சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் செல்கின்றதா நாடு கடந்த தமிழீழ அரசு?

''சிங்கள தேசத்தின் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மீதான வெற்றிக் கொண்டாட்டங்களைத் தோற்கடித்துவிட்டோம். சிங்கள அரசின் புலம்பெயர் தமிழர்கள் மீதான பிரித்தாளும் சதியை முறியடித்துவிட்டோம்!'' என்று இறுமாந்திருந்த புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கை மீது இடி இறங்கியுள்ளது.

'நாடு கடந்த தமிழீழ அரசு' என்ற ஈழத் தமிழர்களின் இறுதி நம்பிக்கையும் தகர்க்கப்பட்டு விடுமோ என்ற அச்சமே புலம்பெயர் தமிழர்களின் மனங்களை ஆக்கிரமித்துள்ளது. சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் செல்கின்றதா ''நாடு கடந்த தமிழீழ அரசு''? சந்தேகமும் அவர்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

பிரான்சில் நடந்து முடிந்த நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் முடிவுகளும், அதன் பின்னர் நேற்று, புதன்கிழமை அறிவிக்கப்பட்ட இரு தொகுதிகளுக்கான தேர்தல் இரத்து முடிவுகளும் பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்களது மனங்களில் மீண்டும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கள தேசத்தின் புதிய வெளிவிவகார அமைச்சர் 'நாடு கடந்த தமிழீழ அரசை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவோம். அதற்கான அறிவுறுத்தல்கள் எமது தூதுவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது' என்ற அறிவித்தலை வெளியிட்ட பின்னணியில், இந்த அதிர்ச்சியான முடிவும் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் ஆணையகத்தால் பாரிஸ் புறநகர்ப் பகுதியான 92, 93 ஆகிய இரு மாகாணங்களிலும் வாக்குப் பதிவுகளில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறியே இந்த இரு தேர்தல் முடிவுகளும் இரத்துச் செய்யப்படுவதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்த இரு தேர்தல் தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றவர்கள் இருவருமே சாதாரணமானவர்கள் அல்ல. முள்ளிவாய்க்கால் போர்க்களத்தில் முன்னின்று பாடுபட்டு, பிரஞ்சு அரச தரப்பின் ஆலோசனையோடு 'மக்கள் பேரவை' என்ற ஜனநாயக அமைப்பை உருவாக்கி, இன்றுவரை பிரஞ்சு அரசியல், சமூக தளங்களிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அசைவியக்கங்களை உருவாக்கிக்கொண்டு இருப்பவர்களில் இவர்களது பங்கு முக்கியமானது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் உடைந்து சோர்ந்து போகாமல், பிரான்சில் வாழும் ஈழத் தமிழர்களை அணி திரட்டிப் பல போராட்டங்களையும், எழுச்சி நிகழ்ச்சிகளையும் நடாத்தி விடுதலைத தீ அணைந்து போகாமல் பாதுகாத்தவர்கள். விடுதலைப் புலிகள் மீது பயங்கரவாத முத்திரையைக் குத்தி, அவர்களைத் தீண்டத்தகாதவர்களாக, அவர்களது நியாயங்களைக் கேட்க மறுத்த மேற்குலகில், 'விடுதலைப் புலிகள் உருவாகுவதற்கு முன்னதாகவே 1977 இல் தமிழீழ மக்கள் 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மூலமாகத் தமது அரசியல் அபிலாசையினைத் தெளிவாக ஜனநாயக முறைப்படி தெரிவித்துள்ளார்கள்' என்று அடித்துக் கூறி, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள் வாக்களிப்பை பிரான்சில் நடாத்தி 32,000 தமிழ் மக்களை அதற்கு ஆதரவாக வாக்களிக்க வைத்து சாதனை படைத்தவர்கள்.

இவர்கள் இருவரது தெரிவுகளில்தான் பிரச்சினை உருவாக்கப்பட்டு, மறு தேர்தல் நடாத்த இருப்பதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. கடந்த 02 ஆம் திகதி நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்றது. அந்தத் தேர்தல் முடிவு அன்றிரவு அறிவிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், மறு நாள் விடியற்காலை 2.00 மணிக்கே அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பையும் தேர்தல் ஆணையகமே வெளியிட்டது.

