உறுதியான தமிழ்த் தேசியத் தலைமையை தெரிவு செய்யும் தேர்தல் களம்

ஒரு குறித்த நிலப் பரப்பின் மீது தனக்கு மேல் வேறொரு மேலாதிக்கமும் இன்றி, உச்ச ஆளுமையை கொண்டிருப்பதே இறைமை ஆகும்.

தமிழ் பேசும் மக்கள், தமது பூர்வீக தாயகத்தை முழுமையாக ஆளுகின்ற தார்மிக உரித்துடையவர்கள் என்பதே, தமிழ் இறைமை பற்றிய விளக்கமாகும்.

ஆகவே இரண்டு தேசங்கள் (Nச்tடிணிண) தத்தமக்கேயுரித்தான முழுமையான இறைமையை சம அந்தஸ்துடன் பேணக் கூடிய ஒரு தீர்வு முறை பற்றியே குறைந்த பட்சமாக நாம் முன் வைக்கலாம்.


தமிழ் இறைமையைச் சரணாகதியாக்காத இரு தேசங்களின் கூட்டு முறை குறித்து தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி (கூNகஊ) பேசுகின்றது.

உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் இறைமையைப் பங்கிடும் சமஷ்டி முறைமையை இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) முன்வைக்கிறது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறும் பகிரப்பட்ட இறையாண்மையூடாக அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது என்பதில் மேலதிக விளக்கங்கள் தேவைப்படுவதை உணரலாம்.

எவருடைய அல்லது எந்த தேசத்தின் இறைமையைப் பகிர்ந்து கொள்வது என்கிற கேள்வி இங்கு எழுகின்றது.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு எனும் போது சிங்கள தேசத்தின் இறைமைக்கு உட்பட்ட அதிகாரப் பகிர்வினை தமிழ்த் தேசிய இனம் பெற்றுக் கொள்ளப் போகிறதா?

அதாவது, முழு இலங்கையும் சிங்களத்தின் இறைமைக்கு உட்பட்டதென ஏற்றுக் கொண்டு அவர்கள் கொடுக்கும் அதிகாரப் பரவலாக்கல் முறைமையினை அதிகாரப் பகிர்வென்றும் சமஷ்டியென்றும் விளக்கமளிக்கப் போகிறோமா?

சமஷ்டி ஆட்சி முறையில் இறைமையானது, அரசியலமைப்பின் ஊடாக மத்திய ஆட்சி அதிகாரத்திற்கும் மாநில அல்லது மாகாணத்திற்கும் பிரிக்கப்படும். இதில் மத்திய அரசின் அனுசரணையோடுதான் இறைமை பகிரப்படும்.

ஐக்கிய இலங்கைக்குள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு முறைமையை வலியுறுத்தும் வல்லரசாளர்கள், பகிர்ந்து கொடுக்கும் அதிகாரமும் சிங்களத் தேசத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கிறார்கள்.மத்திய அரசின் இறைமை, முழு இலங்கையிலும் வியாபித்து இருக்க வேண்டும் என்பதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள்.

ஆயுதப் போராட்டத்தை அழித்திட ஒரு கோட்டில் பயணித்த இவர்கள், சிங்களத்தின் இறைமையைக் காப்பாற்றவே பயங்கரவாதக் கதைகளை தூக்கிப் பிடித்தார்கள்.

காந்தீயம், மக்கள் ஜனநாயகம் பற்றிப் போதனை செய்யும் இவ் வல்லரசாளர்கள், 1977 இல் சுதந்திர இறைமைக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை பரிசீலனைக்கும் எடுத்துக் கொள்ள மறுத்து விட்டார்கள்.

ஏனெனில், மக்கள் வழங்கும் ஜனநாயக வழிமுறையில் சொல்லப்படும் செய்திகளையும் தமது நலன் கருதி புறக்கணித்து விடுவார்கள் இந்த ஜனநாயகப் பிதாமகர்கள்.

இங்கு சிங்களத்தின் இறைமையைப் பகிர்ந்து கொள்வதோ அல்லது தமிழர் இறைமையைக் காப்பாற்றிக் கொள்வதோ என்பதல்ல பிரச்சினை.

மூன்றாம் தரப்பான இந்தியாவிடமோ அல்லது மேற்குலகத்திடமோ நாம் முறையிட்டாலும் சிங்கள தேசமானது இவற்றில் எதனையும் ஏற்றுக் கொள்ளாது என்பதே உண்மையாகும்.

