தேசியத் தலைவர் நிராகரித்த ஒஸ்லோ தீர்வை ஏற்பதா? – கெளரிமுகுந்தன்


தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் நிராகரித்த ஒஸ்லோ தீர்மானத்தின் அடிப்படையிலான தீர்வு திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் இருப்பவர்கள் தற்பொழுது முன்வைத்து வருவதாக, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருகோணமலை நகர சபையின் தலைவரும், மாவட்ட முதன்மை வேட்பாளர் சண்முகராஜா கெளரிமுகுந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் திருக்கடலூர் பத்தரகாளி அம்பாள் ஆலய பரிபாலன சபையின் இளைஞர்களின் ஏற்பாட்டில் திருக்கடலூர் கடற்கரையில் கடந்த புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய கெளரிமுகுந்தன், தனக்கெதிராகப் பொய்யான பரப்புரை மேற்கொண்டு வருவதாகவும், தாம் ஒருபோதும் விலைபோக மாட்டேன் எனவும், தேசியக் கொள்கைகளைக் காப்பாற்ற பாடுபடுவேன் எனவும், மாவீரர்கள் மற்றும் மரணித்த மக்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் தமிழ் தலைவர்கள் செயற்பட்டு வருவதாகவும் கண்டனம் தெரிவித்தார்.
சண்முகராஜா கெளரிமுகுந்தன் தொடர்ந்து உரையாற்றுகையில்…

உரை கேட்க இங்கே அழுத்தவும்

தேசியத் தலைவர் நிராகரித்த தீர்வுத் திட்டத்தை இப்போது தீர்வுத் திட்டமாக முன்வைத்து வருகின்றார்கள். தமிழ் தேசிய கூட்மைப்பு கட்சி உறுப்பினர்களுக்குத் தெரியாமல் 3 தலைவர்களும் இணைந்து 24 பக்கங்கள் கொண்ட தீர்வுத் திட்டத்தை முன்வைத்துள்ளார்கள். இதில் மக்களுக்கு ஒரு தீர்வும் இல்லை. மக்களால் வாக்களிக்கப்பட்ட தேர்தெடுக்கப்பட்டு உள்ளுராட்சி மன்றங்களை நிர்வகிப்போரே எமது வேட்பாளர்கள்.

1999 ஆம் ஆண்டு திருக்கோணமலை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டவர் சம்பந்தன் அவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செல்வாக்கால் 2002ஆம் வருடம் வெற்றி பெற்றவர் இவர். தனிப்பட்ட ரீதியில் வெற்றி பெற முடியாதவர் சம்பந்தன் அவர்கள்.

10 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எனக்கு பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்தது. இன்று அவை யாவும் நீக்கப்பட்டு விட்டது. நான் மக்களுடன் மக்களாக நின்றே சேவை செய்து வருகின்றேன். திருக்கோணமலை மாவட்ட அபிவிருத்தி சம்பந்தமாக பேசப்போவதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதன காரணமாகவே சிறீலங்கா அரசுத் தலைவருடனான சந்திப்பில் நான் கலந்து கொண்டேன். அரசுடன் சேர்ந்திருதால் பல சலுகைகளை நான் பெற்றிருக்க வேண்டுமே.

இன்று கொள்கைகளில் தடுமாற்றத்துடன் சம்பந்தன் களத்தில் இருக்கின்றார். எமது மக்கள் பிரச்சனைகள் பற்றி கதைப்பதற்கு அவருக்கு நேரம் இல்லை. தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என்று கருதுகின்றார்கள். கொள்கைகளை புறம் தள்ளி விட்டு எமக்கு தாயகம் தேவை இல்லை என்று பேசுகிறார்கள். 2 நாடாளுமன்ற பிரதிநிதிகள் எமக்கு இருந்தும் அவர்கள் இல்லாதது போன்றே நாம் நடத்தப்பட்டோம். மக்கள் இலகுவாக எடை போட்டு விடுவார்கள். இத் தேர்தல் அவருக்கு நல்ல பாடம் புகட்டும் என்று தெரிவித்தார்.

Comments