மறக்கப்பட்ட முயற்சிகளும் மாயமான கொள்கைப்பிரகடனமும்

05-smallகண்ணீர்க் கோடுகளோடு வாழ்வுப் போராட்டம் தொடர்கிறது. இன்னமும் இயல்பு நிலை வரவில்லை. ஆனாலும் எமக்காக நாம் என்கின்ற முனைப்பில் வன்னி மக்கள் வாழ்க்கை நகர்த்த மிகவும் திண்டாடி வருகின்றார்கள். இந்த இடத்தில் தேர்தல் களத்தில் முடிந்தவரையில் அனைவரும் குதித்துள்ளனர். அனைவருக்கும் நாடாளுமன்றம் செல்லவேண்டும் என்ற ஆசை, அவா, வெப்பியாரம் எல்லாம் இருக்கிறது. ஆனாலும் மக்கள் தீர்ப்பு என்பது நேர்மையாக நடைபெறுமாக இருந்தால் அதுபற்றிய குழப்பத்திற்கான தேவை எதுவும் இல்லை. இந்தப் பத்தியின் நேரடியான நோக்கத்திற்கு வருகின்றோம்.

தேர்தல் பரப்புரைகள் நடைபெறுகின்றன. பரப்புரைகள் மூலமும் உண்மையான வேட்பாளர்களை மக்கள் இனங்காணமுடியும். ஆகவே அந்த முயற்சி பற்றிய தேவை அல்லது அது பற்றிய பார்வை எமக்கு இந்தப் பத்தியின் ஊடாக இல்லை.

இருப்பினும் பரப்புரையில் எல்லாம் சொல்லிவிடமுடியும் என்று சொல்வதை எல்லாம் கேட்பதற்கும், சொல்வது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதற்கும் அனைவரும் தயாரா? என்கின்ற கேள்வியை கருத்துவெளிப்பாட்டாளர்கள் தமக்குள்ளே கேட்பது பொருத்தப்பாடானது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது. ஆனால் கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது என்ற ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு தாம் முன்னிறுத்துகின்ற விடயங்களை மட்டுமே பெரிதாகக் காட்டுவதற்காக வரலாறுகளை (இரத்தத்தால் எழுதப்பட்ட) அழித்துவிட்டு தமது விடயங்களை வெளிப்படுத்த முனைவதை மன்னிக்க முடியாது.

புதிய முன்னணியின் வரதராஜன் அவர்கள் அண்மையில் பல வர்ணத்தினால் ஆன புள்ளிவிபரம் ஒன்றை வெளியிட்டு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகப் புதிய சாதனை படைத்தாக கருதி அதற்கான அறிமுகத்தினை வெளியிட்டுள்ளார்

01-small 02-small
03-small

அந்த அறிமுகத்திற்கான பதில்களை வழங்கவேண்டிய தேவை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளதை அவர்கள் எவ்வாறு உணர்ந்தார்களோ தெரியாது, ஆனால் ஊடகவியலாளர்கள் பதில் சொல்லவேண்டிய நிர்ப்பந்தத்தை அவர் சுட்டியிருக்கிறமையால் அவருக்கு சில உதாரணங்களை வெளிப்படுத்தலாம் என எண்ணியே இதனை எழுத முற்படுகின்றேன்.

அவரது அறிமுகத்தில் சில விடயங்களைக் குறிப்பிடுகின்றேன்

தேர்தல் வந்தவுடன் சிங்களக் குடியேற்றங்களைப் பற்றிப் பேசுபவர்களும் எழுதுபவர்களும் இவ்வளவு காலமும் எங்கு சென்றீர்கள்? தமிழர் பிரதேசங்களில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்களைப்பற்றி முழுமையான, முறையான ஓர் ஆய்வினை யாராவது செய்தார்களா?

நுனிப்புல் மேய்ந்ததுபோல வெறுமனே கல்லோயா, கந்தளாய், அல்லைக் குடியேற்றத் திட்டங்களின் பெயர்களைக் கூறுவதன் மூலமோ அல்லது இரண்டு ஆண்டுப் புள்ளி விபரங்களை வைத்துக்கொண்டு சிங்களவர் தொகை அதிகரித்துவிட்டது, தமிழர் தொகை குறைந்துவிட்டது என்று சிங்களக் குடியேற்றங்களின் பரிமாணத்தை விளங்கிக் கொள்ளமுடியுமா? மண்மீட்புப் போரை நடாத்திய நாங்கள் இந்த மண் பறிபோன வரலாற்றைப்பற்றி ஆய்வு செய்திருக்கின்றோமா?

