இந்த நாட்டில் சனநாயகம் இல்லை? இயக்குநர் சீமான்.

மணி 10.40 சார் வணக்கம். நான் மானுட நம்பிக்கை இதழிலிருந்து பேசுகிறேன்.

வணக்கம் நான் இப்போதுதான் அலுவலகம் போய்க் கொண்டிருக்கிறேன். நீங்கள் நேராக அலுவலகம் வந்துடுங்க - சீமான், சரிங்க சார் ஒரு 12 மணிக்கு வந்துடுறோம் - நாங்கள் உடனே அந்தபக்கமிருந்து இயக்குநர் சீமான் அவர்களின் பதில் நீங்க 12 மணிக்கு வர வேணாம். பன்னிரண்டு மணிக்கு வாங்க.

இயக்குனர், தமிழின போராளி, பெண் விடுதலைக்காக அவசியமற்ற சடங்குகளுக்கு எதிராக மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் அந்த குரலுக்கு சொந்தகாரர் இயக்குனர் சீமான்.

இளையான்குடிக்கு அருகில் ஒரு கிராமம். சிறுவயதிலிருந்தே மூடநம்பிக்கையில் ஒரு வெறுப்பு இருந்தது. அப்போதே சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகளில் எனக்கு ஆர்வம் அதிகம். எல்லோரும் கோயிலுக்கு சாமி கும்பிடப் போகும் போது நான் எங்காவது மரக்கன்று நட்டுக்கொண்டிருப்பேன் இல்லையென்றால் விளையாடிக்கொண்டிருப்பேன். எங்கள் கிராமத்தில் வருடம் ஒரு தடவை முட்புதரை சுத்தம் செய்து, அந்த கோயிலை தேடி திருவிழா நடத்துவார்கள். மீண்டும் வருடம் முழுவதும் அந்த இடம் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படும். எனக்கு அது புரியாமலே இருந்தது. இந்த நாட்களில்தான் தந்தை பெரியார் அறிமுகமானார். இங்கு இறை நம்பிக்கை என்பது குளிருக்கு போர்த்திய கிழிந்த போர்வை தான்.

தந்தை பெரியாரை படிக்க, படிக்க எனக்குள் எழுந்த சந்தேகங்களுக்கு பதில் சொல்ல யாரும் தயாராக இல்லை. அதற்கு பதில் எனக்கு கிடைத்தது உருப்படாதவன் என்ற பட்டபெயர். ஆனால் அந்த ஊரில் உருப்பட்டு வந்தவன் நான் ஒருவன் மட்டுமே.

ஏழை தாய் தந்தையர், இருப்பதை விற்று, வறுமைக்கு இடையே பட்டப்படிப்பு வரை படித்தேன். பொருளாதார நெருக்கடியால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. சினிமாவுக்காகவே சென்னைக்கு வந்தேன். திரைப்படத்தை இந்த மண்ணுக்கேற்ற ஊடகமாக மாற்றும் நோக்கோடுதான் வந்தேன். அதை நோக்கி நடந்து கொண்டிருக்கிறேன்.

திரைப்படப்பணிகள் வருடத்தில் நான்கு மாதங்கள் தான். மீதமுள்ள நாட்களெல்லாம் தமிழ், தமிழினம், தமிழீழம் பெண்ணிய விடுதலை, மூட நம்பிக்கைகளுக்கெதிராக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். கனடாவில் பேசிய பிறகுதான் அடையாளங்காணப்பட்டேன். இந்த மண்ணுக்கேற்ற விஷயங்களுக்காக திரைப்படம் என்கிற மாபெரும் ஊடகத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொடக்கக்கால தமிழ் சினிமா ஒன்றாக இருந்தது. இப்போது இந்த சினிமா சிதைந்து சீரழிந்து விட்டது. அயல்நாடுகளில் திரைப்படம் இராணுவ கருவியாக ஆவணப்படுத்தப்படுகிறது. இங்கு வெறும் பொழுது போக்கு என்று பெயர் வைத்து, அதற்கு கேளிக்கை வரி விதிக்கின்றார்கள். இப்போதைய திரைப்படங்கள், அர்த்தமற்ற உரையாடல்களுடனும் அவசியமற்ற காட்சியமைப்புகளுடன் சிதைந்து கொண்டிருக்கிறது. ஆங்கிலம் கலக்காமல் பேச, எழுத யாருக்குமே துணிவில்லை. தமிழ் தலைப்புக்கு வரிவிலக்குத்தரும் இந்த அரசு, ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தும் அல்லது ஆங்கிலம் கலந்த திரைப்படங்களுக்கு இரட்டை வரிவிதித்தால் இங்கு தமிழ் வாழும். அப்படி செய்யும் போது வாய்கிழிய தமிழ் பற்றி பேசும் மற்றவர்கள் யோக்கியதை தெரியும்.

