இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் உருவாகும் மேலாதிக்கப் போட்டிகள்

அரசியலின் ஆணிவேர், ஜனநாயகத்தின் பூதக் கண்ணாடி, செய்தி அறியும் திறந்த புத்தகம் என்று கூறப்படும் பத்திரிகையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் அதிகரிக்கிறது.

எதை எழுத வேண்டும் அல்லது எழுதக் கூடாதென்கிற வரையறைகளை ஊடகங்களின் மீது திணிக்கும் ஜனநாயக ஜாம்பவான்கள் அவற்றை கையிலெடுத்து சன்னதம் கொள்வது அபத்தமாக இருக்கிறது. தென்னிலங்கையில் ஒரு பத்திரிகை அலுவலகம் சீல் வைக்கப்பட்ட அதேவேளை குடாநாட்டு ஊடகமொன்றிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனநாயகப் பண்புகளை, அதிகாரத்தை அடைய உதவும் ஏணியாகப் பயன்படுத்தும் நவீன ஜனநாயக மறுப்புவாதிகளுக்கு நோபல் பரிசொன்று வழங்க வேண்டுமென அக் குழுவிற்கு பரிந்துரை செய்தால் உலகில் அப் பரிசைப் பெறும் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவிருக்கும்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை புறக்கணிப்பதாகக் கூறி எதிரணியினரால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மோசடித் தேர்தலுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார்.அதேவேளை இந்த நோபல் பரிசுகளின் வரலாறுகளைப் பார்க்கும் பொழுது சமாதானத்திற்கான பரிசினை 1994 இல் பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யசீர் அரபாத், 1989 இல் திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா போன்றோர் பெற்றிருந்தாலும் இன்னமும் அவர்கள் சார்ந்த தேசிய இன விடுதலைப் போராட்டம் நீடித்த வண்ணமிருக்கிறது.

உலக சமாதான நோபல் பரிசு பெற்ற, திபெத்தின் புகலிட அரசாங்கத்தின் தலைவர் 14 ஆவது தலாய்லாமா, அமெரிக்காவிற்குச் சென்று பராக் ஒபாமாவைச் சந்திப்பதனை சீனா வன்மையாக எதிர்க்கிறதாம்.ஆசிய அரசியல் மையத்தில் இரண்டு விவகாரங்கள் தற்போது முதன்மைப்படுத்தப்படுகின்றன. சீனாவின் நில ஒருமைப்பாட்டில் திபெத்தும் பாதுகாப்பில் தாய்வானும் முக்கியத்துவம் பெறுகிறதெனலாம்.2008 இல் அமெரிக்காவால் செய்து கொள் ளப்பட்ட ஆயுத விநியோக உடன்பாட்டின் பிரகாரம், 6.4 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத விற்பனையால் சீனா சினம் கொண்டுள்ளது. இவ்வாயுத பரிவர்த்தனையில் ஈடுபடும் அமெரிக்காவின் ஆயுத நிறுவனங்களின் மீது தடைகளை ஏற்படுத்த வேண்டுமென்கிற கருத்து சீன மக்கள் மத்தியில் நிலவுவதை அவதானிக்கலாம்.

இவை தவிர தலாய்லாமா ஊடாக திபெத் விவகாரத்தை முன்னிறுத்தி இராஜதந்திர சிக்கல்களை சீனாவின் மீது திணித்து அதனைத் தனிமைப்படுத்தும் நகர்வுகளில் அமெரிக்காவும் இந்தியாவும் ஈடுபடுவதாக சீன ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். ஆயினும், திபெத்தின் புகலிட அரசாங்க நிர்வாகத்தின் பேச்சாளராகிய துப்ரன் சம்பெல் இறைமையுள்ள திபெத் அரசு என்பதற்குமப்பால் பிரதேச சுயாட்சி குறித்தே தாம் சீனப் பிரதிநிதிகளுடன் பேசியதாகத் தெரிவித்திருந்தார்.
1959 ஆம் ஆண்டளவில் சுமார் 80,000 அகதிகளுடன் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள தரம்சாலாவில் புகலிட அரசாங்கத்தை நிறுவினார்.

ஏறத்தாழ 101,000 மக்கள் இந்தியாவின் பல பிரதேசங்களில் பரந்து வாழ்ந்தாலும் திபெத்தியர்கள் உருவாக்கிய புகலிட அரசிற்கு இராஜதந்திர அங்கீகாரத்தினை மத்திய அரசு இன்னமும் வழங்கவில்லை. ஆனாலும் ஈழ அகதிகளின் விவகாரத்தை வைத்து இலங்கை அரசியலில் மறைமுகமாக அழுத்தங்களை இந்தியா சுமத்த முற்படுவது போன்று திபெத் அகதிகளின் பிரச்சினையைக் கையாண்டு தம்மீது இராஜதந்திர அழுத்தங்களை ஏற்படுத்த முனைவதாக சீனா கருதுகிறது. அருணாசலப் பிரதேசத்தின் மீது உரிமை கொண்டாடும் சீனாவிற்கான பதிலடி நகர்வாக திபெத் அகதிகள் விடயத்தை இந்தியா கையாள்கிறது எனவும் கூறப்படுகிறது.