இந்தக் கேள்விக்கான பதில் வழங்குவதில் சங்கடம் இருக்கிறது. காரணம் குழந்தைத் தனமான கேள்விகளுக்கெல்லாம் மிகப் பெரியவர்களை பதில்களாக்க வேண்டிய நிர்ப்பந்தம். ஆனாலும் தமிழ் மக்களின் தமிழ் தேசியத்தின் மிக உன்னதர்களாக இன்று மக்களிடம் வாக்குக் கேட்பவர்கள் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் பிரதான வேட்பாளராக கேட்பவர், மண்மீட்புப் போரை நடாத்திய நாங்கள் இந்த மண் பறி போன வரலாற்றைப் பற்றி ஆய்வு செய்திருக்கின்றோமா? என்று கேட்டிருப்பதால் பதில் சொல்லக்கடமைப் பட்டிருக்கின்றோம்.

தமிழீழ விடுதலைப் போர் ஆரம்பிக்கப்பட்டது முதல் அதன் வளர்ச்சி கடந்து வந்தபாதை, அதன் தோற்றத்திற்கான காரணங்கள், நில ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றம், தரப்படுத்தல், தனிச்சிங்களச்சட்டம் உட்பட்ட தேசிய விடுதலைப் போருக்கான தேவை மற்றும் தேசியப் போரின் அனைத்துப் பக்கங்களையும் கொண்ட ஏராளமான ஆய்வுகள், நூல்கள், ஒளி, ஒலி ஆவணங்கள் பதிவுகள் என ஒரு நாட்டுக்கான அனைத்தும் கொண்டே எங்கள் போராட்ட வாழ்க்கை இருந்தது.

எங்களுக்கான அனைத்துக் கட்டுமாணங்களும் இருந்தன. நீங்கள் குறிப்பிடுவது போல மண்மீட்புப் போரை நடாத்திய நாங்கள் இந்த மண் பறி போன வரலாற்றைப் பற்றி ஆய்வு செய்திருக்கின்றோமா? என்பதற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளபோதிலும் நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் ஆம், போதும் என்று ஏற்றுக்கொள்ளக்கூடியதான உங்களைச் சார்ந்தவர்களும் அறிந்த ஒரு ஆய்வை அல்லது மிகப் பெறுமதி வாய்ந்த பதிவினைப் பற்றி தற்போது குறிப்பிடலாம் என நம்புகின்றோம்.
நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை ஆனாலும், உலகத்தமிழினம் அறிந்திருக்கும். காரணம் நாங்கள் குறிப்பிடப்போகும் நில ஆக்கிரமிப்பு தொடர்பிலான மிகப் பெறுமதியான மிக நீண்டகாலமாக ஆய்வு செய்து வெளியிடப்பட்ட ஒரு நூல் தமிழீழத் தேசியத் தலைவராக உலகத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்ற மேதகு வே. பிரபாகரன் அவர்களின் ஆசியுரையுடன் வெளிவந்திருக்கின்றது.

விபுலேந்திரன் அல்லது அன்புச்செல்வன்(ரவி) என்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளியால் எழுதப்பட்டு கிளிநொச்சியில் வெளியிடப்பட்ட 'தமிழீழ எல்லைகள் நோக்கி நகர்வோம்" என்ற அந்த நூல் முழுமையான வரலாற்றுச் சான்று என்பதுடன் உங்கள் குற்றச்சாட்டக்கான பதில்ச் சான்றும் கூட.

முதலில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் அந்நூலுக்கு வழங்கியுள்ள ஆசிச் செய்தியை முழுமையாகத் தருகின்றோம்..

மனிதன் என்பவன் உலகஜீவராசிகளில் முதன்மையானவன். அவன் இயற்கை என்ற மாபெரும் சக்தி படைத்தஅற்புதமான கலைவடிவம். உயர்ந்த உயிர்வடிவம். இயற்கை மனிதனை இவ்வாறு படைத்ததோடு மட்டும்நின்றுவிடவில்லை. அவன் தன்னைத்தானே படைத்துக்கொள்ளவும் பாதுகாத்துக்கொள்ளவும்.

