மாயைகளின் ஆதரவுடன் களத்தில் நிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

கடந்த தேர்தலில் களமிறங்கியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கொள்கை இருந்தது. இலட்சியம் இருந்தது. உண்மை இருந்தது. மக்கள் சக்தி என்ற மகத்தான ஆதரவு இருந்தது. இந்தத் தேர்தலில் எல்லாமே இழந்து வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை மட்டுமே அவர்களிடம் எஞ்சியுள்ளது. மக்கள் ஆதரவு என்ற தளம் தகர்ந்துள்ள நிலையில், மாயைகளின் ஆதரவுடன் களத்தில் நிற்கிறது. முகவரி அற்ற அமைப்புக்களும், முகவரி இழந்த மனிதர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கித் தினமும் அறிக்கை விடும் அவல நிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உருவாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாரிஸ் புறநகர்ப் பகுதியான நத்தேர் நகரில் நடைபெறவுள்ள தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களின் பிரதிநிதிகளும் தமிழீழ மக்கள் பேரவை, நாடு கடந்த தமிழீழ அசு சார்பான பிரதிநிதிகளும் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டிலிருந்து விலகாமல் தற்போதைய தேர்தல் களத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியை ஆதரிப்பதென ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. புலம்பெயர் தமிழீழ மக்கள் தாயகக் கோட்பாட்டிலிருந்து விலகாது தொடர்ந்தும் விடுதலைப் போரை முன் நகர்த்தவதையே தமது இலட்சியமாகக் கொண்டுள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் தமிழர் பலம் சிதைக்கப்பட்ட பின்னர் தமது அவல நிலையை எண்ணி அழுவதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்காகப் பேசுவதற்கும், எழுதுவதற்கும், போராடுவதற்குமான களமாகப் புலம் பெயர் தமிழீழ மக்களே உள்ளனர். தமது உறவுகளுக்காகவும், அவர்களது எதிர்கால சுதந்திர நல்வாழ்வுக்காகவும் புலம்பெயர் நாடுகளில் புதிய பல போர்க் களங்களை உருவாக்கிப் போராடி வருகின்றார்கள். இந்தப் போராட்டங்களினூடாக அவர்கள் மேற்குலகின் சிந்தனைகளில் பலமான மாற்றங்களை உருவாக்கி வருகின்றார்கள்.

கடந்த காலங்களில் எமது மிதவாதத் தலைமைகள் தெரிவு செய்த பிழையான பாதையே எம்மை முள்ளிவாய்க்காலில் கொண்டுபோய் அழித்துப் புதைத்தது. அதே பாதையில் தப்பிப் பிழைத்திருக்கும் ஈழத் தமிழர்களை இந்தியச் சதிக்கு இரையாக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒட்டு மொத்தத் தமிழினமும் நிராகரிக்க வேண்டும் என்பதே புலம் பெயர் தமிழீழ மக்களின் நிலைப்பாடாக உள்ளது. மேற்குலகின் அழுத்தங்களுக்குள் சிக்கித் தவிக்கும் சிங்கள தேசத்தை மீட்கும் இந்தியாவின் சதி வலையில் சிக்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் ஒற்றுமையின் பெயரால் அணிதிரள்வது என்பது கூட்டுத் தற்கொலைக்குச் சமமானதாகும்.


தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள் வாக்குப் பதிவுகளில் கலந்துகொண்ட புலம்பெயர் தமிழீழ மக்களில் 99 வீதத்திற்கும் அதிகமானோர், அதன் மீதான தமது தணியாத தாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வாக்குப் பதிவின் முடிவுகள் புலம்பெயர் தேசத்து அரசுகளின் சிந்தனைகளில் மாற்றங்களை உருவாக்கியுள்ளது. இந்த மாற்றங்களை முறியடித்து, நழுவிவரும் சிறிலங்காவைப் பற்றிப் பிடிப்பதற்காக தமிழீழத்திலாவது தனது கால்களை வலுவாக ஊன்றிக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா களம் இறக்கியுள்ளது. இறுதி யுத்தத்தின்போது நிகழ்ந்ததாகப் பல்வேறு மனித உரிமைகள் அமைப்பாலும் சுமத்தப்பட்டுவரும் சிங்கள தேசத்தின்மீதான அமித உரிமை மீறல் குற்றச்சாட்டையும் இந்தியாவே இன்றுவரை முன்நின்று எதிர்த்துஇ தமிழீழ மக்களுக்கான நீதியையும் நிராகரித்து வருகின்றது.

மனிதாபிமான நீதிகூடத் ஈழத் தமிழர்களுக்குக் கிடைக்கவிடாமல் தடுக்கும் இந்தியா ஈழத் தமிழர்களுக்கு உரிய தீர்வு வழங்கும் என்ற கூட்டமைப்பின் கூட்டுச் சதியைத் தமிழீழ மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தடுக்கவேண்டியது வரலாற்றுக் கட்டாயமாக உள்ளது. எத்தனைபேர் ஒன்றாகத் தெரிவு செய்யப்படுகிறார்கள் என்பது மட்டும் அவசியமானது அல்ல. அவர்கள் எதற்காகத் தெரிவு செய்யப்படுகிறார்கள் என்பதே இன்றைய போர்க்களத்தில் முக்கியமானதாக உள்ளது.

முள்ளிவாய்க்காலில் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ மக்களின் போர்க் களம் புலம்பெயர் தமிழர்களிடம் கையளிக்கப்பட்டு முன்நகர்த்திச் செல்லப்படுகின்றது. இந்தப் போர்க்களமும் தோற்கடிக்கப்பட்டால் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் இன்னும் பல தலைமுறை காலத்திற்கு விடிவே இல்லாமல் தொடரப் போகின்றது. தமிழீழம் சிங்கள ஆக்கிரமிப்பால் முகவரி இழந்து சிதையப் போகின்றது. இந்தியா எங்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு பயணித்த நாங்கள் முள்ளிவாய்க்காலில் அழித்து முடிக்கப்பட்டோம். இத்தனை அவலங்களையும் எமக்குத் தந்த இந்தியாவின் கரம்பற்றி தங்களைமட்டும் கரைசேர்க்க முற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரிப்பதே தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்கான முதற் படியாக அமையும்.

-பாரீஸ் ஈழநாடு-

Comments