ஆயினும் தற்போது எழுந்துள்ள தாய் வான், திபெத் குறித்த முரண்நிலை மோதலில் அமெரிக்க அரசே நேரடியாக ஈடுபட்டுள் ளதை அவதானிக்கலாம்.பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டெழ முடியாமல் தவித்தாலும் ஆசியப் பிராந்தியத்தின் மிகப் பெரிய வல்லரசாக சீன தேசம் உருவாகாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மட்டும் அமெரிக்கா நிறுத்தவில்லை. வீழ்ச்சியிலிருந்து மீண்டெழும் போது ஆசியாவின் ஆதிக்கம் சீனாவிடம் சென்றிருந்தால் மறுபடியும் ஒரு பின்னடைவு ஏற்படலாமென்பதை அமெரிக்கா உணர்கிறது. அதேவேளை ஆசிய அல்லது உலக வல்லரசாளர் என்கிற நிலைக்கு இந்தியா வளர்ச்சியடைந்து விடாமல், தென்னாசியப் பிராந்திய வல்லரசு என்கிற வட்டத்துள் அதனை மட்டுப்படுத்துவதற்கு சீனா முன்னெடுக்கும் நகர்வுகளையும் கவனிக்க வேண்டும்.

அதாவது திறைசேரியில் "2' ட்ரில்லியன் டொலர் வெளிநாட்டு நாணயம் குவியும் அதேவேளை ஆசியப் பிராந்தியத்தில் தனக்குப் போட்டியாக வளர்ச்சியடையக் கூடிய இந்தியாவைச் சுற்றி பாதுகாப்பு வலயங்களை ஏற்öகனவே சீனா நிறுவ ஆரம்பித்துள்ளது. பாகிஸ்தானின் குவடார் துறைமுகம், மேற்குச் சீனாவை இணைக்கும் "கரகோரம்' நெடுஞ்சாலை, அத்தோடு மியன்மாரின் "சிட்வே' துறைமுகம், அதன் தீவுகளில் கடல் கண்காணிப்பு நிலையங்கள், யூனானில் இருந்து மியன்மாரை இணைக்கும் பாதை போன்றவற்றின் அபிவிருத்திப் பணிக்கு பெரும் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை சீனா வழங்குகின்றது. புதிதாக அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டப் பணிகளிலும் சீனாவின் பங்கு காத்திரமானதாகக் கணிப்பிடப்படுகிறது. சீன படைத் துறையின் ஓய்வு பெற்ற அட்மிரல் "ஜின் சாவ்' அண்மைய நேர்காணலொன்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்து சமுத்திரப் பிராந்தியக் கடல் வணிகப் பாதையில் சீனாவிற்கென்று ஒரு கடற்படைத் தளம் நிறுவப்பட வேண்டுமெனத் தெரிவித்திருந்தார்.

அத்தளத்திற்கான பொருத்தமான இடத் தெரிவில் இலங்கையின் அம்பாந்தோட்டையும் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகமும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படலாமெ ன்பதே இந்திய ஆய்வாளர்களின் எதிர்வுகூறலாக இருக்கிறது. குவாடர் துறைமுகம் அமைந்துள்ள "பலுச்' மாநிலத்தில் போராட்டங்கள் நடைபெறுவதால் இலங்கையில் ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்ற நிலையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மீதே சீனாவின் பார்வை திருப்பப்படுமென்று கணிப்பிடுகிறார்கள். 1989 ஆம் ஆண்டு தியனமென் சதுக்கத்தில் ஏற்பட்ட மாணவர் கிளர்ச்சிவரை, அண்டைய நாடுகளோடு பல நேரடி மோதல்களில் சீனா ஈடுபட்டிருந்தது.

