இலங்கை அரசை ஆட்டம் காண வைக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு


நாடு கடந்த தமிழீழ் அரசுதான் எமது இறுதிப் போரின் வடிவம், எமது மூன்றாம் கட்டப் போர். இந்த புதுமைமிக்க அரசியல் செயற்பாடு, உலக அரங்கில் இது ஓர் சாத்தியமான இராஜதந்திர நகர்வு என்று நாடு கடந்த தமிழீழ அரசின் கனடா செயற்பாட்டாளர் கலாநிதி ராம் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுடைய வாழ்விற்கு எல்லைகள் போட்ட அந்த யமனையே, தான்போட்ட கணக்குகள் யாவும் பிழைத்துவிட்டனவே என குழம்ப வைத்த ராஜபக்க்சவையே கலங்கவைக்கும் புதுமைமிகு அரசியல் முன்னெடுப்புத்தான் இந்த நாடு கடந்த தமிழீழ அரசு என அவர் தெரிவித்துள்ளார்.

சிங்களவர்களே தமிழீழ அரசின் தாக்கத்தை அறிந்து தடுமாறும்போது, அதன் வீக்கத்தைக் கண்டு வெதும்பி நிற்கும்போது நம்மவர் சிலரின் நாடித்துடிப்பை நம்மால் உணரமுடியவில்லையே. ஒன்றுசேர்ந்து ஒர் அணியில் நின்று செயற்பட வேண்டிய வேளை இவர்கள் குழம்பி நிற்பதன் காரணம்தான் என்னவோ? இரண்டு கட்டப் போரை ஒரே தலைமுறையில் வெற்றிகரமாக முடித்ததால் ஏற்பட்ட இளைப்பாலா? அல்லது மூன்றாம் கட்டப் போரைத் தொடங்குமுன் எமக்குத் தேவையான ஓய்வை எடுத்துவிட்டு செயற்படுவோம் என்ற எண்ணத்தினாலா?

பிறந்த நாள் தொடக்கம் உறங்காத ஒரே ஒரு இனத்தின் உறவுகள் நாம், நடக்கத் தொடங்கிய நாள் தொடக்கம் ஒரு கணமேனும் இளைப்பாறாத சந்ததியில் வந்தவர்கள் நாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

எம் அன்பு உள்ளகளே!

எமது விடிவை நோக்கி விழித்திருந்து செயற்படுங்கள், வேங்கைகளின் வேகத்தைக் கொண்ட எமது வேகத்தைக் குறைக்காதீர்கள். மூன்றாம் கட்டப் போரையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு நிம்மதியாக இளைப்பாறுவோம், ஓய்வு பெறுவோம். நாம் எடுக்கும் பணியைத் திறம்படச் செய்து, ஏழு ஜென்மம் எடுத்தாலும் பெறமுடியாத புண்ணியத்தை இந்த ஜென்மத்தில் நாம் பெறுவோம்.

நாடு கடந்த தமிழீழ அரசு ஓர் தனித்துவமான அரசியல் நகர்வு. இதுவரை எங்குமே அமைக்கப்படாத ஓர் புதுமைமிக்க அரசாங்கம். புலம்பெயர் அரசைவிட பலமடங்கு சாத்தியமானதும், 21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற ஓர் புதிய அரசியல் முன்னெடுப்பு. உலகில் எந்த இனத்திற்குமே கிடைக்கமுடியாத ஓர் அரிய வாய்ப்பை அந்த ஆண்டவன் எமக்குத் தந்திருக்கிறார். ஜந்து கண்டங்களிலும், முப்பதிற்கும் அதிகமான முக்கியமான நாடுகளில் நாம் வாழ்வதால் எமக்குக் கிடைத்த பலத்தின் எதிரொலிதானே இந்தத் தமிழீழ அரசிற்கான வழிகோலல். கணிசமான அளவில் உலகில் செறிந்து வாழும் எம் புலம்பெயர் மக்களின் பலம் உலகை ஆக்கிரமித்தவர்களுக்கே கிடைக்காத ஓர் வலிமைமிக்க சக்தி. நாம் தேடாமலே எமக்குக் கிடைத்த பாக்கியம்.

கனடா நாட்டின் புலம்பெயர் தமிழீழ அவைக்கான 25 பிரதிநிதிகளின் தேர்வை ஜனநாயக முறையில் நடாத்த, போட்டியிடும் அவைக்கான பிரதிநிதிகள் தொடக்கம் தொண்டர்கள்வரை எம்முடன் சேர்ந்து எமது வேலைகளைச் செய்ய, எம் தேவைகளைக் கவனிக்க இன்னும் பலர் தேவை.

இந்த வருடம் மே மாதம் 2 ம் திகதி நடக்கவிருக்கும் இத்தேர்தலை சிறப்பாகவும், நீதியாகவும் நடாத்த உங்கள் பங்களிப்பு முக்கியமானதும் தேவையானதும். இதில் பங்குகொள்வது உங்கள் கடமையும் உரிமையும் அல்லவா?

இளையோர், பெண்கள், முதியோர் எல்லோரையும் எம்முடன் சேருங்கள், சேர்ந்து உங்கள் திறமைக்கு ஏற்ற பணியைச் செய்து திறமைமிக்க, சாணக்கியமான, இராஜதந்திரமுடைய நாடு கடந்த தமிழீழ அரசின் அவைக்கான பிரதிநிதிகளை தெரிவுசெய்ய உதவுமாறு அன்புடன் அழைக்கிறோம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Dr. ராம் சிவலிங்கம்
sivalingham@sympatico.ca

Comments