ஈழத்தமிழ் ஏதிலிகளுக்கு தொடர்ச்சியான பாதுகாப்புக்கள் தேவை: சிட்னி மோர்னிங் ஹெரால்ட்

கடந்த பல வருடங்களாக நடைபெற்றதை போல சிறீலங்காவில் தொடர்ந்து தமிழ் மக்கள் துன்புறுத்தப்படுவதையும், அவர்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என்பதையுமே அவர்கள் சிறீலங்காவில் இருந்து வெளியேறிவருவது காட்டுகின்றது என அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் த சிட்னி மோர்னிங் ஹெரால்ட் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறீலங்காவில் இருந்தும் ஆப்கானிஸ்த்தானில் இருந்தும் ஏதிலித்தஞ்சம் கோருபவர்களுக்கான அனைத்துலக பாதுகாப்புக்களை மாற்றுவது தொடர்பில் திட்டமிட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஏதிலிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது கவலையானது.

ஐ.நாவின் இந்த முடிவை பயன்படுத்தி அவுஸ்திரேலியா அரசு தமிழ் மற்றும் ஆப்கான் மக்களை உடனடியாகவே திருப்பி அனுப்ப திட்டமிட்டுவருகின்றது. அவுஸ்திரேலியாவில் தற்போது தேர்தல் வருடம் என்பதால் அங்கு ஏதிலிகள் குறித்த பிரச்சனை பிரதானமாக பேசப்படுகின்றது.

எனவே தமது நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதில் எதிர்க்கட்சியுடன் போட்டியிட வேண்டிய நிலையில் அவுஸ்திரேலியா அரசு உள்ளது. ஆனால் சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள கொடூரங்களையும், அதனால் தான் தமிழ் மக்கள் தப்பி அவுஸ்திரேலியா வருகின்றனர் என்பதையும் அவர்கள் அவுஸ்திரேலியா மக்களுக்கு கூறப்போவதில்லை.

அவுஸ்திரேலியா அரசின் முடிவும், ஐ.நாவின் அறிவிப்பும் வெளிவந்த நேரம் மிகவும் ஆச்சரியமானது. ஏனெனில் அதற்கு மூன்று தினங்களுக்கு முன்னரே சிறீலங்கா அரசு அவசரகாலச்சட்டத்தை நீடித்திருந்தது. அதன் மூலம் அங்கு எதிர்த்தரப்பினர் மீது அரசு வன்முறைகளை கட்டவிழ்த்துவிடப்போகின்றது.

சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் சாட்சியமளிக்க தாயர் என கூறிய ஜெனரல் பொன்சேகா சிறீலங்கா அரசினால் கைது செய்யப்பட்டுள்ளார். போர்க் குற்றங்களை மேற்கொண்ட இராணுவத்;தை படை நடவடிக்கையில் அவரே வழிநடத்தியிருந்தார்.

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாம்களை மூடிவிடுவதாக சிறீலங்கா அரசு தெரிவித்திருந்தபோதும் 90,000 தமிழ் மக்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீபன் சிமித் தெரிவித்துள்ளார்.

ஆனால் 100,000 மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 10,000 தொடக்கம் 15,000 தமிழர்கள் இனம்தெரியாத இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது துன்புறுத்தல்களும், பாலியல் துன்புறுத்தல்களும் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த பகுதிகளுக்கு செல்வதற்கு அனைத்துலக ஊடகங்களுக்கும், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் அரசு அனுமதிகளை வழங்குவதில்லை.

சிறீலங்காவில் வசிக்கும் தமிழ் மக்கள், குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இளவயதினர் சிறீலங்கா படையினராலும், அரசின் ஆதரவுடன் இயங்கிவரும் துணைஇராணுவக் குழுவினராலும் கடுமையாக துன்புறுத்தப்படுவதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள வருடாந்த மனித உரிமை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அரசுடன் இணைந்து இயங்கிவரும் ஆயுதக்குழுக்கள் மற்றும் துணைஇராணுவக்குழுக்கள் நீதிக்குப் புறம்பான படுகொலைகளை மேற்கொள்வதுடன், காணாமல்போதல், அரசியல் கொலைகள் என்பனவும் சிறீலங்காவில் தொடர்ந்து இடம்பெறுகின்றன.