வியட்நாம் புரட்சிக்கு ஆதரவு வழங்கிய சீனா, 1979 இல் அதனுடன் போர் புரிந்தது. 1962 இல் இந்தியாவுடன் எல்லைத் தகராறு குறித்து மோதலில் இறங்கியது. ஆனாலும் 1990க்குப் பின்னர் தனது அயல் உறவுக் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி பொருண்மிய மேம்பாட்டினை உயர்த்த புதிய பாதையில் செல்ல ஆரம்பித்தது சீனா. அதன் பொருளாதார, இராணுவ வளர்ச்சியில் உச்ச நிலையைத்தொட்டு நிற்கும் சீனா இன்னும் இருபது வருடங்களில் அமெரிக்காவை மிஞ்சும் அளவுக்கு உலக வல்லரசாகி விடுமென்று அமெரிக்க பொருளியல் நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றார்கள். 2050இல் தற்போதைய அமெரிக்காவின் ஆதிக்க பலத்தினை இந்தியா எட்டுமெனவும் கணிப்பிடப்படுகிறது. ஆனாலும் 2050 இல் அமெரிக்காவின் பலம் எவ்வாறு இருக்குமென்பதை அவர்கள் குறிப்பிடவில்லை.

கடந்த இரு தசாப்த கால சீனாவின் அபரிமிதமான வளர்ச்சியானது, உலக மைய அரசியலின் இராணுவச் சமநிலையை ஆசியாவை நோக்கி நகர்த்துவதாக அமெரிக்கா அச்சமடைகிறது.

அத்தோடு ஆசியப் பிராந்திய பாதுகாப்பின் முக்கிய பங்காளிகளாக சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளே முன்னிலை வகிக்குமென்பதால் அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் இராணுவ தொழில்நுட்ப உதவியூடாக இந்தியாவை தமது பக்கம் ஈர்த்துக் கொள்ள அமெரிக்கா முயல்வதாகச் சீனா கருதுவதில் நியாயமுண்டு. இம்மூன்று நாடுகளும் விண்வெளி ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபடுவது எதிர்கால யுத்தங்களுக்கான தளமாக விண்வெளியைப் பயன்படுத்தலாமெனவும் நட்சத்திர யுத்தத்தின் பிதாமகன் அமெரிக்கா கவலையடைகிறது.

பாதுகாப்புச் செலவீனங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியைப் பொறுத்தவரை, தேசிய மொத்த வருமானத்தின் நான்கு சதவீதத்தை அமெரிக்காவும் ஒரு சதவீதத்தை ஜப்பானும் செலவிடுகின்றன. 80 பில்லியன் அமெரிக்க டொலர்களை தனது பாதுகாப்புக்கு சீனா ஒதுக்குகிறது. வருடந்தோறும் இந்த நிதி ஒதுக்கீடு இரு மடங்காக அதிகரிப்பதாக ஆய்வா ளர்கள் கருதுகின்றனர். அடுத்த இருபது வருடங்களில் சீனாவின் எரிபொருள் மற்றும் மூல தாதுப் பொருட்களின் தேவை இரு மடங்காக அதிகரிக்குமென்பதையும் கருத்தில் கொள்ளல் வேண்டும்.
ஏறத்தாழ ஐந்தில் நான்கு பங்கு அளவிலான எரிபொருட்கள் அல்லது மசகு எண்ணெய் இந்து சமுத்திரப் பிராந்திய கடல் பாதையூடாகவே சீனாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றது.

பாரசீக வளைகுடாவிலிருந்து பெறப்படும் திரவ வாயு மற்றும் மசகு எண்ணெய், ஆபிரிக்காவிலிருந்து வரும் இரும்புத் தாதுக்கள் போன்றவை தொடர்ச்சியாக சீனாவிற்கு சென்றடைய வேண்டுமாயின் அதன் கடற்படையின் ஆதிக்கமும் அப்பிராந்தியத்தில் அதற்கான தளங்களும் ஸ்தாபிக்கப்பட வேண் டும். ஆனாலும் சகல வல்லரசாளர்களுக்கும் குறிப்பாக சீனாவிற்கும் பெரும் அச்சுறுத்தலாக தற்போது விளங்குவது சோமாலிய கடல் கொள்ளையர்களின் கப்பல் கடத்தல்களாகும். 2009 ஒக்டோபரில் நிலக்கரி ஏற்றி வந்த சீன வணிகக் கப்பலொன்று சோமாலிய கடத்தல்காரர்களால் கடத்திச் செல்லப்பட்டு அதை விடுவிப்பதற்கு பெருந் தொகையான பணம், அமெரிக்க டொலர்களில் கப்பமாகச் செலுத்தப்பட்டது.

