"அகதி ஊத்தைகளே வெளியேறுங்கள்" பாடசாலைகள்-நிகழ்வினை விபரிக்கிறார் அதிபர்

வவுனியாவின் ஏழு முன்னணிப் பாடசாலைகள் 'வன்னியின் ஊத்தைகளே வெளியேறுங்கள்' எனக் கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிகழ்வினை விபரிக்கிறார் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கென வவுனியாவின் காமினி மகாவித்தியலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இணைந்த பாடசாலையின் அதிபர் திரு. ரங்கநாதன் அவர்கள்.











முழுவிபரம் :

சமாதான காலத்தில் செழிப்புற்றிருந்த வன்னி மாணவர்களின் கல்வி 2006ம் ஆண்டில் போர் மீண்டும் மூண்டபோது சீர்குலையத் தொடங்கியது. நாளுக்கு நாள் இடம்பெயர்வுகளைச் சந்தித்து, பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்தவர்கள், உடன் பிறந்த சகோதர, சகோதரியரை இழந்தவர்கள், ஏன் போரின் கொடூரப் பிடிக்குள் சிக்கித் தங்களது அங்கங்களை இழந்தவர்கள் என பலதரப்பட்டோர் வன்னி மாணவர்களாக உள்ளனர். இறுதிப் போரின் பின்னர் இடம்பெயர்ந்த மக்களுள் இருந்த 73,496 மாணவர்கள் ஆரம்பத்தில் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பாடசாலைகளில் கல்வியைத் தொடர்ந்தனர். இவர்களிடத்தே இரண்டு பிரதான பிரச்சினைகள் வேரூன்றிக் காணப்பட்டன.

போர் தந்த இழப்பினால் ஏற்பட்ட மன அழுத்தம் ஒருபுறமும் தங்களது கல்வியினைச் சரியாகத் தொடரமுடியாத வளப் பற்றாக்குறை மறுபுறமுமாக இவர்களது வினைத்திறன் மிக்க கல்வி கேள்விக் குறியாகி நிற்கிறது. மனதை ஒருநிலைப்படுத்திக் கல்வியைத் தொடரமுடியாத நிலையிலே இந்த மாணவர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் இடம்பெயர்ந்தோர் முகாம்களிலிருந்து மக்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டனர். முகாம்களிலிருந்து வெளியேறிய குடும்பங்கள் பலர் வவுனியா நகரத்தினை அண்டியுள்ள சிறு கிராமங்கள் மற்றும் நகரங்களிலுள்ள உறவினர் மற்றும் நண்பர்களது வீடுகளில் வசித்து வருகிறார்கள்.

தாம் வசிக்கும் பகுதிகளுக்கு அருகாகவுள்ள வவுனியா தமிழ் மகாவித்தியாலயம், சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி, இரம்பைக்குளம் மகளிர் கல்லூரி, விபுலனாந்தக் கல்லூரி உள்ளிட்ட நகரின் முதன்மையான பாடசாலைகளுக்கே வவுனியா நகரத்தினை அண்டிய பகுதிகளில் குடியேறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சென்றுவந்தார்கள். இவ்வாறு வவுனியா நகரப் பாடசாலைக்கு வரும் இடம்பெயர்ந்த மாணவர்களது தொகை அதிகரித்ததையடுத்து குறித்த இந்தப் பாடசாலைகளில் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கென மாலை நேரப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது வவுனியா தெற்குவலயக் கல்விப் பணிப்பாளராக இருந்த திருமதி வீ.ஆர்.எஸ் ஓஸ்வேள்ட் அவர்களே இதற்கான உத்தரவினை வழங்கியிருந்தார்.

