ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம் சென்னையில் இலட்சம் தமிழர்கள் திரளுகிறார்கள்!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மீண்டும் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உலகத் தமிழர்களுக்கு உண்டு என்பதை உணர்த்துவதற்காக ஆகஸ்ட் 20ஆம் தேதி வியாழக்கிழமையன்று மாலை 6.00 மணிக்கு சென்னை அமைந்தகரை, புல்லா அவென்யு சாலையில் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றது.
இக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனத் தலைவர் மரு. ச. இராமதாசு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர்தா. பாண்டியன், தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் திண்டிவனம் கா. இராமமூர்த்தி மற்றும் பாரதிராசா, மா. நடராசன், பசுபதி பாண்டியன், மெல்கியோர், வெள்ளையன், இளமுருகனார், இராசேந்திர சோழன், செயப்பிரகாசம் உள்படப் பலர் உரையாற்றுகின்றனர்.

பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் உலகத் தமிழர்கள் பிரகடனம் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த தோழர்கள் பெரும் திரளாக பங்கேற்க இருக்கிறார்கள். தமிழர் வரலாற்றில் முதன் முறையாக உலகத் தமிழர்கள் பிரகடனம் அறிவிக்கப்பட இருக்கிறது என்பது முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகும்.

சென்னையைத் தொடர்ந்து உலக நாடுகளிலும் இந்தியாவின் பிறமாநிலங்களிலும் வாழும் தமிழர்கள் ஆங்காங்கே ஒன்றுகூடி உலகத் தமிழர் பிரகடனத்தை அறிவிக்க இருக்கிறார்கள். தொன்மைச் சிறப்பும், வரலாற்றுப் பெருமையும் மிக்க தமிழினம், மிகப் பெரும் நெருக்கடியையும், அறை கூவல்களையும் எதிர்நோக்கியுள்ளது. இலங்கையில் பூர்வீகக் குடியினரான ஈழத் தமிழர்களைச் சிங்கள வெறியர்கள் திட்டமிட்ட இனப்படுகொலை செய்து வருகிறார்கள்.

தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. தமிழர்களின் தாயக மண்ணில் சிங்களக் குடியேற்றங்கள் தங்கு தடையின்றி நடத்தப்படுகின்றன. தமிழர் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. தமிழர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இந்தக் கொடுமைகளுக்கும், அநீதிகளுக்கும் எதிராக ஈழத் தமிழர்கள் 30 ஆண்டுக்காலம் அறவழியிலும் 30 ஆண்டுக்காலம் மறவழியிலும் போராடினார்கள். கடந்த 60 ஆண்டுக்காலத்தில் சுமார் 2 இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 10 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் எல்லாவற்றையும் இழந்த நிலையில் ஏதிலிகளாக உலக நாடுகளில் அடைக்கலம் புகுந்தார்கள்.

உள்நாட்டில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த வீடுகளிலிருந்தும், ஊர்களிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டு தங்களின் தாயக மண்ணிலேயே ஏதிலிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 3 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இராணுவச் சிறை முகாம்களில் அடைக்கப்பட்டுப் போதுமான உணவு, மருந்து மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல் அல்லல்படுகிறார்கள். இளைஞர்கள் பிரித்தெடுக்கப்பட்டு விடுதலைப் புலிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு கொடுமையான சித்திரவதைகளுக்கும் படுகொலைகளுக்கும் உள்ளாக்கப் படுகிறார்கள்.

இளம் பெண்களும், சிறுமிகளும், சிங்கள இராணுவத்தின் பாலியல் வன்முறைக் கொடுமைகளுக்கு இரையாக்கப்படுகிறார்கள். தமிழர் பகுதிகளில் உள்ள ஊர்களின் பெயர்கள் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் தமிழர்கள் தங்களின் வாழ்விடங்களை இழந்து தவிக்கும் நிலைமை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இவ்வாறு இன அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சிங்களப் பேரினவாத அரசின் நடவடிக்கைகள் மிகக் கடுமையான போர்க் குற்றமாகும்.

இன அழிப்பு , போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்ற கொடும் குற்றங்களை வரைமுறையற்ற அளவில் - ஈழத் தமிழினத்தை இலங்கைத் தீவிலிருந்து துடைத் தொழிக்கும் திட்டத்தோடு, உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும், நச்சுப்பொருட்களையும் பயன்படுத்தி, வக்கிரமான வழிமுறைகளில் - சிங்களப் பேரினவாத அரசு நிகழ்த்தியுள்ளது என்பதை உலக சமுதாயத்திற்குச் சுட்டிக்காட்டுகிறோம்.