அப்போது, எந்தவித சந்தேகமும் தேர்தல் ஆணையகத்தால் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. அதற்கு மாறாக, புதன்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த உறுப்பினர்கள் மத்தியிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது வழமையான நடவடிக்கையாக இருக்கவில்லை.

அதிலும் குறிப்பாக, தேர்தல் ஆணையகத்தை உருவாக்கவும், கட்டுப்படுத்தவும் நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பாளர் திரு. உருத்திரகுமாரன் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்த திரு. வேலும்மயிலும் மனோகரன் அவர்களால் எதிரிகளாகக் கருதப்பட்ட இரு மக்கள் செயற்பாட்டாளர்களே இவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தேர்தல் நடாத்தப்பட்ட அத்தனை வாக்குச் சாவடிகளுக்கும் பொறுப்பானவர்கள் தேர்தல் ஆணையகத்தினாலேயே நியமிக்கப்பட்டிருந்தார்கள். அந்தந்தத் தேர்தல் வாக்குச் சாவடிகளின் பொறுப்பாளர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே தேர்தல் முடிவுகளும் ஏற்று அறிவிக்கப்பட்டது. ஏதாவதொரு வாக்குச் சாவடியில் முறையேடு நடந்ததாக சாவடிக்குப் பொறுப்பானவர் அறிவிப்பதாயின் முடிவுகள் தெரிவிப்பதற்கு முன்பாக மட்டுமே தெரிவித்திருக்க வேண்டும்.

அப்படியான தவறுகள் பொறுப்பாளரால் தெரிவிக்கப்படாதவிடத்து, அந்த முறைகேடுகளுக்கான தார்மீகப் பொறுப்பை, அந்தப் பொறுப்பாளரை நியமித்த தேர்தல் ஆணையகமே ஏற்றுக் கொள்ள வேண்டுமே அல்லாமல், அந்தப் பழியை வேட்பாளர்கள் மீது சுமத்தி, அவர்களை அவமானப்படுத்துவதில் எந்த நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

2007 ஏப்ரல் 01 ஆம் திகதி பிரஞ்சு காவல்துறையினரால் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு முற்றுகையிடப்பட்டு, அதன் பணியாளர்கள் கைது செய்யப்பட்டபோது பிரஞ்சுத் தமிழ் மக்கள் திகைத்துப்போய் நின்றார்கள். சட்டத்தின் பார்வை தங்கள்மேலும் பாய்ந்து விடுமோ என்ற அச்சத்தில், அதுவரை செயற்பட்டு வந்த அத்தனை பேரும் ஓடி ஒழித்துக்கொள்ள, அந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை மீண்டும் செயற்பட வைத்து, பிரஞ்சுத் தமிழ் மக்களுக்கான ஆதரவுத் தளத்தை நிமிர்த்திய பெருமைக்குரியவர்களில் திரு. திருச்சோதி திருக்குலசிங்கம், செல்வி சக்திதாசன் கிருஷாந்தி (சாளினி) ஆகிய இருவரும் முக்கியமானவர்கள்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் மக்கள் மத்தியில் முகம் காட்ட மறுத்தவர்களும், மக்களுக்காகப் போராட மறுத்தவர்களும் போட்டியிட்ட நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் களத்தில் மக்களுக்கான போராளிகளாகச் செயற்பட்டவர்கள் பெற்ற வெற்றி, தேர்தல் ஆணையகம் என்ற பெயரில் முறியடிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ மண்ணில் விடுதலைப் புலிகளது ஆயுதப் போராட்டத்தை முறியடித்த சிங்கள தேசம் புலம்பெயர் மக்கள் பலத்தைச் சிதைப்பதிலேயே குறியாக உள்ளது.

- அகத்தியன்

நன்றி: ஈழமுரசு (07/05/2010)

Comments