மண்வாசணை" படம் தான் எனக்கு உந்துதல். பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்தான் ஊக்கமளித்தன. திருடாதே பாப்பா திருடாதே, சின்னபயலே போன்ற சமூக பாடல்களும், கண்கள் உறங்கிடும் போதும் போன்ற இனிய பாடல்களும் கேட்க செவி ஓங்குகிறது. இப்போதெல்லாம் பாடுகிறார்களா, அல்லது சத்தம் போடுகிறார்களா என்றே தெரியவில்லை. பிறமொழிச்சொல் கலவாமல் பாடலே இல்லை என்கிற நிலைமை. இது எல்லோருடைய பொருப்பற்ற தனத்தால்தான். தமிழுணர்வும், இன உணர்வும் மங்கிவிட்டது.

ஆபாசம் என்பது இடையும், தொடையும், மார்பகத்தையும் காட்டுவது மட்டுமல்ல. மொழிகலப்பு செய்வதும்தான். வேற்று நாடுகளில் திரைப்படம் ஆவணப்படுத்தப்படும்போது இங்கு இது வெறும் மாயையை உருவாக்கிக் கொண்டிரக்கிறது. இந்த திரைப்பட மாயை ஒழிக்கப்பட வேண்டும்.

இப்போதைய அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த நாட்டில் சனநாயகம் இல்லை. சாதிரீதியிலான வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். எந்த இடத்தில் எந்த சாதியை சார்ந்த, மதத்தைச் சார்ந்த, வாக்காளர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று பார்த்து சாதிய அடிப்படையிலும், மத அடிப்படையிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படும்போது, இங்கு சனநாயகம் எங்கே இருக்கிறது? இந்தியா சனநாயக நாடு என்பதே ஒரு கற்பனையான கற்பிதம் தான். எல்லாம் எல்லார்க்கும் பொது என்ற நிலையில்லாத ஒரு தேசியம் ஒரு கேலியானதுதான். காவிரியில் இருந்து தண்ணீர்வர வழியில்லை. வந்த தண்ணீரை நம் விருப்பப்படி பயன்படுத்த உரிமையில்லை, முல்லை பெரியாறு வெறும் மனக்கணக்காயிருக்கிறது. பாலாறு தண்ணீர் பஞ்சத்திற்கும் உதவாது என்ற நிலையில் தேசியம் எங்கே வாழ்கிறது. கேரளாவில் இருக்கும் பொதுவுடமை அரசு, உலக உழைக்கும் மக்களுக்காக சித்தாந்தம் பேசும் அரசு, உலக பொதுவுடமை பேசும் அரசு, தண்ணீரை மட்டும் தனியுடமை என்கிறது. இங்கு பொதுவுடமை அவமானப்பட்டு நிற்கிறது. இங்கு தேசியம் என்ன கிழிக்கிறது.

60 ஆண்டுகளாக எங்கள் சேரி இன்னும் மாறவே இல்லை. சென்னையில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. அவைகளில் எத்தனை தமிழனுக்கு சொந்தமானவை? சென்னை அண்ணாசாலையில் உள்ள கடைகளில் 6 கடைகள்தான் தமிழனுக்கு சொந்தமானவை அதுவும் பெட்டிகடைகள். இங்கு இருப்பது போலியான அரசியல் அமைப்பு.

அன்பான சர்வாதிகாரமும், செல்லமான வன்முறையும் அவசியம். இவை உள்ள நாடுதான் சனநாயக நாடு. பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மேட்டூர் அணைக்கட்டப்பட வேண்டும் என்பதற்காக அங்கிருந்த மக்களை வெளியேற்றியபோது அங்கு ஒரு தொலைநோக்கு பார்வையிருந்தது. அந்த அணை எதிர்காலத்தில் எப்படி பயன்படப்போகிறது என்ற திட்டம் இருந்தது. கூடவே அன்பான சர்வாதிகாரமும், செல்லமான வன்முறையும் இருந்தது. அதனால்தான் அந்த திட்டம் நிறைவேறியது.