வவுனியாவின் இந்த முன்னணிப் பாடசாலைகளில் காலை நேரப் பாடசாலையில் சேரவேண்டுமெனில் உதவித் தொகையாக 5000 ரூபா கட்டவேண்டும் என அதிபர்கள் கோரியிருக்கிறார்கள். அப்படி என்றால் அகதி மாணவர்களை ஓரம் கட்ட இது ஒரு நடைமுறையாக்கப்பட்டது. தனது பாடசாலையில் 'அகதி வாசமே வீசக்கூடாது' என வெளிப்படையாக ஒரு அதிபர் கூறி மாணவர்களது மனங்களைப் புண்படுத்தித் திரும்பியனுப்பிய சம்பவம் ஒன்றும் நிகழ்ந்தேறியது.

இது இவ்வாறிருக்க கடந்த பெப்பிரவரி 16ம் திகதி முதல் இடம்பெயர்ந்த மாணவர்கள் எவரும் வவுனியா நகரப் பாடசாலைகளுக்கு வரக்கூடாது என்றும் அவர்கள் காமினி மகாவித்தியாலயத்திற்கே செல்லவேண்டும் என்றும் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனை அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த மாணவர்களைக் கழுத்தில் பிடித்துத் தள்ளாத குறையாக குறிப்பிட்ட பாடசாலைகளின் அதிபர்கள் வெளியேற்றினர். இவ்வறிவித்தல் எப்போது வரும் என்று காத்திருந்தது போல, மாணவர்களை அவசரமாக வெளியேற்றினர் அதிபர்கள்.

அடிக்குமேல் அடிவாங்கி இழப்பதற்கு இனி ஏதுமில்லை என்ற நிலையில் தங்களின் ஒரே சொத்தாகக் கருதும் கல்வியினைத் தொடர்வதற்காக ஆவலுடன் காத்திருந்த வன்னி மாணவர்களுக்குப் பேரிடியாக இந்தச் சம்பவம் அமைந்தது. வன்னி மாணவர்கள் சிறந்த பெறு பேற்றைப் பெறுமிடத்து, வெட்டுப்புள்ளி அடிப்படையில், அது வவுனியா மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பினைப் பாதித்துவிடும் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனை ஊழியர்கள் தம்மிடையே தாம் பேசிக்கொண்டார்களாம்.

தமக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியினை எதிர்த்து இடம்பெயர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் வன்னி மாணவர்களை வெளியேற்றுவது என்ற முடிவினை எடுத்த வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனையின் முன்னால் திரண்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தமை யாவரும் அறிந்ததே. ஆனாலும் இப் பிரச்சனை இவ்வளவு தூரம் விளக்கப்படவில்லை. காமினி மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட இணைந்த பாடசாலையில் ஆரம்பத்தில் 3500 மாணவர்கள் வரையில் கல்வி கற்று வந்தார்கள். எந்தவிதமான வளங்களுமற்ற நிலையில் தாங்கள் அகதிப் பிள்ளைகளே என்பதை நினைவுபடுத்தும் வகையிலேயே இந்த இணைந்த பாடசாலை தரப்பாள் கொட்டில்களிலும், மர நிழல்களின் கீழும் தற்போதும் இயங்கிவருகிறது.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு மாத்திரம் காமினி சிங்கள மகாவித்தியலயத்தின் சிங்கள அதிபர் ஒரு மண்டபத்தை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார். அவருக்கு இருக்கும் கரிசனை கூட தமிழ் அதிபர்களுக்கு இல்லாது போனது எப்படி ? 'அகதி ஊத்தைகளே வெளியேறுங்கள்' என்றும் 'அகதி வாசமே வீசக்கூடாது' என்றும் வன்னி மாணவர்களை துரத்தித் தெருவில்விட்ட வவுனியாவின் முன்னணித் தமிழ் பாடசாலைகளின் அதிபர்களை விட இந்தச் சிங்கள அதிபர் எவ்வளவோ மேல் என ஆசிரியர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

இது இவ்வாறிருக்க தற்போது மீள்குடியேற்றம் இடம்பெற்றுவரும் நிலையில் பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்புகின்ற போதும் காமினி இணைந்த பாடசாலையில் மாணவர் தொகை பெரிதாகக் குறையவில்லை. தற்போது 2500 வரையிலான மாணவர்கள் இங்கு கல்வி கற்று வருகிறார்கள். இவர்களுள் பெற்றோரையும் தங்களது உடல் அவயவங்களையும் இழந்த 84 மாணவர்கள் உள்ளார்கள். மீள்குடியேற்றப் பதிவினை மேற்கொள்வதற்காக தங்களது ஊர்களுக்குக் குடும்பத்துடன் செல்லும் மாணவர்கள் ஓரிரு நாட்களுக்குள்ளேயே வவுனியா திரும்பிவிடுகிறார்கள்.