உள்ளக சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட்டால் வெளியக சுய நிர்ணய உரிமை, அதாவது பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் கோரிக்கையை, இந்தியா மற்றும் மேற்குலகத்தாரிடம் முன் வைப்போமென்று தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் கூறுகின்றார்.

அதேவேளை, பல பரிமாணங்களில் சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

சாத்வீகப் போராட்டங்களின் தோல்வியே ஆயுதப் போராட்டத்திற்கு வழி சமைத்தது.

அன்று மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக வழிமுறைப் போராட்டங்களுக்கு அனைத்துலகின் ஆதரவு கிட்டவில்லை. தீர்விற்கான திறவுகோலை வைத்திருக்கும் இந்தியாவும் ஆதரவளிக்கவில்லை.

அதேவேளை, ஆயுதப் போராட்டத்திற்கு பின் தளம் வழங்கி, அனுசரணையளித்த இந்தியாவே பின்னர் சிங்கள தேசத்தின் பின்னால் இருந்தவாறு அதே ஆயுதப் போராட்டத்தை அழிக்க உதவி புரிந்தது.

ஆனாலும் முன்பு இருந்ததை விட தற்போதைய புவிசார் அரசியல் களம், முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுவதை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளித்த இந்தியாவின் துணையுடன் அப்போராட்டத்தை அழித்த சிங்கள தேசம், சீனாவையும் தனது ஆதரவுத் தளத்தினுள் புதிதாக உள்வாங்கியுள்ளது.

இந்நிலையில் சீனாவை நம்பி, மேற்குலகோடு மோதும் சிங்களதேசத்தின் புவிசார் அரசியல், சீன அமெரிக்க வர்த்தக உறவுகளில் மாற்றங்கள் நிகழும் போது, தடுமாற்றமடையலாம்.

நலனடிப்படையில் உருவாகும் சமரசம், பரஸ்பர விட்டுக் கொடுப்பு, பகிரப்படும் இராஜதந்திர நலன், (QUID PRO QUO DIPLOMACY) என்பதன் அடிப்படையில் சமகால புவிசார் அரசியல் தளம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் சீனா ரஷ்யா ஈரான் மியன்மார் சார்பு நிலைப்பாடுகள், மேற்குலக இராஜதந்திரத்திற்கு சற்று நெருடலான விவகாரமாக இருக்கிறது.

இந்நிலையில், மேற்குலகில் உருவாகி வரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் உலகத் தமிழர் பேரவை என்பன குறித்து அதிக கரிசனை கொண்டுள்ள சிங்களதேசம், அதனை எதிர்கொண்டு அதன் செயற்பாடுகளை முறியடிப்பதற்கு இந்திய மேற்குலகின் புவிசார் அரசியல் உறவினை பயன்படுத்த முயற்சிக்கிறது.

ஆனாலும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இடை நிறுத்தம், ஐ.நா. வின் நிபுணர் குழு விவகாரம், பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்டின் அறிக்கை என்பன இலங்கை குறித்தான மேற்குலகின் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றன.

ஆகவே, இந்தியாவை அரவணைத்தவாறு, மேற்குலகின் அழுத்தங்களைச் சமாளிக்கலாம் என்கிற சிங்கள தேசத்தின் தந்திரோபாயம், தொடர்ந்து வெற்றியளிக்கப் போவதில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

அதேபோன்று இந்தியாவின் ஊடாக உரிமைகளை வென்றெடுக்கலாம் என்கிற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவிர்க்க முடியாத அரசியல் இராஜதந்திரமும் பலனளிக்கப் போவதில்லை.

தாயகம் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் சமூகத்தினரிடையே அரசியல் தீர்வுக் கோட்பாடு குறித்த ஆழமான பிளவொன்று இருப்பதையே இந்தியாவும் இலங்கையும் விரும்புகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக ஈழத் தமிழ் அரசியலை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க விரும்பும் இந்தியா, புலம்பெயர் மக்களின் உறுதியான இலட்சியப் பற்றையும் தாயக விடுதலை நோக்கிய அரசியல் போராட்டங்களையும் எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகிறது.

இந்த இரு தரப்பும் இணைந்த பொதுவான தமிழ் அரசியல் தளம் உருவாகுவது தமது பிராந்திய நலனுக்கு இடையூறாக அமையுமென்பதே இந்தியாவின் கணிப்பு.