எழுந்தமானமான கைதுகள், சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படுதல், தரக்குறைவான தடுப்பு முகாம்கள், கைது செய்யப்படுபவர்கள் சட்ட உதவிகள் பெறுவதை தடுத்தல், ஊழல், நேர்மையற்ற தன்மை, நடமாடும் சுதந்திரங்களை மறுத்தல், ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தல்கள், சிறுபான்மை இனங்கள் மீதான துன்புறுத்தல்களை அரசு மேற்கொண்டு வருவதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

oceanic vikingஅரசின் ஆதரவுடன் இயங்கிவரும் துணை இராணுவக்குழுவினரும், படையினரும் இணைந்து பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், துன்புறுத்தல்கள், கடத்தல்கள், கப்பம் அறவிடுதல் போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசின் திட்டமிட்ட செயற்பாடுகளால் அரச தொழில்துறை, பல்கலைக்கழக கல்வி, வீடமைப்பு போன்ற அரச நிர்வாகத்தில் உள்ள துறைகளில் உள்ளூர் தமிழ் மக்களும், இந்திய வம்சாவளி தமிழ் மக்களும் புறம்தள்ளப்பட்டுள்ளனர்.

வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் நிலங்கள் தொடர்ச்சியாக அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த பெப்ரவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்காவுக்கான வரிச்சலுகையை நிறுத்தியுள்து. சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்துள்ளதை தொடர்ந்தே ஐரோப்பிய ஒன்றியம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.

சிறீலங்கா அரசு மிக மோசமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அங்கு பல ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர், சரணடைந்த போராளிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மனித உரிமைகள் தொடர்பான மூன்று விதிகள் சிறீலங்காவில் மோசமாக மீறப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது. பொதுமக்களின் மற்றும் அவர்களின் அரசியல் உரிமைகள், துன்புறுத்தல்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் போன்றவை சிறீலங்காவில் மோசமாக மீறப்பட்டு வருகின்றன.

சிறீலங்காவில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு ஆக்கபூர்வமான விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் மீண்டும் குற்றம்சுமத்தி வருகிறார். சிறீலங்காவில் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதல்களின் போது 40,000 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நாவின் கொழும்பு அலுவலகத்திற்கான முன்னாள் பேச்சாளர் கோடன் வைஸ் தெரிவித்திருந்தார்.

போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதை சிறீலங்கா அரசு தொடர்ந்து மறுத்துவருவதால் ஆலோசனைக்குழு ஒன்றை அமைப்பது குறித்து ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

கடந்த பல வருடங்களாக நடைபெற்றதை போல சிறீலங்காவில் தொடர்ந்து தமிழ் மக்கள் துன்புறுத்தப்படுவதையும், அவர்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என்பதையுமே அவர்கள் சிறீலங்காவில் இருந்து வெளியேறிவருவது காட்டுகின்றது.

எனவே அவுஸ்திரேலியா பிரதமர் கெவின் ருட் தேர்தல் காலத்தில் தான் எதிர்நோக்கும் அரசியல் கண்ணிவெடிகளை எதிர்கொள்வதற்கு மனித உரிமைகள் மற்றும் நீதி என்பவற்றை அனைத்துலக சமூகத்தை ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் எதிர்கொள்ள வேண்டும்.

ஏதிலிகள் தொடர்பில் எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டியது அனுகூலமானது. 1970 மற்றும் 1980 களில் வியட்னாம் மக்கள் கப்பல்களில் வந்தபோதும் இவ்வாறான அனுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஏதிலிகள் தொடர்பில் பொதுமக்களிடம் தவறான தகவல்களை பரப்பும் நோயை முதலில் அரசியல் கட்சிகள் நிறுத்த வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழம் ஈ நியூஸ்

Comments