வேறு தெரிவற்ற நிலையில் சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டிய நிலமையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

விழிகளில் வழியும் நீரைத் துடைத்துவிட யாருமே இல்லாத வேதனையுடன் தமிழீழ மக்களாகிய நாம் மீண்டும் ஒரு புது வருடத்தினுள் பிரவேசித்துள்ளோம்.

எம்மை வதை புரிந்த எதிரிகள் இரு துருவங்களாகி எம்மிடமே வாக்குப் பிச்சை ஏந்தும் வேடிக்கையும் இந்தப் புது வருடத்தில் அரங்கேறுகிறது. கொன்றவனும், கொல்லச் சொன்னவனும் தம்மால் நடாத்தி முடிக்கப்பட்ட தமிழினப் படுகொலைகளுக்கு உரிமை கோரி சிங்கள தேசத்தின் ஆட்சியைக் கைப்பற்றும் அதிகாரப் போட்டியில் அவ்வப்போது தமிழினம் அடைந்த அவலங்களின் ஆதாரங்களும்; வெளிவந்து கொண்டுள்ளன.

இந்த இரு தமிழினப் படுகொலைகாரர்களில் எவரை ஆதரித்தால் தமக்கு நல்லது? என்ற கணக்குடன் தமிழ் அரசியல் தலைமைகளும், ஒட்டுக்குழுத் தலைமைகளும் நடந்து முடிந்த எல்லாக் கொடுமைகளுக்கும் புதிய விளக்கங்கள் கொடுக்க முற்படுகின்றார்கள். ஏற்கனவே, தென்னிலங்கையின் ஆளும் கட்சியின் பக்கமே நின்று ஆதரவு வழங்கும் டக்ளஸ் தேவானந்தா தற்போதும் மகிந்தரை ஆட்சியில் ஏற்றிவிட்டால் தன் எதிர்காலம் வில்லங்கங்கள் எதுவுமின்றி நகரும் என்ற கணக்கோடு 'மகிந்தவால்தான் தமிழர்களை இனியாவது கரையேற்ற முடியும். அதற்கு நான் உத்தரவாதம்' என்று வடக்குத் தமிழர்களிடம் சத்தியம் செய்து வருகின்றார். 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, வட - கிழக்கு இணைந்த தமிழர் தாயகம்' என்ற அவரது முன்னைய வெற்றுக் கூச்சலுக்கும் மகிந்தர் முடிவுரை எழுதிவிட்டதால், கிடைப்பது வரை லாபம் என்ற கணக்குடன் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டார்.

டக்ளசுக்கு இப்போது வேண்டியதெல்லாம் பாதுகாப்பும் பண வருவாயும் கொண்ட தனது கொழும்பு வாழ்க்கையைத் தொடர்வதும், வடக்கில் தனது இருப்பைத் தக்க வைப்பதற்கான ஆயுதம் ஏந்திய தனது தோழர்களுக்கான அனுமதியும் மட்டுமே. கடிவாளம் கையில் இருந்தால் குதிரைகள் அடங்கித்தானே ஆகவேண்டும் என்பதே அவரது கணிப்பாக உள்ளது. கிழக்கு மாகாணம் மகிந்தரால் பிரிக்கப்பட்டு, கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட பின்னர், வடக்கைத் தனக்கு மட்டுமே உரித்தானதாகத் தக்க வைத்துக் கொள்வதற்காக மக்கள் மத்தியில் ஏராளமான சமூகவிரோத ஆயுததாரிகளை ஊடுருவ விட்டுள்ளார். இன்றைய நாட்களில், மக்கள் ஆயுத படைகளை விடவும் இந்த ஆயுததாரிகளுக்கே அதிகம் பயப்படுகிறார்கள். முதலில் இந்தத் தமிழின விரோதிகளிடமிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ள வட தமிழீழ மக்கள் விரும்பாத நிலையிலும் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிப்பதன் மூலம் தம்மை இந்த ஒட்டுக் குழுக்களிடமிருந்தாவது விடுவித்துக் கொள்ளலாம் என்று நம்புகின்றார்கள். கடந்த வருட பின் பகுதியில் நடந்து முடிந்த யாழ். மாநகரசபைத் தேர்தலிலும், வவுனியா நகரசபைத் தேர்தலிலும் மக்கள் வழங்கிய தீர்ப்பையும் மீறி டக்ளஸ் குழுவினர் மகிந்தவிற்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்வது வேடிக்கையானதே.