தனது இனத்தை விருத்திசெய்து. தனது இனத்தின் இருப்பை இறுதிசெய்துகொள்ளவும் நிர்ப்பந்திக்கிறது. இந்தஇயற்கையின் தவிர்க்கமுடியாத நியதிக்குள் நிர்ப்பந்தத்துக்குள் சிக்குண்டு மனிதவாழ்வு சுழல்கின்றது. இந்தச்சுழற்சியின் படிமங்கள், வாழும் மக்களின் அகத்திலும் புறத்திலுமாகப் பதிவாக்கம் செய்யப்படுகின்றன. அந்த மக்கள்கூட்டத்தின் சமூகத்தின் இனத்தின் வரலாறாக விரிகின்றன. இத்தகைய வரலாற்றின் ஒட்டுமொத்தப் பதிவுகள் அந்தஇனத்தின் நிரந்தர நிம்மதியான இருப்புக்குச் சாட்சியாக அவர்களின் கௌரவமான வாழ்வை அலங்கரித்துப் பெருமைசேர்க்கின்றது.

இலங்கைத்தீவில் ஏலவே வாழ்ந்த இனமொன்றின் மீது ஆக்கிரமிக்க நினைத்த இனம் ஒன்றின்பரிநிர்மாணத்துறவிகள் பின்புலமற்ற புனிதமான புனைவான வரலாறு ஒன்றை வடிவமைத்து அதற்காகவேநிகழ்காலத்தைத் திரித்து மலையாக்கி அவர்களே உருவாக்கிய மாலையை அரசகுலத்தாருக்குச் சூட்டிமகிழ்ந்தார்கள். அதன் தொடர்ச்சியாக வாழ்ந்த இனத்தின் இருப்பியல் அபிலாசைகளுக்கு வேட்டு வைக்கும்படியானவரலாற்று நூல்களை ஆக்கித் தமது வளரும் இளம்சந்ததியினருக்குத் திணித்துவந்தார்கள். இத்தகைய திரிக்கப்பட்டவரலாற்றுத்திணிப்பின் விளைவாகச் சிங்கள இனம் இன்று பேரினவாதப் படுகுழிக்குள் வீழ்நது கிடக்கின்றது.

இருண்டகால இதிகாசங்களின் கறுப்புப்போர்வையால் உசுப்பேறி எமது தேசிய இனக்கட்டமைப்பை சிதைத்து எம்மைஇனரீதியாக அழித்துவிட சிங்கள அரசு நீண்டகாலமாக எனும் மூலாதாரக் கோட்பாடுகளுக்கு வேட்டுவைத்துவரலாறு ரீதியாக எமக்கு உரித்தான எமது தாயக மண்ணில் எம்மை அழித்துவிடத் திட்டம்போட்டது.

அபிவிருத்தித் திட்டங்கள் என்ற போர்வையில் தமிழீழத் தமிழர் தாயக மண்ணில் சிங்களக்குடியேற்றங்களைஅமைத்து. நில அபகரிப்பை ஆரவாரம் இன்றி அமைதியாகவும் காத்திரமாகவும் முன்னெடுத்தது. தமிழர்கள்விழித்துக்கொண்டபோது சிங்களப்படைகளையும். சிங்களக்காடையர்களையும் நேரடியாக அனுப்பி எமது மக்களைஅடியோடு அடித்துவிரட்டி எம்மக்களது பிணக்குவியலின் மேல்குடியிருப்புக்களை நிறுவிக்கொண்டது.

தமிழர்கள் இறுதியாகப் போராட ஆரம்பித்ததும் இராணுவ நடவடிக்கைகளையும் குண்டு வீச்சுக்களையும்எறிகணைகளையும் பெரியளவில் தொடர்ச்சியாக மேற்கொண்டு. தமிழரின் குடிமனைகளையும், குடியிருப்புக்களையும் பெரியளவில் ஆக்கிரமித்தது. பலகோடி செலவில் பல்லாயிரம் இராணுவப் பாதுகாப்பிற்குமத்தியில் சிங்களக் குடியிருப்புக்களை நிறுவி எமது தாய்நிலத்தை பல கூறுகளாகத் துண்டாடி அதன் புவியியல்ஒருமைப்பாட்டைச் சிதைக்க முயன்றது.

