இந்திய மாயையிலிருந்து ஈழத் தமிழர்கள் விடுபடவேண்டும்

ஈழத் தமிழர்கள் பன்றிக் காய்ச்சல் வைரசுக்குப் பயப்பிடுகிறார்களோ இல்லையோ 'இந்தியா' என்ற வார்த்தையை அச்சத்துடனேயே நோக்குகிறார்கள்.

சமூக, கலாச்சார, அரசியல் பின்னணியில் இந்தியாவை ஆழமாக நேசித்த தமிழினம் இந்தியாவால் கொடுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் காந்தி, நேரு, இந்திரா காந்தி என்று பல இந்தியத் தலைவர்களின் படங்களை தங்கள் வீடுகளில் வைத்துப் பெருமைப்பட்ட ஈழத் தமிழர்களை தற்போது காந்தியின் படம் கூட அச்சமூட்டுகின்றது.
இந்திய அமைதி அழிக்கும் படை
இந்தியா என்ற தேசத்தில் ஈழத் தமிழர்கள் வைத்திருந்த பெரும் மதிப்பும், நம்பிக்கையும், நேசமும் இந்தியாவால் அடித்து நொருக்கப்பட்டு விட்டது. தற்போது ஈழத் தமிழர்களிடம் எஞ்சியிருப்பது இந்தியா குறித்த அச்சம் மட்டுமே.

தற்போதும், இந்தியாவைத் தவிர்த்துவிட்டு ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் நிரந்தரமான தீர்வு எதனையும் காண முடியாது என்று சிலர் கூறுவதும், நம்புவதும் கூட இந்த அச்சத்தினால் மட்டுமே.

பார்ப்பனிய சிந்தனையையும், வடக்கின் மேலாதிக்க மனப் பான்மையையும் எதிர்த்து உருவான திராவிடர் கட்சிகள் அண்ணாவின் காலத்திற்குப் பின்னால் பெரும் கொள்ளைக் கூட்டங்களாகவே மாறிவிட்டது. ஊழல் அரசியலில் தமது சுயத்தைத் தொலைத்துவிட்ட தமிழக அரசியல் வாதிகள் டெல்லியின் பிடியில் தம்மை அடமானம் வைத்துவிட்டு, அவர்களின் விருப்பங்களை மட்டுமே பிரதி பலிப்பவர்களாக மாற்றம் பெற்று விட்டனர்.

பேரறிஞர் அண்ணாவால் கட்டி எழுப்பப் பட்ட இனமான உணர்வு ஆட்சி அதிகாரத் திற்கான சமரசப் பொருளாக மாற்றம் பெற்றுவிட்டது. தமிழக மக்களின் உணர்வு களும் விருப்பங்களும் தமிழக அரசியல்வாதிகளால் விலைக்கு வாங்கப்படும் அளவுக்கு மலிவானதாக மாற்றம் பெற்றுவிட்டது.
அதனால், ஈழத் தமிழர்களின் அவலங்கள் எவையும் தமிழகத்தில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. அப்படி ஏற்படும் நிலையிலும், டெல்லியால் அது கண்டு கொள்ளப்படப் போவதும் இல்லை.

முள்ளி வாய்க்கால் பேரவலத்தின் பின்பும் தமிழகம் ஈழத் தமிழர்களுக்கு உதவும் என்று நம்பினால் அதைவிடவும் ஒரு முட்டாள்த்தனம் இருக்கப் போவதில்லை.
டெல்லி அரசியலில் பலம் வாய்ந்த பாகமாக அங்கம் வகிக்கும் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஈழத் தமிழர்களுக்காகத் தமது வசதி வாய்ப்புக் களை இழக்கத் துணியப் போவதில்லை. டெல்லிப் பிரம்மாக்களும் ஈழத் தமிழர்களுக்கான எந்த நல்லதையும் இதுவரை செய்யவும் இல்லை. இனிமேலும் செய்யப் போவதும் இல்லை.

எம்மில் பலர் இந்தியாவின் ஈழத் தமிழர்கள் மீதான முன்னைய அக்கறைகளைக் 'கருணை' என்ற கண்ணோhட் டத்தில் இப்போதும் நினைவு கூருகிறார்கள்.

அமெரிக்கா - ரஷ்யா என்ற இரு துருவப் பனிப் போர் காலத்தில், சிங்கள அரசு அமெரிக்கா பக்கம் சாய்வதைத் தடுத்து நிறுத்துவதற்காகவே எண்பதுகளின் காலப் பகுதியில் இந்திரா காந்தி தலைமையிலான இந்தியா ஈழத் தமிழர்களுக்காக வக்காலத்து வாங்குவது போல, தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் அள்ளி வழங்கியது.

அன்றைய காலத்தில், திட்டமிட்டு, ஈழத் தமிழ் இளைஞர்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி, பல பிரிவுகளாக்கிய பெருமையும் இந்தியாவைச் சேர்ந்திருந்தது.

ஈழத் தமிழர்களை ஒன்று படுத்தி வென்றெடுக்க வேண்டிய விடுதலைப் போராட்டத்தை தனது நோக்கத்திற் காகப் பல்வேறு ஆயுதக் குழுக்களை உருவாக்கியதன் மூலம் தமிழீழ இளைஞர்களின் நோக்கத்தையே இந்தியா சிதைத்தது.

