தமிழின அழிப்பின் ஓராண்டு கொண்டாட்டங்களில் தமிழக சின்னத்திரையினர்

கடந்த ஆண்டு வன்னியில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய இன அழிப்பு நடவடிக்கை நடைபெற்று ஆண்டு ஒன்று நிறைவடைந்து வருகின்ற இந்த மாதத்தில் தமிழகத்தின் சினத்திரை நட்சத்திரங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்காக யாழ்ப்பாணம், வவுனியா வருகின்றனர் என்ற செய்தி தாயக மக்களை மிகக் கவலைக்குள் தள்ளியுள்ளது.

வன்னி அழிப்பின் ஓராண்டினை பாரிய விழாக்களாக ஏற்பாடு செய்து சிங்கள அரசு முன்னெடுத்துவருகின்ற நிலையில் அதன் ஒழுங்குபடுத்தலில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்படாடு செய்யப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் இந்திய திரைப்படங்களை உலக கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கோடு நடாத்தப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் (International Indian Film Academy – IIFA Awards) விழாவினையும் இலங்கையில் நடத்த சிங்கள அரசு மேற்கொண்ட முயற்சி கைகூடியுள்ளது.

ஆனாலும் அந்த நிகழ்வினை தமிழ் உணர்வுள்ள தமிழக திரைத்துறையினர் தமது நலனினை தூக்கியெறிந்து புறக்கணித்துள்ளனர். இதேபோன்று தமிழக அரசியல் தலைவர்களும் இந் நிகழ்வினை இலங்கையில் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.

ஆனால் தமிழ் மக்கள் தமது உயிர்களை பல்லாயிரக்கணக்கில் பறிகொடுத்த வடக்கு மண்ணில் அந்த பலி கொடுப்பின் ஓராண்டு நிறைவு நடக்கும் அதே மாதத்தில் சிங்கள அரசு மேற்கொள்ளும் கேளிக்கை நிகழ்வில் பங்குகொள்ள தாய்த் தமிழகத்தில் இருந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் படை எடுத்திருப்பது தாயக மக்கள் மனங்களில் வேதனையைத் தோற்றுவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்களுக்கும், திரைத்துறையினருக்கும் தெரியாமலேயே இந்தநிகழ்வில் பங்கெடுக்க சின்னத்திரையினர் இலங்கை வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து தமிழகத்தின் தமிழ் உணர்வாளர்களும், திரைத்துறையினரும் தலையிட்டு உடனடியாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள சின்னத்திரையினரை தடுத்து நிறுத்தி ஆவன செய்வதுடன், இலங்கைத் தமிழர்களின் வலி சுமந்த மாதமாக நினைவுகூரவுள்ள மே மாதத்தில் அவர்களின் வேதனையிலும் பங்குகொள்ள முன்வருவார்களா?

Comments