இப்படியான அடாவடியாக முளைத்தெழுந்து இன்று பூதாகரமாக வடிவெடுத்துள்ள இந்தச் சிங்களக் குடியேற்றங்கள்இராணுவ குறிக்கோளும் அரசியல் ரீதியான அந்தரங்க நோக்கங்களும் கொண்டவை. நாம்பிறந்து வாழ்ந்த எமதுதாய்மண்ணிலேயே எமது இருப்பிற்கு ஆப்புவைத்து எமது நிலங்களை பெரியளவில் வேகமாக விழுங்கிவருகின்றன. இந்தக் குடியேற்றங்களின் உண்மையான தாற்பரியத்தை அதன் அர்த்தபரிமாணங்களில் எமதுமக்களிற்கு எடுத்துக்கூறி தெளிவூட்டவேண்டிய தேவையும் கட்டுப்பாடும் இன்று இருக்கின்றது. எமது போராளியானதிரு.சி.விபுலேந்திரன் (ரவி) இந்தத் தேவைகளையும் கடப்பாடுகளையும் கவனத்தில் எடுத்து அதில் தன்னைமுழுமையாக ஈடுபடுத்தி தமிழீழ எல்லைகள் நோக்கி நகர்வோம் என்ற நூலை எழுதி வெளியிடுவது எனக்கு பெரும்மகிழ்வைத் தருகிறது.

சிங்கள அரசு தாயகமண்ணில் காலத்திற்குக்காலம் நிகழ்த்திய மண்பறிப்பையும் நில ஆக்கிரமிப்பையும் அதன் ஆழஅகலங்களில் காலவரிசைப்படி தரிசித்து கதையாகக்கூறும் ஓர் உயர்ந்த வரலாற்று நூலாக இதுஅமைந்திருக்கின்றது. நிலங்களைப் பறிகொடுத்து தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளையும்பெரும் நெருக்கடிகளையும் பெரும் வாழ்வியல் சுமைகளையும் பல்வேறு கோணங்களில் படம்பிடித்துக்காட்டும்காலப்பெட்டகமாக இது எழுப்பட்டிருக்கின்றது.

சிங்கள அரசின் நில அபகரிப்பு நாடகத்தின் இன்றைய கொடூரமான வடிவத்தையும். அது தமிழின ஆன்மாவில்விழுத்தியுள்ள நிரந்தர வடிவையும் அங்குலமங்குலமாக ஆழமாக அலசிப்பார்த்து விலாவாரியாக இந்நூல்விளக்குகின்றது. மொத்தத்தில் இது கனமான ஒரு காலப்பதிவேடாக எல்லோருக்கும் விளங்கும்எளியமொழிநடையில் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கின்றது.

தமிழீழ வரலாற்றில் இந்நூல் என்றும் நிலைத்திருக்க வாழ்த்துவதோடு இந்நூலின் ஆக்கத்திற்கு அயாராது உழைத்தஇந்தப்போராளிப் படைப்பாளியை நான் மனமாரப் பாராட்டுகின்றேன் அத்தோடு இவரது வரலாற்றுப் பணிதொடர்ந்தும் சிறக்க எனது நல்லாசிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்."

மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வினை முழுமையாக வாசித்தறிந்தால் பதிவுகள் முழுமையாக வெளிவந்திருக்கின்றனவா? இல்லையா? ஏற்கனவே வெளிவந்திருக்கின்றதா?, எழுத்தாளர்கள் நுனிப் புல் மேய்ந்தார்களா? அடிக்கட்டையையும் விட்டுவைக்காமல் காந்தார்களா என்பது உங்களுக்குப் புரியும் என நம்புகின்றோம். உங்களுக்கு நேரப்பிரச்சினை இருந்திருக்கும் இவை வெளிவந்த காலங்களில் வகுப்புக்களால் செய்திகளை அறிய வாய்ப்பிருந்திருக்காது என்பது இயல்பான நிலைப்பாடு தான். ஆனாலும் நீங்கள் கருத்தினைச் சொல்ல முற்படுகின்ற போது உங்கள் சகாக்கள் எதிர் நிலையில் இருப்பவர்களை மட்டும் பேசுபொருளாகக் கொண்டு தேர்தல் பரப்புரை செய்வது போல் செய்தால் நன்று. மாறாக எங்கள் போராட்டத்தை மையப்படுத்தி கருத்துச் சொல்வதாக இருந்தால் எங்கள் போராட்டத்தில் என்ன செய்யப்பட்டது, என்ன செய்யப்படவில்லை என்பதை ஆய்ந்து பின்னர் கருத்துக் கூறுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகின்றோம்.

