சிறிலங்கா போர்க்குற்றங்கள்பற்றி விசாரணை தேவை: சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் சிறிலங்க அரசாங்கம் நடத்திய போர்க்குற்றங்கள் பற்றி முறையான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு (Amnesty International) வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்க அரசாங்கத்தால் நடத்தப்பட்ட இனப்படுகொலையின் போது பலியான அப்பாவி பொதுமக்களின் எண்ணிக்கை குறித்து வெளியான தகவல்களில் உண்மை இல்லை என 5 தமிழ் மருத்துவர்கள் கூறியுள்ளதாக சிறிலங்க அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதிலளிக்கும் விதமாக, சிறிலங்க அரசாங்கத்தின் இனப் படுகொலை குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு, சிறிலங்க அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு, தற்போது ராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளவர்களிடமும் ரகசிய விசாரணை நடத்தி உண்மையை உலகிற்கு உணர்த்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

தங்களுக்கு ஆதரவான வகையில் தகவல்களை பெறுவதற்காக சிறிலங்க அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதற்கு பல உதாரணங்கள் உள்ளது. அந்த வகையில் தற்போது 5 தமிழ் மருத்துவர்களும் சிறிலங்க அதிகாரிகளின் மிரட்டலுக்கு பயந்து இறுதிக்கட்ட பலி எண்ணிக்கை பற்றிய செய்திகளை மறுத்துக் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மருத்துவர்களின் கருத்துகளில் எந்தளவு உண்மை உள்ளது எனவும் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கேள்விகள்:

-
வழக்கறிஞர்களை சந்திக்கக் கூட வழியில்லாத நிலையில், சிறிலங்க அரசின் மிரட்டலுக்கு பயந்து நிலையில் தமிழ் மருத்துவர்கள் கூறும் கருத்தை எப்படி உண்மை என ஏற்க முடிம்?

-
சுதந்திரமான முறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் கூறப்பட்ட பலி எண்ணிக்கைக்கும், மருத்துவர்களின் கருத்திற்கும் ஏராளமான முரண்பாடு உள்ளது.

-
விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து மருத்துவர்கள் திரும்பிய போது கூறிய கருத்துக்கும், தற்போது 2 மாதம் கழித்து தற்போது அவர்கள் தங்கள் கருத்தை திரும்பப் பெற்றுள்ளதும் சந்தேகத்தை அதிகரிக்கிறது.

எது எப்படி இருந்தாலும், போர்ப் பகுதியில் சிக்கிய பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் பாதுகாப்பும், நலனும் காக்கப்பட வேண்டியது அவசியம் எனக் கூறியுள்ள சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு அவர்களை சிறிலங்க அரசு தண்டிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்டவர்களை நெருக்குதலுக்கு உள்ளாக்கி தங்களுக்கு சாதகமான வகையில் அவர்களை பேட்டியளிக்கச் செய்யும் நடவடிக்கையில் சிறிலங்க அதிகாரிகள் நீண்ட காலமாகவே ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

இதுபோன்ற சூழலில் தமிழ் மருத்துவர்களின் கருத்து நம்பகமானதா என்பதை அறிய முடியாது. எனினும், போர் நடைபெற்ற போது அப்பகுதிகளில் மக்களுக்கு சேவை செய்த மனிதாபிமானக் குழுக்களின் (ஐ.நா மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் உட்பட) கருத்துகளுக்கு எதிராக தற்போது மருத்துவர்கள் கூறியுள்ள கருத்து இருக்கிறது.


போர்ப் பகுதியில் இருந்து கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் 9ஆம் தேதி வரை காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட 14 ஆயிரம் மக்களை இந்த மருத்துவர்களின் உதவியுடன் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றியதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 600 முதல் 650 மக்கள் மட்டுமே காயமடைந்ததாக மருத்துவர் வரதராஜா கூறியுள்ளார். இந்த 2 கூற்றுகளும் முரண்பாடு கொண்டவையாக உள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது கடந்த பிப்ரவரியில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுவதை மருத்துவர்கள் மறுத்துள்ளனர். ஆனால் ஐ.நா.வும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் அந்தத் தாக்குதலை உறுதி செய்துள்ளன.

இதுமட்டுமின்றி செய்தியாளர்கள் சந்திப்பிற்கு வந்த மருத்துவர்களை சிறிலங்க அரசாங்கம் தொடர்ந்து தனிப்படுத்தியே வைத்திருக்கிறது. வழக்கறிஞர்களுடன் பேச அந்த மருத்துவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

மேலும் விடுதலைப்புலிகளின் வற்புறுத்தல் காரணமாகவே அப்பாவி மக்களுக்கு தாங்கள் சிகிச்சை அளித்ததாக அவர்கள் கூறினாலும், அதை மறுப்பதுடன் அவர்கள் மீது தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றசாற்றுகளை சுமத்தப் போவதாக சில மூத்த அரசு அதிகாரிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்க அரசு நடத்திய இனப்படுகொலை தொடர்பாக தகவல் வைத்துள்ள ஐ.நா. மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் உட்பட அனைத்து சர்வதேச மனிதாபிமான, தன்னார்வ அமைப்புகளும் அவற்றை வெளிப்படுத்த வேண்டும் எனவும் சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சிறிலங்க அரசு நடத்திய போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு இந்த அமைப்புகள் வெளியிடும் தகவல்கள் பேருதவியாக இருக்கும் என தனது அறிக்கையில் சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு கூறியுள்ளது.

Comments