அதற்குப் பின்னரும் கூட, இந்த ஆயுதக் குழுக்கள் ஒன்றிணைந்து விடக் கூடாது என்பதில் இந்திய அரசு மிகக் கவனமாகவே நடந்து கொண்டது.

தமது கட்டுக்குள் அடங்க மறுத்த விடுதலைப் புலிகளை ஏனைய ஆயுதக் குழுக்கள் மூலம் நிர்மூலமாக்கும் திட்டத்தையும் அரங்கேற்றியது.

ஆக மொத்தத்தில், ஈழத் தமிழ் இளைஞர்களின் சிங்கள எதிர்ப்புணர்வை இந்தியா தனக்குச் சாதகமாக நன்றாகவே பயன்படுத்திக் கொண்டது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தனது பிராந்திய வல்லாதிக்க விரிவாக்கத்திற்காக மட்டுமே இந்தியா பயன்படுத்திக் கொண்டது. இனவாத அமைப்பாக மாற்றம் பெற்றிருந்தாலும் ஜே.வி.பி. இந்தியா குறித்து அண்மையில் வெளியிட்ட கருத்து நூறு வீதம் சரியானதே.

'இலங்கையில் நடைபெற்று முடிந்த அத்தனை அழிவுகளுக்கும் இந்தியாவே காரணம்' என்று ஜே.வி.பி. கூறிய கருத்தை யாராலும் நிராகரித்துவிட முடியாது.
'ஈழத் தமிழர்கள் பிளவுபடாத இலங்கையில் சம உரிமை பெற்றவர்களாக வாழவேண்டும்' என்ற இந்திய சிந்தனை உண்மையாக இருந்திருந்தால் இலங்கைத் தீவில் இந்த அளவுக்கு இரத்த ஆறு ஓட வேண்டி இருந்திருக்காது. இலங்கையில் இரண்டு இனங்களுக்கிடையே பிணக்குகள் உருவாகவும், அவை கூர்மையடைந்து ஆயுதப் போராட்டமாக விரிவடைந்ததற்கும் இந்தியப் பின்னணியே காரணமாக இருந்ததை மறுத்துவிட முடியாது.

இந்தியப் பின்னணியுடன் இணைத்து ஈழத் தமிழர்களை அச்சத்துடன் நோக்கிய சிங்கள இனம், தமது சுய பாதுகாப்புடனான துவேசத்தை வளர்த்துக் கொண்டது. அந்த இந்தியப் பின்னணி குறித்த அச்சம் சிங்கள வர்கள் மத்தியில் எழுவதற்கு ஈழத் தமிழர்களின் இந்தியா சார்ந்த நம்பிக்கையே காரணமாக அமைந்தது.

இதனைப் பயன்படுத்தியே இந்தியா தனது காய்களை நகர்த்தியது. காலத்திற்குக் காலம் தமிழர்களைப் பலி கொடுத்துத் தனது காரியங்களை நிறைவு செய்தது.

விடுதலைப் புலிகளை நிர்மூலமாக்கி, ஈழத் தமிழர்களின் பலத்தைச் சிதைப்பதற்குத் தேவையான அத்தனை வளங் களையும் சிறிலங்காவிற்கு அள்ளி வழங்கிய இந்தியா, இறுதிப் போர் நடந்த காலப் பகுதியில், அவலத்தை எதிர் கொண்ட அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற முயன்ற நாடுகளையும் தடுத்து நிறுத்தியது.

அதற்கும் அப்பால், பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை மிகக் கொடூரமாக அதி பயங்கர கனரக ஆயுதங்களால் கொன்று, போர்க் குற்றம் புரிந்த சிங்கள அரசை மேற்குலகின் குற்றச்சாட்டுகளிலிருந்து காப்பாற்றிய ஈனச் செயலையும் புரிந்து தமிழீழ மக்களின் இறுதி நம்பிக்கையையும் குழி தோண்டிப் புதைத்தது.
இத்தனை கொடூரங்களுக்கும், இத்தனை துரோகங் களுக்கும் பின்னரும் இந்தியா தன் நிலையை மாற்றிக் கொள்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
முள்ளிவாய்க்கால் முதல், வவுனியா முள்வேலி முகாம் வரை ஈழத் தமிழர்களின் அவலங்கள் தொடர்பாக மேற்குலகு கொண்டுள்ள அக்கறையில் ஒரு துளி அளவாவது இந்தியா கொள்ளவில்லை.

இந்த உண்மைகளிலிருந்து நாம் தெளிவு பெற வேண்டும். இந்தியா தொடர்ந்தும் ஈழத் தமிழர்களது துயரங்களைத் தனக்கான வாய்ப்பாகப் பயன்படுத்துமானால், ஈழத் தமிழர்கள் தமது இந்தியா சார்ந்த நினைவுகளிலிருந்து விடுபட வேண்டும்.

பிராந்திய வல்லாதிக்கப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தற்போது கூர்மையடைந்து வரும் பிராந்திய வல்லாதிக்கப் போட்டியை சிங்கள அரசு தனக்குச் சார்பானதாக மாற்றியது போலவே, ஈழத் தமிழர்களும் சந்தர்ப்பங்களைத் தமக்குச் சார்பானதாக்கிக் கொள்ளவேண்டும்.

'ஈழநாடு'

Comments