வடக்கிலிருந்து பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை மீண்டும் வடக்கோடு இணைப்பதனை மகிந்த அரசு விரும்பவில்லை. ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்புடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பில் மகிந்த இதைத் தெளிவாகவே தெரிவித்துவிட்டார். கிழக்கில் தற்போதைய நிலையில் தமிழரிலும் பார்க்க முஸ்லீம்கள் அதிகமாக உள்ளதால், வடக்கையும் கிழக்கையும் இணைத்து முஸ்லிம் மக்களுக்கு அநீதி இளைக்க முடியாது என்று அறுதியாகத் தெரிவித்துள்ளார். இதன்படி, மகிந்த சிந்தனை மூலம் கிழக்கு மாகாணம் தமிழர்களது பிரதேசம் என்ற அடிப்படையே அழிக்கப்பட்டுவிடும் அபாயம் தோன்றியுள்ளது. இது அங்கு குடியிருக்கும் தென் தமிழீழ மக்களது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த அபாயத்திலிருந்து உடனடியாக விடுபடுவதற்கு தென் தமிழீழ மக்களும் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினுள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

மலையகத் தமிழர்கள் கடந்த ஆட்சிக்காலத்தின் துயரங்களையும் அடக்கு முறைகளையும் மீண்டும் தமது தலைவர்களது நலனுக்காகத் தொடர அனுமதிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஏற்கனவே, பெரும் தொகைகளைப் பெற்றுக்கொண்டு நிபந்தனையற்ற ஆதரவை மகிந்தவுக்குத் தெரிவித்த அமைச்சர் சந்திரசேகரன் இயற்கையாகவே இதிலிருந்து நழுவிவிட்டார். ஆறுமுகன் தொண்டமானின் கட்சியிலும் பிளவு ஏற்பட்டுவிட்டது. இதுவும் மகிந்தவிற்குச் சாதகமில்லாத சூழ்நிலையையே அங்கும் ஏற்படுத்தியுள்ளது.

ஆக மொத்தத்தில், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாகக் கருதப்பட்ட தமிழர்களின் வாக்குப் பலம் முற்று முழுதாக மகிந்தவிற்குத் திரும்பிவிட்டதாகவே நம்பப்படுகின்றது. கொடூரமான ஒரு சிங்கள இனவெறி ஆட்சியாளனை அகற்றவேண்டிய கட்டாயத்தில் தமிழ் மக்களின் வாக்குக்கள் சரத் பொன்சேகாவிற்குச் சாதகமாக மாறிவிட்டதால், முன்னாள் இராணுவ தளபதியும் தமிழின அழிப்பின் பங்குதாரரும் ஆன சரத் பொன்சேகாவைத் தமிழர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்றோ, அவரை மன்னித்து விட்டார்கள் என்றோ அர்த்தம் கொள்ள முடியாது. அந்த முடிவையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் எடுத்துள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்த முடிவு வேறு தெரிவற்ற நிலையிலேயே எடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். இதனால், தமிழ் மக்களுக்கான தெரிவாகத் தலைமையின் தீர்மானங்களையும் மீறி ஜனாதிபதித் தேர்தல் களத்தில் குதித்துள்ள சிவாஜிலிங்கம் அவர்கள் நிலமையைப் புரிந்துகொண்டு விலகிக்கொள்வதே அவருக்கான கௌரவமாக அமையும். அப்படி இல்லாத பட்சத்தில், சில அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் களத்தில் இவர் இறக்கப்பட்ட பின்னணி குறித்த ஊகங்கள் உண்மையாகிவிடும். அந்தப் பழிகளிலிருந்து சிவாஜிலிங்கம் அவர்கள் விடுபட்டுக்கொள்வார் என்றே நம்புகின்றோம்.

- சி. பாலச்சந்திரன்

Comments