"வணங்கா மண்" சிறீலங்கா கடற்படையினரால் சர்வதேச கடலில் வைத்து பிடிக்கப்பட்டது

புலம்பெயர்ந்த மக்களால் தாயக மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களுடன் சென்றுகொண்டிருந்த வணங்கா மண் கப்பல் சிறீலங்கா கடற்படையினரால் சர்வதேச கடற்பரப்பில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டு கொழும்புத் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 20ம் திகதி தனது பயணத்தை பிரித்தானியாவில் இருந்து சிரிய நாட்டைச் சேர்ந்த "கப்டன் அலி" என்ற இக்கப்பல் பயணத்தை ஆரம்பித்திருந்தது. இலங்கைக்கு அருகில் சென்றதன் பின்னர் சிறீலங்காவுடன் தொடர்புகொண்டு பொருட்களை வழங்குவதற்கு இக்கப்பலின் கப்டனும் முன்னர் இலங்கையில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் பணியாற்றியவருமான கிறிஸ்ரியா கொமஸ்தா முடிவு செய்திருந்தபோதும், இன்று இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து சிறீலங்கா கடற்படையினரால் கப்பல் பிடிக்கப்பட்டுள்ளது.

கப்பல் தங்களால் பிடிக்கப்பட்டதை சிறீலங்கா உறுதி செய்துள்ள அதேவேளை, விடுதலைப் புலிகளின் கப்பலில் இருந்த கப்டன் உட்பட 15 சிப்பந்திகளையும் தடுத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Comments