இட்லரின் ஜெர்மனி யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அரசுக் கொள்கையாகக் கொண்டிருந்தது. கிழக்கு அய்ரோப்பாவில் மட்டும் யூத மற்றும் சிலாவிய இன மக்கள் ஏறத்தாழ 120 இலட்சம் பேர் ஈவு இரக்கமின்றி படு கொலை செய்யப்பட்டார்கள். அதைப் போல இலங்கையில் இராசபக்சேவின் அரசு தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்தி வருகிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமைக்கப்பட்ட நூரம்பர்க் - டோக்கியோ சர்வதேச நீதிமன்றங்கள் இனப்படுகொலை தண்டிக்கத்தக்க மிகப்பெரிய குற்றம் என கூறியுள்ளன.

"இனப்படுகொலை" என்ற பெருங் குற்றத்துக்குள் அடங்கக்கூடிய செயல்பாடுகள் அனைத்தையும் சிங்களப் பேரினவாத அரசு நிறைவேற்றியுள்ளது.

- தமிழின மக்கள் இரண்டு இலட்சம் பேரை இதுவரை படுகொலை செய்துள்ளது. மே 16 முதல் 18 வரையிலான மூன்று நாட்களில் மட்டும் 50,000 தமிழர்கள் கொல்லப்பட்டு, ஈழமண்ணே பிணக்காடாக்கப்பட்டது.

- போரில் 25,000 தமிழர்கள் ஊனமுற்றதாகச் செய்தி வெளியானாலும், ஊனமுற்றவர் எண்ணிக்கை அதைவிடப் பலமடங்கு ஆகும்.

- ஈழத் தமிழ் மக்களுக்கு உணவும், நீரும், மருந்தும் கிடைக்கவிடாமல் தடை செய்து, அவர்களைப் பட்டினி போட்டும், மருத்துவ உதவியில்லாமலும் கொன்றொழித்தது.

- வதை முகாம்களில் அடைபட்டுள்ள இளைஞர்கள் சிங்களப் படையினரால் நாள்தோறும் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவர்கள் முகாமுக்குத் திரும்புவதே இல்லை. வதைமுகாமுக்குள் அடைபட்டுக் கிடக்கும் பெண்கள் சிங்கள இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்படுகின்றனர்.

- தமிழினத்தில் குழந்தைகள் பிறப்பு வலுவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது; நடைமுறையில் தடை செய்யப்பட்டிருக்கிறது. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு கட்டாயக் கருச்சிதைவு, பிற பெண்களுக்குக் கட்டாயக் கருத்தடை

ஆகியவை சிங்கள இராணுவக் கட்டுப் பாட்டில் உள்ள வதை முகாம்களில் மேற்கொள்ளப்பட்டன.

- குழந்தைகள் தாய் தந்தையரிட மிருந்து பிரித்தெடுக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் இருத்தப்படுகிறார்கள். அவர்களை உளவியல் ரீதியில் ஊன மாக்குவது திட்டமிட்டுச் செயல்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் சர்வதேசக் குற்றவியல் நீதிக்குழுவினால் விசாரிக்கப்பட வேண்டிய குற்றங்கள்.

இச்செயல்பாடுகள் அனைத்தும் இனப்படுகொலை பற்றிய ஐ.நா.வின் தீர்மானத்தின் 3-வது கூறுபடி, தண்டனைக்குரிய குற்றங்கள் ஆகும். அய்.நா. பேரவையில் நிறை வேற்றப்பட்ட பல தீர்மானங்கள், இனப்படுகொலைத் தடுப்பு - தண்டித்தல் குறித்த சிறப்பு மாநாட்டில் (1948) நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கையில் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக் கைகளை உலக நாடுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என உலகத்தமிழர்களாகிய நாம் வலியுறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே 1960ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அய்.நா. பேரவை கூடி மனித குலத்தின் வாழ்வுரிமையையும், தேசிய இன உரிமையையும் அங்கீகரிக்கும் வகையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரகடனம் ஒன்றை வெளியிட்டது. 90 நாடுகள் இந்த பிரகடனத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 9 ஏகாதிபத்திய நாடுகள் மட்டுமே வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஏகாதிபத்திய நுகத்தடியில் பிணைக்கப்பட்டுத் தவித்த காலனிய ஆதிக்க நாடுகளுக்கும், மக்களுக்கும் விடுதலை வழங்குவது பற்றிய இந்தப் பிரகடனம் அடிமைப்பட்ட மக்களுக்கான விடுதலைப் பட்டயமாகக் கருதப்பட்டது. அய்.நா. பேரவை வெளியிட்ட மேற்கண்ட பிரகடனத்தின் அடிப்படையில் தமிழீழ மக்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டுமென உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி வலியுறுத்த வேண்டும்.