தண்ணீருக்கு போராட்டம், சாலை சரியில்லை போராட்டம், வேலையில்லை போராட்டம், மருத்துவ வசதியில்லை போராட்டம், கல்வி வியாபாரமாகிறது அதற்கும் போராட்டம், எல்லாவற்றையும் போராடித்தான் பெற வேண்டுமென்றால், கோயில் எதற்கு, சாமிகள் எதற்கு, சமயங்கள் எதற்கு?

இங்கு எல்லாவற்றிற்கும் மோதல் கொலைகள் சரியென்றால், சட்டங்கள், சட்டமியற்றும் மன்றங்கள் விசாரணைகள், நீதிமன்றங்கள் இவையெல்லாம் தேவையேயில்லை. காலில் ஒட்டிய மலத்தையும் கழுவாதவுடனும் பெயருக்கு பின்னால் சாதியை நீக்காதவனும் இந்த சமுதாயத்தில் நாற்றமடித்துப்போவான்.

கடவுள் நம்பிக்கை உள்ளதாகக் கூறும் எவனுக்கும் உண்மையில் கடவுள் நம்பிக்கை இல்லை. அதனால்தான் அவனே சட்டம் இயற்றி மனிதனை தண்டிக்கிறான். உண்மையில் கடவுள் நம்பிக்கை இருந்தால் அவனை கடவுள் பார்த்துக்கொள்வார் என்று விட்டுவிடுவான். ஆக கடவுள் நம்பிக்கை இல்லாதவனை விட கடவுள் நம்பிக்கை உள்ளவன்தான் இறை மறுப்பாலனாக இருக்கிறான். இதுவே ஒரு மோசடிதானே.

ஈழத்திலே மாந்த குல நன்மைக்காக மறுவாழ்வு நடுவங்கள் பரந்து விரிந்து அமைக்கப்படுகிறது. இங்கு சிறைச்சாலை பரந்து விரிந்து அமைக்கப்படுகிறது.

சிறையில் இருப்பவர்கள் யார்? நாட்டின் நலனுக்காக குருதி சிந்தி அடைக்கப்பட்டவர்களா இனபற்று சமர்புரிந்து சிறையை கண்டார்களா? இல்லையே. சொந்தங்களை கொலை செய்து சிறைக்கு வந்தவர்கள் ஒழுக்க நெறிக்கெட்டு சிறைக்கு வந்தவர்கள் சிறு சிறு திருட்டு குற்றத்திற்காக சிறைக்கு வந்தவர்கள் இது நம் தமிழினத்திற்கு அவமானம் அல்லவா? சிறையில்லாத தமிழ்நாடு இருக்க வேண்டும். ஆனால் இன்று தமிழ்நாடே சிறையாகத்தான் இருக்கிறது. இதை மாற்றும் முயற்சியில் தொடர்ந்து இயக்கங்கள் நடத்தப்பட வேண்டும். இனப்பற்றும் ஒழுக்கமும் உள்ள இளைஞர்களை வார்த்தெடுக்க வேண்டும். ஆனால் நமது துயர் காலம் அப்படிப்பட்ட இளைஞர்களை தேட வேண்டி இருக்கிறது.

இந்த நாட்டின் எந்த கருத்தை கூற வேண்டும் என்றாலும் நீதி மன்றத்தின் கதவை தட்ட வேண்டிய அவல நிலை இருக்கிறது. ஒரு கருத்தை கூற கூட உரிமை வழங்காத நாட்டை எப்படி மக்கள் குடியரசுஎன்று அழைக்கமுடியும். பல்வேறு அமைப்புகள் தங்கள் கருத்துக்களை மக்கள் மன்றங்களில் பதிவு செய்ய முடியாமல் கருத்துரிமை மறுக்கப்பட்ட கொடுமைக்குள்ளாகி கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கூறும் கருத்து சரியா தவறா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். ஆனால் அந்த கருத்தை சொல்ல உரிமைக்கூட மறுக்கப்படும் இந்த நாட்டை எப்படி சனநாயக நாடு என்று ஒப்புக்கொள்ள முடியும்.

(சூலை 2008 மானுட நம்பிக்கை இதழில் வெளிவந்தது)

Comments