குறிப்பாக உயர் கல்வியினைக் கற்கும் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் மீள்குடியேறிய பகுதிகளில் இல்லாமையினாலும் இராணுவப் பிரசன்னம் அதிகரித்திருக்கும் வன்னிப் பகுதியில் பெற்றோர்கள் வயதுக்குவந்த பெண் பிள்ளைகளை வைத்திருக்க அஞ்சுவதாலும் இந்த மாணவர்கள் மீண்டும் வவுனியா திரும்பி, காமினி இணைந்த பாடசாலையில் தங்களது கல்வியைத் தொடர்கிறார்கள். காமினி மாகவித்தியாலயத்தில் மன அழுத்தத்திற்கு உள்ளாகிய நிலையில் தங்களது கல்வியினைத் தொடரும் மாணவர்கள் ஏக்கத்துடனும் தவிப்புடனேயே இருப்பதாகவும் வவுனியா நகரில் தீடீர் தீடீரெனப் பொழிந்துவரும் மழையின் காரணமாக வகுப்பறை என்ற தறப்பாள் கொட்டில்களின் கீழே தண்ணீர் ஓடிக்கொண்டிருக்க அதற்குள் இருந்தவாறே மாணவர்கள் கல்வியைத் தொடர்வதாக அதிபர் ரங்கநாதன் கண்ணீருடன் கூறுகிறார்.

ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் தனது கணவன் அல்லது மனைவி தடுப்பில், பிள்ளைகளைக் கவனிக்க எவருமற்ற நிலையின் மத்தியில், போர் தந்த கொடிய நினைவுகளாலும் சொந்தங்களும் உறவுகளும் திக்கொன்று திசைக்கொன்றாய் சிதறிக் கிடப்பதனாலும் அவர்களும் மன அழுத்தங்களுக்கு உள்ளானவர்களாகவே தங்களது கற்பித்தல் செயற்பாடுகளைத் தொடர்கிறார்கள். தங்களது அங்கங்களையும் உறவுகளையும் இழந்து கல்வி என்ற சொத்தினைப் பெறுவதற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் இந்த மாணவர்களுக்கு புலம்பெயர் வாழ் தமிழர்கள் நேசக்கரம் நீட்டவேண்டும் என்கிறார் அதிபர் ரங்கன்.

நாம் எல்லாரும் தமிழர்கள் தானா ? வெட்கி நாணும் வகையில் அல்லவா எமது இனம் உள்ளது. கல்வியில் கூடாவா பாகுபாடு, மாணவர்களைக் கூடவா பிரித்துப்பார்க்கும் பழக்கம்? ஏன் இந்த ஏற்றத்தாழ்வு ? புலம் பெயர் தமிழர்களே நாம் எவ்வளவு பணத்தை வீண் விரையம் செய்கிறோம். வன்னியில் கற்று முன்னேறத் துடிக்கும் இம் மாணவர்களுக்கு நாம் ஏன் உதவக்கூடாது ? ஒரு கணம் சிந்தியுங்கள். உங்கள் நேசக்கரங்களை நீட்டுங்கள். புலம்பெயர் தமிழர்கள் நினைத்தால் சாதிக்கமுடியாது ஒன்றும் இல்லை.

நேசக்கரம் என்னும் அமைப்பு இம் மாணவர்களுக்கு உதவி வருகிறது அவர்கள் ஊடாக தமிழர்களே உங்கள் உதவிகளை நீங்கள் செய்யமுடியும்.

நேசக்கரத்தை தொடர்புகொள்ள இங்கு அழுத்தவும்.









Comments