சிங்கள இனவெறிப் படுகொலையில் இருந்து தப்பிய தமிழர்களும் புலம் பெயர்ந்த தமிழர்களும், உலகத் தமிழர்களும் இணைந்து நின்று அய்.நா. அமைப்பினையும் உலக நாடுகளையும் சர்வதேச சமுதாயத்தையும் வற்புறுத்திச் செயல்பட வைக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ள ஆறரைக்கோடி தமிழ் மக்களுக்கு பெரும் பொறுப்பும் கடமையும் உண்டு என்பதை உணர்ந்து செயல்பட முன்வருமாறு வேண்டிக்கொள்கிறோம்.

ஈழத் தமிழர்கள் தங்களின் தாயகத்தை விடுவிக்கும் போராட்டத்தில் தங்கள் வலிமைக்கு மேலான அளப்பரிய தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். உலகில் எந்த ஒரு தேசிய இனமும் சந்தித்திராத வெங்கொடுமைகளுக்கும், பேரிழப்புகளுக்கும், ஆளாகியிருக்கிறார்கள். இந்த இழிநிலையை நாம் மாற்றியமைக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் போராட்டத்தில் எண்ணற்ற தியாகங்களைச் செய்வதற்கு உலகத் தமிழர்களாகிய நாம் அணியமாக வேண்டும். இதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த முடியும் என்பதை நெஞ்சார உணர்ந்து உலகத் தமிழர் பிரகடனத்தை சர்வதேச சமுதாயத்தின் முன் வெளியிடுவதற்காகவே சென்னையில் நாம் கூடுகிறோம்.

உலகத் தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் வேளையில் உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகள், சமத்துவ சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் நம்முடன் இணைந்து குரல் கொடுக்க முன்வருமாறும், உலகத் தமிழர்கள் அனைவரும் அவர்கள் வாழும் நாடுகளில் உள்ள மக்களையும், அரசுகளையும் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு ஆதரவாகத் திருப்புவதற்குரிய முயற்சிகளை மேற் கொள்ளுமாறும் அனைவரையும் வேண்டிக் கொள்வதற்காக சென்னையில் தமிழர்கள் பெருந்திரளாகக் கூடவேண்டும்.

தமிழர் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மகத்தான ஒரு கடமையை மேற்கொள்வதற்காகவே நாம் கூடுகிறோம். இக்கூட்டத்தில் உலகறிய நாம் செய்யவிருக்கிற பிரகடனம். ஈழத்தமிழர்களுக்கு வாழ்வளிக்கப்போகும் பிரகடனம் மட்டுமல்ல, உலகத்தமிழர் அனைவருக்கும் விடிவைக் கொண்டு வருவதற்கான வழிகாட்டும் பிரகடனமுமாகும் என்பதை உணர்ந்து தமிழர்கள் கட்சி, சாதி, மத வேறுபாடுகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு சென்னையில் ஒன்றுகூடுமாறு அனைவரையும் அன்புரிமையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் பிரகடனம்

சென்னையில் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம்!

20-08-09 வியாழன் அன்று மாலை 6.00 மணிக்கு

சென்னை, அமைந்தகரை, புல்லா அவென்யு சாலை

தலைமை: பழ. நெடுமாறன், மரு.ச. இராமதாசு ,வைகோ ,தா. பாண்டியன்,திண்டிவனம் ,க. இராமமூர்த்தி, ம. நடராசன் பாரதிராசா,பசுபதி பாண்டியன் மெல்கியோர் த.வெள்ளையன் இராசேந்திர சோழன் செயப்பிரகாசம்

தமிழர்களே திரண்டு வருக!

- இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

நன்றி: தென்செய்தி (16.08.2009)

Comments