்கு பிரித்தானியா ஆயுதம் வழங்கியுள்ளது அதிர்ச்சித் தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுக்க பிரித்தானியா மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாக டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பிரித்தானியாவும் மில்லியன் பவுண்ட் பெறுமதியான இராணுவ தளவாடங்களை இலங்கைக்கு விற்பனை செய்துள்ளன என திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 13.6 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான இயந்திர துப்பாக்கிகள், இராணுவ வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பட்ட இராணுவ தளவாடங்களை பிரித்தானியா இலங்கைக்கு விற்பனை செய்துள்ளது.ஸ்லோவாக்கியா 1.1 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களையும், பல்கேரியா 1.75 ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களையும் விற்பனை செய்துள்ளன.

எவ்வாறெனினும், இந்த அனைத்து ஆயுத கொடுக்கல் வாங்கல்களும் பூர்த்தியடைந்துள்ளனவா என்பது குறித்து உறுதிப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக குறித்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
இராணுவ தளவாட விற்பனைக்கு அரசாங்கங்கள் அனுமதியளித்த போதிலும், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனவா என்பது குறித்து சரியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மோசமான மனித உரிமை நிலைமைகள் காணப்படும் நாடுகளுக்கோ அல்லது உள்ளக பிரச்சினைகள் காணப்படும் நாடுகளுக்கோ ஐரோப்பிய ஒன்றியம் ஆயுதங்களை விநியோகம் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஊடக சுதந்திரம் மற்றும் தொண்டு நிறுவன ஊழியர்கள் அகதி முகாம்களுக்கு செல்ல பூரண அனுமதி அளிக்கப்படும் வரையில் ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகம் செய்யக் கூடாது என பிரித்தானிய தொழில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் பெட்டல் தெரிவித்துள்ளார்.

Comments