இலங்கையின் இன முரண்பாட்டுச் சிக்கலில் தமிழர் தரப்பிற்குச் சாதகமான நிலைப்பாட்டை மேற்கொண்டால் சிங்கள தேசத்தோடு பகைத்துக் கொள்ளும் நிலை உருவாகுமென்று இந்தியா அச்சமடைகிறது.

ஆகவே இலங்கையின் பூரண ஆதிபத்தியத்திற்கு உரிமை கோரும் பௌத்த சிங்களப் பேரினவாதத்தை திருப்திப்படுத்த வேண்டுமாயின், தமிழர் தரப்பை மாகாண சபைக்குள் முடக்கி சிங்களதேசம் பகிர்ந்தளிக்கும் அதிகாரமற்ற அதிகாரப் பரவலாக்கமென்கிற நிர்வாகப் பரவலாக்கத்தை ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும். இதைத்தான் தமிழ் அரசியல் தலைமைகள் மீது இந்தியா திணிக்க முற்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் திடீர் வருகையும் நிரூபமாராவ், சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் மேற்கொண்ட சந்திப்பும் கூட்டமைப்பை மாகாண அரசியலிற்குள் முடக்கும் உத்தியின் ஒரு பகுதி வெளிப்பாடுதான் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அண்மைக் காலமாக கூட்டமைப்பின் மீது வசை பாடலும் அச்சுறுத்தல்களும் அதிகரிப்பதை அவதானிக்கலாம்.

இதுவும் ஒரு வகையில் பேரினவாதத்தின் தேர்தல் கால பரப்புரை உத்தியென்று கூறலாம். அரசாங்கத் தரப்பு தெரிவித்த கூட்டமைப்பை தடை செய்ய வேண்டுமென்கிற கருத்து, சிங்கள வாக்காளர்களை திருப்திப்படுத்தவும் பிரிவினைக் கோட்பாடு இன்னமும் அழியவில்லையென்று அம் மக்களை அச்சுறுத்தவும் பயன்படும்.

அதேவேளை, எதிர்ப்பரசியல் தளத்தில் நிற்கும் தமிழ் மக்கள் மத்தியில் கூட்டமைப்பையொரு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட இயக்கமாகப் பார்க்கும் நிலையினையும் இக்கருத்து உருவாக்கிவிடும்.

ஆகவே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல், தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் அவல நிலைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடப் போவதில்லை.

அடுத்த கட்ட அரசியல் போக்கில் இந்திய இலங்கையின் கூட்டு அரசியல் ஆதிக்கம், பெரும் பங்கினை வகிக்கப் போவதை எதிர்வு கூறலாம்.

ஆனாலும் புதிய உலக ஒழுங்கு மாற்றத்தில் ஆசியாவில் ஏற்படப் போகும் இராணுவ பொருண்மிய சமநிலை மாறுதல்கள், சிங்கள தேசத்தின் புவிசார் அரசியல் நிலைப்பாட்டினை ஓர் அணிக்குள் சிக்க வைத்துவிடும்.

ஆதலால் தாயகம், தேசியம், சுய நிர்ணயம் என்கிற கோட்பாடுகளை, பேச்சளவில் உள்வாங்கியிருக்கும் தமிழர் தலைமைகள், சிங்கள இறைமையோடு சமரசம் மேற்கொள்ளும் பாதையிலேயே பயணம் செய்யலாம்.

ஏனெனில் காலத்தை தவற விட்டால் இந்தியா திறந்துவிடும், தீர்விற்கான பிரத்தியேக வாசலைத் தான் தமிழ் மக்கள் தட்ட வேண்டி வரும். அது அதிகாரமற்ற மாகாண சபைக் கதவாகவே இருக்கும்.

ஈழப் பிரகடனம் செய்த வரதராஜப் பெருமாளும் சிற்×ழியரை நியமிப்பதற்கு அரசிடம் அனுமதி வேண்டி நிற்கும் முதலமைச்சர் பிள்ளையானும் தமிழ் மக்களுக்குக் கூறும் வரலாற்றுப் பட்டறிவுச் செய்தி இது.

நலனடிப்படையில் உருவாகும் சமரசம், பரஸ்பர விட்டுக் கொடுப்பு, பகிரப்படும் இராஜதந்திர நலன், [QUID PRO QUO DIPLOMACY] என்பதன் அடிப்படையில் சமகால புவிசார் அரசியல் தளம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

நன்றி - வீரகேசரி வாரவெளியீடு
-இதயச்சந்திரன்-

Comments