ஆனாலும் உங்கள் சகாக்கள் நாங்கள் குறிப்பிடுகின்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் பங்குகொண்டிருந்தார்கள். அவர்கள் பங்கு கொண்டதற்கான ஆதாரங்களையும் உங்களுக்காக இணைக்கின்றோம். அவர்களிடம் இது பற்றிக் கதைத்தீர்களா? அல்லது அவர்களுக்கும் அது தற்போது நினைவில் இல்லையா? இன்னமும் பெருமளவான காலப் பதிவுகளை எங்களால் வெளிப்படுத்த முடியும்.

மேற் குறிப்பிடப்பட்ட நூல் வெளியீட்டு நிகழ்வு தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிப் பொறுப்பாளர் செ.வ.தமிழேந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில், தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர்கள் இருவரும் தற்போது எம்முடன் இல்லை... இதனை விடவும் உங்களின் முக்கிய ஆலோசகராக விளங்குகின்ற ஜெயானந்தமூர்த்தி அவர்களும் நிகழ்வில் கருத்துரை நிகழ்த்தியிருந்தார்.

இது ஒரு புறமிருக்க தமிழ் தேசியத்திற்கான கொள்கைப்பிரகடனம் பற்றிய விடயத்திற்கு வருகின்றோம்.

ஒரு செய்தியினை மட்டும் உறுதியாகச் சொல்லலாம், தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி தனியான நிலைப்பாட்டினை எடுத்த போது உங்களை விடவும் எங்களைப் போன்றவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பின்னால் அது புஸ்வாணம் ஆகியதுதான் கவலையான விடயம்.

காரணம் ஒஸ்லோப் பிரகடனத்தை ஏற்க முடியாது என்று முழங்கிய நீங்கள் தனித்தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்தே தேர்தலில் குதிப்பீர்கள், அதற்கான மக்கள் ஆணை முழுமையாக கிடைக்கும் அப்போது புலம் பெயர் தளத்தில் முன்னெடுக்கப்படும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பு அதன் மீது கட்டியமைக்கப்படும் நாடுகடந்த தமிழீழ அரசு எல்லாம் ஒரே பாதையில் பயணித்து எம் மக்கள் கொடுத்த அளவிடமுடியாத விலைகளுக்கான பலன்களை துரிதமாய் பெற்றுத் தரும் என்றே நாங்கள் கனவு கண்டோம்.

இறுதியில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் நிராகரித்த ஒஸ்லோப் பிரகடனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்த நீங்கள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தன் மனதிலே அசையாது வரித்திருக்கின்ற தனித் தமிழீழத்தை எப்படி நிராகரிக்க முடியும்?

சரி அதைத்தான் சிறிலங்காவின் ஆறாவது சட்டப்படி கதைக்கமுடியாது எனக்கூறி அதற்கு அடுத்த நிலையிலுள்ள ஒரு நாட்டுக்குள் இரண்டு தேசங்கள் என்ற கோட்பாட்டை முன்வைப்பதாக எங்களுக்குள்ளே சமாதானப்பட்டுக்கொண்டோம்.

ஆனால் நீங்களும் பெயருக்கு ஒரு நாடு இரண்டு தேசங்கள் என கூறினாலும் உண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சொல்கின்ற தீர்வுக்கே வந்திருக்கின்ற விந்தை என்ன?

சில நாட்களுக்கு முன்னர் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 'உண்மையில் எங்களுடைய கொள்கை உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளுதல் என்பதாகும். அதாவது முன்னோட்டமாகச் சமஸ்டியை அடைதலாகும்..' எனக் குறிப்பிட்டுள்ளார்

முழுமையான சுயநிர்ணய உரிமை இல்லாமல் அதாவது வெளியக சுயநிர்ணய உரிமை இல்லாமல் எவ்வாறு இந்த இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்ற கோட்பாடு வலிதாகும் என்பதை தமிழ் தேசிய மக்கள் முன்னனி வெளிப்படுத்தவேண்டும். உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் உங்கள் கொள்கைகள் இருந்தால் அதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைக்கும் வேறுபாடுகள் இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்வார்கள்.

இக்கட்டுரை இரண்டு விடயங்களை தெளிவுபடுத்தும் நோக்கிலேயே சில கருத்துக்களை முன்வைத்துள்ளது. இவற்றை கவனத்தில் கொண்டு தமிழ் மக்களை சரியான பாதையில் வழிநடத்த அனைவரும் முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

- இராவணேசன் -

Comments