சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அனைத்து அதிகாரங்களுடனான முழுமையான சுயாட்சி வழங்கப்பட வேண்டும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தனித்துவமான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அனைத்து அதிகாரங்களுடனான முழுமையான சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் யாழ் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
நாம் இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை வரையறுத்து வருகின்றோம். அதனை விரையில் வெளியிடுவோம்.

தனித்துவமான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அனைத்து அதிகாரங்களுடனான முழுமையான சுயாட்சி தேவை. காணி, பாதுகாப்பு, விவசாயம், கைத்தொழில் என முக்கிய அதிகாரங்கள் எங்களுடைய கையில் இருக்க வேண்டும். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியினை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் திரட்டுவதற்கான அனுமதியை இந்த அரசு கொண்டிருக்க வேண்டும். இதுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் தீர்வுத் திட்டம் ஆகும்.

புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் தங்களது தாயகத்தில் முதலீடுகளைச் செய்வதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கின்றார்கள். இதேபோன்று தமிழ் அமைப்புகளும் நிதியினை; தருவதற்கு முன்வந்துள்ளன.

நாம் இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்தியாவுடன் இணைந்தே தீர்வைக் காண முடியும் என வலியுறுத்தி வருகின்றோம். இதற்கு இந்தியா சம்மதித்துள்ளது.

தமிழர்களுக்கு 13வது அரசியல் திருத்தம் தீர்வாக அமையாது. 13வது அரசியல் திருத்தச் சட்டத்தினைப் பேசி வந்த மகிந்த ராஜபக்ச அதனைக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டார். 1997 ஆம் ஆண்டும், 2004 ஆம் ஆண்டும் எங்களை நாங்களே ஆளும் சுயநிர்ணய உரிமைக்காகவே இணைந்த அனைத்து கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்.

இதுகுறித்து நாம் சிறீலங்கா அரசுடனும் அனைத்துலக சமூகத்துடனும் பேசுவதற்கு தயாராக உள்ளோம்.

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய மாநகரசபைத் தேர்தல்களில் வாக்களிப்பதன் ஊடாக சுயநிர்ணய உரிமையை மக்கள் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தப் போகிறார்கள்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்துவிட்டது. பயங்கரவாதம் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ள விட்டது. இனி எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்பதனை சிறீலங்கா அரசாங்கம் அனைத்துலகத்திற்குக் காட்டவே இத்தேர்தலை அரசாங்கம் நடத்துகின்றது.

தமிழ் மக்களின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை அனைத்துலக சமூகம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது. இவற்றைப் புரிந்துகொண்டு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் இதனை உறுதி செய்ய வேண்டும்.
22 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுத்தவர்கள். இவர்கள் எங்களுக்காக பேசும் உரித்துக் கொண்டவர்கள் என்பதனை உறுதி செய்ய வேண்டும். இதனை திருகோணமலையிலும், அம்பாறையிலும் மக்கள் உறுதி செய்துவிட்டார்கள். இத்தேர்தல் முக்கியமானது. இதற்காகவே நாங்கள் தேர்தலில் போட்டியிடுகின்றோம். தேர்தலில் நாங்கள் நிட்சயம் வெற்றி பெறுவோம்.

தேர்தல் வரலாம், போகலாம் நாங்கள் அடிப்படைக் கொள்கைகளை எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. எமது மக்கள் கௌரமாகவும் சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

நாட்டில் சிறுபாண்மை இனம் இல்லை. தமிழ், முஸ்லிங்கள் இந்த நாட்டில் இல்லை. இந்த நாடு பெரும்பாண்மை சிங்கள மக்களுக்கே சொந்தம் எனக் கூறுகிறார்.
13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் காணி, பாதுகாப்பு, விவசாயம், கைத்தொழில் ஆகியன அரசாங்கத்திடம் இருப்பதனால் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தனித்து நின்ற எதனையும் செய்ய முடியாது. முடிவு எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார் என்பதை எல்லாரும் அறிந்திருக்கிறோம்.

இலங்கை இன்பிரச்சினைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்வுத் திட்டம் ஒன்றை வரைந்து கொண்டிருக்கிறது. இதனை சிறீலங்கா அரசிடமும், இந்தியா மற்றும் அனைத்துலக நாடுகளிடமும் நாம் முன்வைக்க உள்ளோம்.

இந்த ஊடகவியாளர் சந்திப்பில் இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன், சொலமன் சிறில், துரைரட்டசிங்கம் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Comments