இவை தவிர தலிபான்கள் மீது மேற்குலகம் தொடுத்திருக்கும் "பின் லாடன்' அழிப்புப் போரினால் அல் கொய்தா என்கிற குளவிக் கூடு கலைக்கப்பட்டு பாகிஸ்தான், சோமாலியா, யேமன் போன்ற பல தேசங்களுக்குள் ஊடுருவி உள்ளது. யேமன் நாட்டிலிருந்து அமெரிக்க ஆதரவு பெற்ற சவூதி அரேபியாவிற்குள்ளும் அல் கொய்தா படர்ந்து செல்கிறது. ஆகவே, சோமாலியா, யெமன், சூடான் நாடுகளில் அமெரிக்கஇந்திய எதிர்ப்பு அல் கொய்தா அமைப்பினர் செலுத்தும் ஆதிக்கமானது இந்நாடுகளை அண்டிய கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பினையும் கேள்விக்குள்ளாக்கி விடும்.

அமெரிக்காவை விட சீன, இந்திய தேசங்களுக்கே இதனால் விளையும் தாக்கங்கள் கூடுதலான பாதிப்பினை ஏற்படுத்துமென ஊகிக்கப்படுகிறது.

இப்பிராந்தியத்தில் சீனக் கடற்படையின் வலு, மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறது. ஆகவே, தொடர்ச்சியான மூலவள இறக்குமதியானது மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளிலிருந்து தங்குதடையின்றி நிகழ வேண்டுமாயின், இந்திய சமுத்திரக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் கடல் ஆதிக்கம் நிலை நிறுத்தப்பட வேண்டும். எனவே, இங்குதான் இந்தியாவின் நியாயபூர்வமான தேச பாதுகாப்பு குறித்த அச்சத்தின் தாற்பரியத்தை புரிந்து கொள்ளலாம்.
இந்தியாவைச் சுற்றி சீனா கோர்த்து வரும் முத்துமாலையில் முக்கிய முத்தாக அம்பாந்தோட்டை இருப்பதாக இந்தியா உணர்கிறது. அத்தோடு தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து தனது நாட்டின் பாதுகாப்பினை அச்சுறுத்தலுக்குள்ளாக்க இந்தியா விரும்பாது. புதிய உலக ஒழுங்கிற்கு எதிராக எதிர்நீச்சல் போட்ட ஆயுதப் போராட்டம், முள்ளிவாய்க்காலோடு முற்றுப் பெற்றுள்ளது.

அரசியலில், நிரந்தர நலன் என்கிற அடிப்படைக் கோட்பாடு மாறாத வரையில் நியாயம், நீதி, அறம் என்கிற மானுட தர்மங்களெல்லாம் காட்சிப் பொருளாகவே இருக்கும். தனி ஈழம் அமைந்தால் ஏனைய பிராந்திய வல்லரசாளர்கள், இலங்கைக்குள் இலகுவாக உள்நுழைவதற்கு வாசலைத் திறந்து விட்டது போலாகி விடுமென இந்தியா அச்சமுறுகிறது. அதேவேளை வடக்கு, கிழக்கு இணைந்த பிரதேச சுயாட்சி அமைப்பு முறையொன்று தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டு மென்கிற அழுத்தங்கள் எதனையும் சிங்கள தேசத்தின் மீது இந்தியா பிரயோகிக்காது.

ஏனெனில் இந்தியாவை விட பத்துமடங்கு பலமான பிராந்திய சக்தியொன்றின் ஆதரவு இலங்கைக்கு இருப்பதனை மறந்து விட முடியாது. இந்நிலையில் தமிழ் பேசும் மக்களின் இயல்பு வாழ்விற்கும் பாதுகாப்பிற்கும் எத்தகைய சக்தியால் உடனடியாக உதவ முடியும் என்பது குறித்து யதார்த்தபூர்வமாக அணுக வேண்டும்.வெறும் உணர்ச்சிபூர்வமான பார்வைகள், கள யதார்த்தத்தை முற்றாக மறுதலித்து விடும்.சீனாவின் உலக வல்லாதிக்க கனவினை உடைக்க இந்தியாவுடன் கூட்டிணையும் அமெரிக்கா அல்லது மேற்குலகமானது, தனது பிராந்திய நலனிற்காக இந்தியாவை மீறி ஈழத் தமிழர் சார்பாக ஓர் உறுதியான நிலைப்பாட்டினை மேற்கொள்ளாது.

அதேவேளை சீனாவிலிருந்து இடம்பெயர்ந்த திபெத்தியர்கள், புகலிட அரசாங்கமொன்றினை அமைத்திட அனுமதித்த இந்திய அரசு, ஈழப் பிரகடனம் செய்து இந்தியா சென்ற வரதராஜ பெருமாள் தலைமையில் ஒரு புகலிட ஈழ அரசொன்றை அமைக்க அனுமதிக்கவுமில்லை. அதற்கு அனுசரணை வழங்கவுமில்லை. இது குறித்து ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் புலம்பெயர் நாடுகளில் நடத்தப்பட வேண்டுமென்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

இதயச்சந்திரன்

நன்றி:வீரகேசரி

Comments