சிறிலங்கா, நிறுத்து!

யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் சிறிலங்காக அரசு தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு, தொடர்ந்தும் அந்தத் தீவின் சமாதானத்தைத் தோத்து வருகின்றது. சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளை எதிர்த்துப் பெற்ற வெற்றி சரித்திரப் புகழ்வாய்ந்தாக இருந்தாலும் அதற்காகப் பெரும் அளவான இரத்தம் சிந்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதன் பிறகாவது சிறிது கீழிறங்கி சிறுபான்மைத் தமிழர்களை அரவணைக்கத் தனது கரங்களை நீட்டியிருக்கலாம். நாட்டில் தேசிய ஒற்றுமையைக் கட்டி எழுப்ப புதிய பாதை ஒன்றைத் திறந்திருக்கலாம். ஆனால், அவர் முழுமையாக இதற்கு மாறான பாதையிலேயே பயணம் செய்கின்றார்.

சிறுபான்மையினத் தமிழர்களை அடக்கி ஒடுக்கும் முயற்சியிலேயே இறங்கியுள்ளார். யுத்தம் நிறைவுக்கு வந்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், 280,000 தமிழ் மக்கள் யுத்தக் கைதிகளாக்கப்பட்டு முட்கம்பி வேலி முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மிக நெருக்கமான, அசுத்தம் நிறைந்த இந்த முகாம்களுக்குள் தமிழ் மக்கள் பெரும் அவலங்களுடன் வாழ்கின்றனர். அங்கு அகதிகளாக உள்ளவர்கள் மத்தியிலிருந்து விடுதலைப் புலிகளைப் பிரித்தெடுக்கவும், அந்த மக்ககளது சொந்த வாழ்விடங்களில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றுவதற்காகவும் இவர்களைத் தடுத்து வைத்திருப்பதாக அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆனால், இது நம்பக்கூடிய தகவலாகத் தெரியவில்லை. அரசாங்கம் தமிழ் மக்களை அடக்கி வைப்பதற்கும், யுத்தத்தின் இறுதி காலத்தில் யுத்த கள முனையில் இருந்த மக்கள் உண்மைகளைப் பேச விடாமல் அச்சுறுத்துவதற்குமாகவே இவர்களை அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது.

இந்த முகாம்கள் சர்வதேச சமூகத்தினது உதவிகளுடன் மட்டுமே பராமரிக்கப்பட்டு வருகின்ற போதும், அவர்கள் அனைவரும் விடுதலைப் புலித் தமிழர்களது அனுதாபிகளாகவே சிறிலங்கா அரசால் நோக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே இந்த உதவிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா அரசு கருதுகிறது. இதற்கு உதாரணமாக, ஐ.நா.வின் உள்ளூர் பணியாளர்கள் இருவரை கைது செய்து துன்புறுத்தி வருகின்றது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கா இல்லை சிறிலங்கா அரசுக்கா இவர்கள் உதவ வேண்டும் என்பதை சிறிலங்கா அரசு தெளிவு படுத்த வேண்டும். மழை காலம் நெருங்கி வரும் நிலையில் மிக நெருக்கமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பெரும் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்ளவுள்ளார்கள்.

ஏற்கனவே, ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழையின்போது ஆயிரக்கணக்கான அகதிகளின் கூடாரங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. இதன்போது, பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள் கோபக் குரல் எழுப்பியிருந்தனர். நாட்டில் சமாதானத்தை உருவாக்குவதற்குப் பதிலாக சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்புச் செயலாளரான அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவும் தமிழ் மக்களைப் பழிவாங்குகிறார்கள்.

அவர்கள் அப்பாவிப் பொது மக்கள் மீது யுத்தத்தை அறிவித்துள்ளார்கள். கடந்த வாரத்தில் பிரபல ஊடகவியலாளர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இன்னுமொரு மனித உரிமைச் செயற்பாட்டாளருக்கு படுகொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வெளிவந்த வீடியோ பதிவில் சிங்கள இராணுவத்தினர் நிர்வாணப்படுத்தப்பட்ட தமிழ் இளைஞர்களைச் சுட்டுக் கொல்லும் காட்சி காண்பிக்கப்பட்டுள்ளது. இவை குறித்த விசாரணைகளை நடாத்துவதற்கு ஐ.நா. சபையும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இவ்வளவு நடந்தும் சிறிலங்கா அரசு மீது மேற்குலகம் அதிக அளவு அழுத்தங்களைப் பிரயோகிக்கவில்லை.

இருந்தாலும், சிறிலங்கா அரசு அவர்களையொத்த கூடாத நாடுகளின் நட்பையே நாடுகின்றமை தெளிவாகின்றது. விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட்ட போதும், சிறிலங்கா அரசின் கொடுமைகள் காரணமாக தற்போது அகதி முகாம்களுக்குள் உள்ள கூடாரங்களில் நாளைய புலிகள் உருவாகிவருகிறார்கள். இவர்களது மனதில் சிறிலங்கா அரசுக்கு எதிரான வக்கிரங்கள் சிறிது சிறிதாக வளர்ந்து வருகின்றது.

பிரான்சின் பிரபல பத்திரிகையான லு மோந்த் ஆசிரியர் தலையங்கம்

நன்றி: தமிழாக்கம் ஈழநாடு (11.09.2009)

Comments