குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவதில் இருந்து தவிர்க்கப்படும் கலாச்சாரத்திற்கு முடிவு காணப்பட வேண்டும்: பிரிட்டன்

இலங்கை தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கு விசேட நிபுணர் குழுவை நியமிப்பதற்கு ஐ.நா. செயலாளர் பான் கீ மூனுக்கு அதிகாரம் இல்லை என்ற அணி சேரா நாடுகள் அமைப்பின் வாதத்துடன் தமக்கு உடன்பாடு இல்லை என ஐ.நா.வுக்கான பிரிட்டனின் நிரந்தரப் பிரதிநிதி மார்க் லியால் கிறாண்ட் தெரிவித்துள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா.பாதுகாப்புக் கவுன்ஸிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த போது இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாகவும் அணிசேரா நாடுகளின் மறுப்புக்கடிதம் தொடர்பாகவும் இன்னர் சிற்றி பிரஸ் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே லியால் கிராண்ட் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சாசனத்தின்படி மனித உரிமைகளையும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களையும் நிலைநிறுத்துவதற்கு ஐ.நா.செயலாளர் நாயகத்திற்கு ஆணை உள்ளது. எனவே இலங்கை தொடர்பாக கடந்த மாதங்களில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் கரிசனைகள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவை அமைப்பதில் அவருக்கு முழுமையான உரிமை உள்ளது.

அவர் தனக்குள்ள அதிகாரத்தை மீறிச் செயற்படுகிறார் என்ற அணி சேரா நாடுகளின் வாதத்துடன் பிரிட்டனுக்கு உடன்பாடு இல்லை என மார்க் லியால் கூறியதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

பிரிட்டனும் ஐ.நாவும் இலங்கை தொடர்பாக குறைந்தபட்சம் வெளிப்படையாக பேசி வரும் நிலையில் இவ்விடயத்தில் என்ன நடைபெற வேண்டும் என பிரிட்டன் கருதுகிறது என தூதுவர் லியால் கிராண்டிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது.

தவறு செய்தவர்களுக்கு மன்னிப்பளிப்பதற்கு முடிவு காணப்பட வேண்டும் என பிரிட்டன் விரும்புகிறது. போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்ற குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாக்கப்படுவதைக்காண நாம் விரும்புகிறோம் என அவர் பதிலளித்தார்.

அணி சேரா நாடுகள் அமைப்பின் வாதத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா என ஐ.நா. பொதுச்சபையின் இவ்வருடத் தலைவரின் பேச்சாளரான லிபியாவின் அலி தெரேக்கியிடம் இன்னர் சிற்றி பிரஸ் மார்ச் 19 ஆம் திகதி கேள்வி எழுப்பியது.

அதை நீங்கள் பொதுச்செயலாளரிடமே கேட்க வேண்டும் என அவர் பதிலளித்தார். ஆனால் அணி சேரா நாடுகளின் கடிதத்தின் பிரதியொன்றைக்கூட ஊடகங்களுக்கு வழங்க ஐ.நாவுக்கான இலங்கைத் தூதரகம் மறுத்துள்ளது.

அதேவேளை ஜனாதிபதித் தேர்தலின்போது பிரதிநிதிகளை அனுப்புவதில்லை என ஐ.நா. தீர்மானித்தமைக்கு காரணம் என்னவென்று ஐ.நாவின் அதிகாரியொருவடம் இன்னர் சிற்றி பிரஸ் வினவியது.

ஐ.நா.பொதுச்சபையின் வாக்களிப்பு அல்லது ஆணை இல்லாமல் ஐ.நா. செயற்பட முடியாது என ஐ.நா. பேச்சாளர்கள் வெளிப்படையாக கூறுகின்ற போதிலும், இலங்கைக்கு 510 அதிகாரிகளை அனுப்ப ஐ.நா முன்வந்தாகவும் ஆனால் அதை இலங்கை நிராகரித்ததாகவும் மேற்படி ஐ.நா. அதிகாரி தெரிவித்தார்.

அதேவேளை சர்வதேச நாணயத்தின் இலங்கைக்கான கடனின் மூன்றாம் கட்டக் கொடுப்பனவு தொடர்பாக நாணய நிதியத்திடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. அவ்வமைப்பின் பேச்சாளர் யொ~pகோ கமாட்டா இதற்கு பதிலளிக்கையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து அமைச்சரவை அமைக்கப்பட்டவுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கொழும்புக்கு விஜயம் செய்து வரவு செலவுத் திட்ட மொன்று குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடுவர் எனக் கூறினார்.

Comments